Sunday, August 30, 2009

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு...

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு அஞ்சலோட்டத்தின் கோல் இப்போது என்வசம்.ஓடுவமோ வேண்டாமோ, ஓடினால் வெல்லுறது சந்தேகம் தான். இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில்  பங்குபற்றுதல்தான் முக்கியம். வெற்றி தோல்வியல்ல (என்னைப் போல ஏலாவாளியள் சொல்லுற சாட்டு) என்பதற்காகவும் என்னிடமிருந்து கோலைப் பெற்று மறுகரையில் ஓடுவதற்கு தயாராகக் காத்திருக்கின்ற நண்பர்களுக்காகவும் நான் ஓட வேண்டிய நிலை. மு.மயூரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு வந்தியண்ணாவால் தொடரப்பட்டு கீத்தினால் என்னிடம் தரப்பட்டிருக்கிறது. பள்ளிக்காலத்தில் கீத்தும் நானும் ஒரே இல்லமாக இருந்தாலும் என்னிடம் ஒரு நாளும் கீத் அஞ்சலோட்டக் கோலைக் கொண்டு வந்து தந்ததில்லை. (நான் அஞ்சலோட்டம் ஓடினால்தானே என்னிடம் கோலைத் தாறதுக்கு) 
வலைப்பதிவில மாட்டுப்பட்டுப் போனன். இது என்னுடைய இருபத்தைந்தாவது பதிவு (எதிர்பாராத நிகழ்வு). இதில் என்னைப் பதிவுலகிற்கு அழைத்து வந்தவர்களை மீட்டிப் பார்ப்பதில் மிகவும் சந்தோசமே.

விதி முறைகள்.

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.
2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும்.
3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

நான் எழுத வந்த கதை

முதன்முதல் வலைப்பதிவுகளைப் பற்றியும் தன்னுடைய வலைப்பதிவைப் பற்றியும் என்னுடன் கலந்துரையாடி என்னையும் எழுதச் சொல்லிக் கேட்டவன் விமலாதித்தன். (அவனுடைய வலைப்பதிவு  முகவரியைத் தொலைத்தது சோகக்கதை). அப்போது நான் எழுதும் எண்ணம் துளியும் கொண்டிருக்கவில்லை. மூஞ்சிப் புத்தகத்தில (face book) ஆதிரை அண்ணா வலைப்பதிவுகளின் இணைப்புகளைக் கொடுப்பார். தன்னுடையது மட்டுமன்றி சிறந்த வலைப்பதிவுகளையும் இணைப்பார். அதேபோல மூஞ்சிப் புத்தகத்தில் எனக்கு நண்பர்களாக இருக்கின்ற கீத், சுபானு, நிமல், பனையூரான், பிரவீன் மற்றும் விமலாதித்தன் ஆகியோரும் இணைப்புக் கொடுத்திருப்பார்கள். அவற்றை மட்டும் வாசிப்பேன். தேடித்தேடி வாசிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை. நான் அவ்வளவு சோம்பேறி (பால்குடி தானே).

இவர்களின் பதிவுகளால் கவரப்பட்டு நானும் ஒண்டு தொடங்கினா என்ன எண்டு நினைத்தேன். அந்த நினைப்பு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல்.(சுபானு என்னுடைய பயணக்கட்டுரை ஒன்றை வெளியிடுவது பற்றி கதைத்தபோது தோன்றிய நப்பாசை). ஆனாலும் என்னுடைய சோம்பேறித்தனத்தால் மிக அண்மையிலேயே ஆரம்பிக்க முடிந்தது. ஆரம்பித்தாலும் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை- பதிவர் சந்திப்பு நடக்கும் வரை.
அண்ணன் ஆதிரையின் தொலைபேசி அழைப்புக்கு நானும் வாறன் என்று பதில் சொல்லி சந்திப்பு ஏற்பாடுகள் பற்றி கதைக்க ஒன்று கூடினோம்.  நீண்டகாலமாக பதிவுலகை ஆண்டு வரும் வந்தியத்தேவன் அண்ணாவையும் பதிவால் மட்டுமல்ல கு்ரலாலும் அனைவரையும் கவர்ந்த லோஷன் அண்ணாவையும் சதீஷையும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் முதற்சந்திப்பிலேயே முன்பின் தெரிந்தவர்கள் போல என்னுடன் பழகிக்கொண்டார்கள். பிறகென்ன பதிவர் சந்திப்பில பலரைச் சந்தித்தேன். எல்லோருமே இயல்பாகப் பழகினார்கள். எண்ணிக்கையைப் பார்த்து நான் வியந்து போனேன். தொடர்ந்து முடிந்தளவு எழுதலாம் என நினைக்கிறேன். இருந்தாலும் என்னுடைய பதிவுகள் பெரும்பாலும் நினைவு மீட்டல்களாகவோ அல்லது எமது சமூகம் சார்ந்தவையாகத்தான் இருக்கும். (வந்தியண்ணா தான் நொந்த கதையைச் சொன்ன பின்னரும் நான் மாறுவதாக இல்லை). எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்று சொல்வதைவிட கிடைக்கும் நேரத்தில் பெரும்பகுதியை நண்பர்களுடன் கூடி அரட்டையடிப்பதிலேயே செலவிடுகிறேன் (இதற்காகவே செந்தில் குடும்பத்தார் வீட்டின் ஒரு பகுதியையும் வெள்ளவத்தைக் கடற்கரை ஒரு பகுதியையும் ஒதுக்கித் தந்தது வேறு விடயம்). இனி வரும் காலங்களில் நிறைய பதிவிடலாம் என்றே நம்புகிறேன்.

எனக்கு வலைப்பதிவு ஆரம்பிப்பதில் பெருமளவு சிக்கல் இருக்கவில்லை. ஆதிரை அண்ணாவின் ஆலோசனைகளுடனும் (என்னுடைய வலைப்பூவின் முதல் கருத்துரையும் அவருடையதே) சுபானு நிமலின் ஆலோசனைகளுடனும் இலகுவில் ஆரம்பிக்க முடிந்தது. நான் தட்டச்ச NHM Writer இன் Phonetic முறையைப் பயன்படுத்தி வருகிறேன்(விமலாதித்தனின் அறிமுகத்தினால்). தமிழ் எழுத்துக்களை நன்கு தெரிந்து வைத்திருப்பதால் வேகமாகத் தட்டச்சு செய்ய இம்முறை பயன்படுவதாகக் கருதுகிறேன்.

என்னுடைய அழைப்புகள்.

அதிகம் எழுதாத என்னை பதிவுலகின் அனுபவம் மிக்க கீத் நட்புடன் அழைத்திருப்பது என்னை ஊக்குவிப்பதற்க்காக என்றே நான் கருதுகிறேன். அதே போல நானும் என்னுடைய நண்பர்களை அழைப்பதன் மூலம் அவர்களை மேலும் எழுதத் தூண்டலாம் என்றே நம்புகிறேன். அதனால் எல்லோர் மத்தியிலும் பிரபல்யமான பெரியவர்களை (நண்பர்கள் பிரவீன், நிமல் உட்பட) அழைக்கவில்லை (அனைவரும் என்கருத்தை புரிந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்). 

விமலாதித்தன்: முதன் முதல் வலைப்பதிவைப் பற்றி என்னுடன் கலந்துரையாடியவன். நிறையப் புத்தகங்கள் வாசித்தறிந்தவன். சிறந்த விவாதப் பேச்சாளனும் கூட. ஊரில் என் பக்கத்து வீட்டுக்காரன்.  தவிர்க்க முடியாத, தமிழனுக்கேயுரித்தான போர்ச்சூழ்நிலையால் நாம் சின்னஞ்சிறு வயது முதலே பிரிந்திருந்தாலும் இன்றும் எம்முடன் உறவு கொண்டாடுபவன். இந்தச் சந்தர்ப்பத்தில் மூஞ்சிப்புத்தகத்தில் இவன் பிரசுரிக்கும் தொடர்கதைகளை வலைப்பதிவிலும் பிரசுரிக்க வேண்டும் என நட்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

பனையூரான் : இவன் என்னுடன் ஒன்றாகப் படித்தவன். நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். தற்போது அவன் வசிக்கும் சூழல் தமிழுக்குப் பொருத்தமற்றதாக இருப்பினும் தமிழிலில் எழுதி தமிழை வளர்க்க வேண்டும் என்ற துடிப்புள்ளவன். எனக்கு திரட்டிகள் பற்றிய ஆலோசனை தந்தவன்.

சுபானு: இவனைப்பற்றி என்னைவிட வலைப்பதிவர்களுக்கு நன்றாகத் தெரியும். பதிவுலகில் பிரபல்யமானவன். இவனும் என்னுடன் படித்தவன். ஊஞ்சல் கட்டி அனைவரையும் ஆட வைத்துக்கொண்டிருப்பவன். சில வேளைகளில் தூதும் விடுகிறான். படிக்கும் காலங்களில் இவனுடன் இடைக்கிடை கருத்து மோதல்களில் ஈடுபட்டதும் உண்டு. எல்லோரினதும் செல்லப்பிள்ளை இவன்.

யசீர் நிஷார்தீன்
: குட்டிச் சுட்டிப் பயல். நானெல்லாம் கணனியைக் கண்டது பதினாறு வயதில- அதுவும் யாழ் பல்கலைக்கழக கண்காட்சியில. பாவிக்கத் தொடங்கியது உயர்தரத்துக்குப் பிறகு. ஆனால் ஆறாம் தரத்திலேயே வலைப்பதிவை மேற்கொள்வதனால் என்னைக் கவர்ந்த இந்த சிறுவனை, பால்குடி நான் அழைக்கிறேன்.

அப்பாடா ஒரு மாதிரி அஞ்சல் கோலை கை மாற்றியாயிற்று.எங்கே உங்கள் கதையை எழுதத் தொடங்குங்கள்.



Saturday, August 29, 2009

தண்டனை

அப்ப நான் ஏழாம் வகுப்புப் படிச்சுக் கொண்டிருந்தனான் எண்டு நினைக்கிறன். பள்ளிக்கூட தவணைச் சோதினைக்கு இன்னும் ஒரு கிழமையே இருந்தது. பின்னேரம் தனியார் கல்வி நிறுவனம் ஒண்டில படிச்சுப் போட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தன். என்னோட கூட என்ர வகுப்புப் பொடியளும் வந்தவங்கள். ஒருத்தன் நேற்று விளையாடின பேணியும் பந்தும்(எங்கட ஊரில சின்னப் பொடியள் மத்தியில பிரபல்யமான விளையாட்டுக்களில் ஒன்று- விளையாட்டைபற்றி விளங்கப்படுத்த வேணும் எண்டா இன்னுமொரு பதிவு போடோணும்)  பற்றி சொல்லிக் கொண்டு வந்தான். இண்டைக்கும் அதுதான் விளையாடுறது எண்டான். எனக்கு ஒரு ஆசை துளிர்விட்டது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் பேணியும் பந்தும் விளையாடுவதற்காக நானும் நண்பர்களோட எங்கட ஊரின்ர வயல் வெளியில (நெல் விதைக்காத காலங்களில வயல் வெளியெல்லாம் எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள தான்).

விளையாட்டு நல்லாத்தான் போய்க் கொண்டிருந்தது, பக்கத்து வீதியால அப்பா போகுமட்டும். அப்பா  சைக்கிள்ல (துவிச்சக்கரவண்டி) போய்க் கொண்டிருந்தார். பொடியள் சும்மா இருந்தாங்களோ? என்ர பெயரைச் சொல்லிக் கத்தினாங்கள். மைதானத்தில ஓட்டப் போட்டியில ஓடுற ஒருத்தனையோ இல்லை மேடையில முதற்பரிசு வாங்கிற ஒருத்தனின் பெயரைச் சொல்லி இந்தளவுக்கு கத்தியிருக்க மாட்டாங்கள். அப்பாவை நான் பார்த்தேன் அவர் எங்களைப் பார்க்கவில்லை, நான் அதில இருக்கிறனோ எண்டு தேடவில்லை. அவருடைய கண்பார்வைக்குக் கிட்ட இருந்த ஒரு பொடியனைப் பார்த்துக் கொண்டு ஒரு சின்னப் புன்னகையுடன் தாண்டினார். என்ர வகுப்புப் பொடியள்தான் எண்டதைக் கண்டு கொண்டார். வீட்டுப் பக்கம் தான் போறார். என்னுடைய கையிலிருந்த பேணி கீழே விழுந்தது. சைக்கிளை நோக்கி ஓடினேன். என்ர பொடியள் செய்த கைங்கரியத்தால விளையாட்டைப் பாதியிலேயே நிப்பாட்டி விட்டு வீட்டை ஓடினேன். சோதினை வருதெண்டா மைதானப்பக்கம் தலை காட்டக்கூடாது எண்ட கட்டுப்பாடு எங்கட வீட்டில. இல்லாட்டி விளையாடிப் போட்டு களைச்சு வேத்து வந்து சாப்பிடுறதும் படுக்கிறதும் தான் வேலை. படிக்கிறதில்லை.

அப்பத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்ச அப்பா நான் அவசரப்பட்டு நுழைஞ்சபோது சொன்னார்.
‘வயல்ல நிண்டனி போல கிடந்துது.’
‘இல்லை... சும்மா... அப்பத்தான்...’ வார்த்தைகள் தடுமாறின.
‘உன்ர பொடியன், சோதினை வருதெண்ட நினைப்பில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறான்.’ அம்மாவுக்குச் சொல்லப்பட்டது.
‘சோதினைக்குப் படிக்கோணும் எண்டதுக்காகப் பூக்கண்டுக்குத் தண்ணி ஊத்துறதையும் நிப்பாட்டி விட பொடியன்ர கூத்தைப் பாத்தியோ. பூக்கண்டு கிடந்து வாடுது. நாளைக்கு காலம பள்ளிக்கூடம் போக முன்னம் நீ இருபது குடம் தண்ணி பூக்கண்டுகளுக்கு ஊத்தோணும். அப்பத்தான் நீ திருந்துவாய்.’

அடி விழாதது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஒரு வேளை தான் கண்ட உடன விளையாட்டை விட்டுட்டு வந்திட்டன் எண்டதில திருப்தியோ அல்லது முன்னம் ஒருக்கா தன் முழுப் பலத்தையும் சேர்த்து எனக்கு அடிச்சதில ஏற்பட்ட மனக்கசப்பான சம்பவங்களோ தெரியாது. (இதைப் பற்றி பிறகு சொல்லுறன்). அந்தக் காலத்தில ஊரில கிணத்திலதான் தண்ணியெடுக்கோணும். அடுத்தநாள் காலம வெள்ளனவே எழுப்பப்பட்டேன். தண்ணியூத்த வேணுமெல்லோ... ம்ம்ம் அதிகாலையில எழும்பிறதெண்டா இண்டைக்கும் எனக்கு சீவன் போற மாரி கஷ்டமான காரியம். எழும்பி குடத்தையும் தூக்கிக் கொண்டு போனன். கிணத்தில கப்பியால தண்ணி அள்ளிக் கொண்டு போய் ஏறக்குறைய எழுபத்தஞ்சு மீற்றர் தூரத்துல இருக்கிற பூக்கண்டுகளுக்குத் தண்ணி ஊத்தவேணும். முதல் ரண்டு குடம் தண்ணி நானே கிணத்தில அள்ளிக் கொண்டு போய் ஊத்தினன். மூண்டாம் முறைக்குத் தண்ணியெடுக்க வர கிணத்தடியில அப்பா. நான் தண்ணியள்ளி ஊத்திறன் நீ கொண்டு போய் பூக்கண்டுக்கு ஊத்து. எனக்கு தண்டனையும் கிடைச்சுது. பூக்கண்டுகளும் செழிச்சு வளந்திச்சுது.

Thursday, August 27, 2009

நினைச்சுப் பாக்கிறன்

நினைச்சுப் பார்க்கிறன் என்னும் என்னுடைய வலைப்பூவின் இந்தப் பகுதியூடாக என்னுடைய சில நினைவுகளை மீட்டி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். உண்மையைச் சொல்லவேணும் எண்டா பள்ளிக்காலத்திலிருந்தான நண்பன் கீத் குமாரசாமியின் பதிவுகளால் ஈர்க்கப்பட்டுத்தான் இந்தப் பகுதியை ஆரம்பித்திருக்கிறேன். தன்னுடைய வாழ்க்கையை, தான் சந்தித்த சவால்களை பகிர்ந்து கொள்ளுவதில் கீத் வெற்றி கண்டிருக்கிறார். நானும் என்னுடைய சிறு வயதுகளில் நிகழ்ந்த சில சம்பவங்களை, என்னைப் பாதித்த, நான் எதிர்கொண்ட சவால்களை நினைவு கூறலாம் என்றிருக்கிறேன். சில வேளைகளில் என்னுடைய அனுபவங்கள் சிலருக்கு வழிகாட்டுதலாக அமையக்கூடும். அல்லது இவனும் என்னை மாரித்தான் எல்லாமே பட்டுத்தான் பழுத்திருக்கிறான் என்ற வாழ்க்கை மீதான நம்பிக்கையை உங்களுக்கு ஊட்டுவதாகக்கூட அமையக்கூடும். முதலாவது பகிர்வாக நான் சொல்ல விளைவது நான் காசு களவெடுத்ததைப் பற்றித்தான்.

இன்னும் இந்நிகழ்வு எனக்கு நினைவிருக்கிறது (மற்றதெல்லாம் மறந்து போச்சு) எனக்கு ஐந்து வயதிருக்கும், நான் பாலர் பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். வீட்டில் களவெடுத்திருந்த பதினெட்டு ரூபாய் சில்லறைக்காசுகளை ஒழித்து வைத்துக் கொண்டு பாடசாலை செல்வதில் பெரும் பாடு பட்டேன். காற்சட்டை முன் சட்டைப்பைகள் (பொக்கற்றுக்கள்) பின் சட்டைப்பை, கணிதக் கருவிப்பெட்டியில் (கொம்பாஸ்) அட்டை வைத்து இரண்டாகப் பிரித்து மேலுக்கு கீழுக்கு என சில்லறைக்காசுகளை அடுக்கி வைத்திருந்தேன். அக்கால கருவிப்பெட்டி நெகிழியால் (பிளாஷ்திக்கால்) செய்யப்பட்டு காந்தத்தைப் பயன்படுத்தி மூடுவதாக இருந்தது. ஏன் காசெண்டு கேட்பது புரிகிறது. எங்கட பாலர் பள்ளிக்குப் பக்கத்தில ஒரு கடை ஒண்டு இருந்தது. அதில பல்லி முட்டாசு வாங்கிச் சாப்பிடத்தான். ஏறக்குறைய இருபது ரூபாய் இருந்தால் வகுப்பு முழுவதுக்குமே பல்லி முட்டாசு விருந்து வைத்து விடலாம். எல்லாரோடையும் சேர்ந்து பகிர்ந்து சாப்பிடுறதில அப்பவே எனக்கு ஆசை.

 என்னுடைய கஷ்ட காலம் நான் பள்ளிக்குப் போற நேரம் பார்த்து என்னுடைய பொக்கற்றிலிருந்த சில்லறைகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு சத்தம் போட்டன. (ஏன் தான் சில்லறைக்காசுகளை ஒன்றோடு ஒன்று முட்டினால் சத்தம்போடும்படி செய்கிறார்களோ தெரியாது - ஒரு வேளை என்னை மாரிச் சில்லறைக் கள்ளர்களைப் பிடிக்கவோ?) அவ்வளவுதான், அம்மாவிடம் பிடிபட்டேன். விசாரணை தொடங்கியது. ஒவ்வொரு இடமாகத்தேடி ஒழித்து வைத்திருந்த காசுகளை எடுத்து எண்ணினால் பதினெட்டு ரூபாய். ‘உனக்கு எதுக்கு இவ்வளவு காசு?’ நான் பதில் பேசவில்லை. தொனி கொஞ்சம் கடுமையாகியது. அறையொன்றில் படுத்திருந்த அப்பா அந்த நேரம் எண்டு எழும்பினார். பிறகு பேசவும் வேணுமோ? அடியெண்டா அடிதான்.  ம்ம்ம்.... முதல் களவும் பிடிபட்டுப் போச்சு. வாங்கின அடி இண்டை வரைக்கும் நினைச்சுப் பார்க்க வைக்குது.

Sunday, August 23, 2009

இலங்கையிலுள்ள பதிவர்கள் சந்திப்பு - எனது பார்வை.

ஆரவாரமாக அறிவித்த படி இலங்கையிலுள்ள பதிவர்களின் சந்திப்பானது இன்று (23/8/2009) கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்த பதிவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் சிறந்த ஒழுங்கமைப்பைக் கோடுகாட்டியிருந்தது. ஆறாம் தரம் கல்வி பயிலும் மாணவன் முதல் நீண்ட காலம் எழுத்துலகை ஆண்டு வரும் பெரியவர்கள் வரை அனைவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னுடைய நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. புல்லட், சுபானு, ஆதிரை, மருதமூரான், எழில், சேரன், லோஷன் போன்றவர்கள் பயனுள்ள வகையில் உரையாற்றியிருந்தனர். சதீஷின் நிகழ்ச்சித் தொகுப்பு பாராட்டுக்குரியது. வந்தியத்தேவன் இறுதியாக கருத்துரை வழங்கியிருந்தார். மது இவையனைத்தையும் சிறந்த முறையில் நேரடி ஒளிபரப்பாக புலத்திலுள்ள நம்மவர்களும் மற்றைய நாட்டவர்களும் பார்ப்பதற்கு ஏற்படுகளைச் செய்திருந்தார். உண்மையில் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வுதான்.

தமிழ் பதிவர்கள் தமிழ் எழுத்துக்களை (ழ /ல) சரியான முறையில் கையாள்வது எனவும் இலங்கையில் அன்றாடம் பாவிக்கப்படும் தமிழ் மொழி நடையிலேயே இனி எழுதலாம் என்றும் கூறப்பட்டது. தமிழ் விசைப்பலகை மற்றும் யாழ்தேவி திரட்டி சம்பந்தமாக நீண்ட நேரம் விவாதம் இடம்பெற்றாலும் பல பயனுள்ள தகவல்கள் பரிமாறப்பட்டன. தொழில்நுட்பத்தகவல், பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் அவரவர் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். மொத்தத்தில் இன்றைய சந்திப்பானது என் போன்ற எழுத ஆரம்பித்துள்ள பதிவர்களுக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கும் என நம்புகிறேன். இன்றைய இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்.

இது இவ்வாறு இருக்க, இன்று நடந்த மற்ற விடயங்களையும் சொல்லத்தானே வேண்டும். புல்லட்டின் கடி இந்த பதிவர் சந்திப்பையும் விட்டு வைக்கவில்லை. அப்பப்ப சூடாப் போற நேரம் எல்லோரையும் சிரிக்க வைத்திருந்தார். ஆதிரை கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். ஆனாலும் சின்னப்பொடியன் பால்குடி நான் வந்திருக்கிறேன் என்று தெரிந்திருந்தும் எனக்கு மேடையில் வைத்து கேக் ஊட்டவில்லை. இது சம்பந்தமாக ஏற்பாட்டுக்குழுவினரை நான் வன்மையாகக் கண்(ண)டிக்கிறேன். அழுது அடம்பிடித்து வாங்கலாம் எண்டு நினைச்ச போது புல்லட் அண்ணா என்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு முழுக் கேக்கையும் எனக்குத் தந்திருந்தார். மற்றாக்களையும் பார்க்க பாவமாக இருந்ததால் எனக்கு கிடைச்சதை பெருந்தன்மையாக மற்றாக்களுக்கும் குடுத்தேன். வடையும் பற்றீசும் கூடவே நெஸ்கவேயும் பரிமாறியிருந்தனர். ஏற்பாட்டுக்குழுவின் தலையில துண்டுதான். நிதி நெருக்கடியைச் சமாளிக்க உண்டியல் வைக்கப்பட்டது. நூல் விநியோகமும் இடம்பெற்றது. வந்தியண்ணா வந்திருந்த அனைவரிடமும் இச்சந்திப்பு பற்றிய வலைப்பதிவுகளைக் கேட்டு வாங்குவதில் மும்முரமாக இருந்தார். ஏற்பாட்டுக்குழுவின் இன்னுமொருவர் லோஷன் அண்ணா சிங்க பதிவால் அடி வாங்கி அடி வாங்கியே நொந்து போனார். இருக்கிறம் சஞ்சிகை இலவசமாக வழங்கப்பட்டது. மொத்தத்தில உண்டியல் பக்கமே தலைகாட்டாத என்போன்றவர்களுக்கு செலவில்லாமல் வரவுதான் அதிகம்.

Saturday, August 22, 2009

நாங்களும் வருவமெல்லோ...

இலங்கைப் பதிவர் சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை(23/8/2009) காலை ஒன்பது மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. இலங்கையிலிருந்து வலைப்பதிவிடும் சிறந்த வலைப்பதிவர்கள் மட்டுமல்லாமல் என்னைப் போன்று அண்மையில் எழுத ஆரம்பித்துள்ள பதிவர்கள் முதல் எழுதத்துடிக்கும், எழுத்துக்களை வாசிக்கும் நெஞ்சங்கள் உட்பட விமர்சகர்கள் என அனைவரையும் அன்புடன் அழைத்திருக்கிறார்கள் ஏற்பாட்டுக்குழுவினர்.

சும்மா வீட்டில நிண்டு வேலை வெட்டியில்லாமல் பொழுதைப் போக்குவதை விட ஒருமுறை அங்க என்னதான் நடக்கப்போகுது எண்டு எட்டிப்பார்க்கலாம் எண்டு நினைக்கிறன். பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாரும் வரப்போறாங்கள். ஒருக்கால் ஆக்களைப் பாத்ததாகவும் போகுது. முடிஞ்சா அவங்களோட அறிமுகம் ஏற்படுத்தியதாகவும் போகுது. ஆனால் அங்க வந்து என்னை மட்டும் ஆரெண்டு தேடிப்போடாதேங்கோ. விசேட சாப்பாடும் குடுக்குறாங்களாம். விடுவமா என்ன? நாங்களும் வருவமெல்லோ...

மேலதிக விவரங்களுக்கு...