Saturday, November 27, 2010

கண்ணீர்

என் விழியோரம் வழியும் கண்ணீர் துளித்துளியாய் வடியட்டும்...
கையால் துடைத்து தடத்தையழிக்க நான் விரும்பவில்லை...
கார்த்திகையின் கண்ணீர் மழையிலும் கரைந்து விடக்கூடாது...
சுடர் விட்டெரியும் விளக்கின் வெப்பத்திலும் உலர்ந்து விடக்கூடாது...
உடலெங்கும் வடிந்து உரமாய் எனக்குள்ளே அவை உறையட்டுமே...
என்னுள்ளே விதைக்கப்பட்ட வீரம் வீறு கொண்டெழுவதற்காக...

Sunday, August 29, 2010

அப்ப ஆசைப்பட்டன்...

அப்ப ஆசைப்பட்டன்...
வீட்டை சம்மதிக்கேல்ல...
நான் விரும்பிறன் எண்டு
எவ்வளவோ சொல்லிப் பாத்தன்...
மாற்றமில்லை...
வீதியில எல்லாரும் பாக்க
திரியுறன் தானே எண்டன்...
கையை விட்டுடு எண்டினம்...
கூடவே கூட்டிக்கொண்டு திரிஞ்சிட்டு
கழட்டி விட எனக்கு மனமில்லை...
எல்லாருமே எதிர்த்திச்சினம்...
உனக்கு வயசு பத்தாது
சட்டமே ஒத்துக் கொள்ளாது எண்டினம்...
கடைசில கையை விட்டுட்டன்...

இப்பவும் ஆசைப் படுறன்...
மறுப்புகள் இல்லை...
மினக்கெட நேரமில்லை...
ஓய்வும் கிடைக்குதில்லை...
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்குறதுக்கு...
வாகனம் ஓட இப்பவும் ஆசைப்படுறன்...



குறிப்பு : அப்பாடா...!!! ஒரு மாரி ஐம்பது பதிவுகள் எழுதீட்டன்... என்னை உற்சாகப்படுத்திய, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

Saturday, August 21, 2010

இணையத்தைக் கண்டு பிடித்தவர் யார்?

உறவினர் வீடொண்டுக்குப் போனனான். அவயின்ர குடும்பத்தில நாளைக்கு அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதப் போற தங்கச்சி ஒருத்தி இருக்கிறாள். நான் போய் உள்ளட்டதும் அவளின்ர அம்மா சொன்னா ‘ஆ... “மெத்த” படிச்ச அண்ணா ஒராள் வாறார், உனக்குத் தெரியாதத கேளு பிள்ளை...’


பிள்ளை கேட்டதில முதல் கேள்வி இணையத்தை கண்டு பிடிச்சவர் யார்? நான் முழுசினன். பிள்ளை கேள்விப் பத்திரத்தைக் கொண்டு வந்து காட்டி இதில நாலு விடையிருக்கு. அதிலையெண்டாலும் பாத்து சரியான விடையைச் சொல்லுக்கோ... அதில ஒண்டு கடை ஒண்டின்ர பெயர் இருந்திச்சு. ஒரு வேளை அந்தப் பெயரில ஒருத்தர் இருந்த படியாத்தான் கடைக்கு அவற்ற பெயரை வச்சாங்களோ எண்டு நான் யோசிச்சன். கேட்ட கேள்விக்கு நேரடியாகவும் பதில் சொல்லத் தெரியேல்ல. நாலு விடைக்குள்ளேந்தும் ஆளைக் கண்டு பிடிக்கவும் முடியேல்ல. இனியென்ன செய்யுறது வெக்கத்தை விட்டுட்டுச் சொன்னன் நான் இணையத்தில பாத்து சொல்லுறன் எண்டு. தாய் கேட்டா 'தம்பி நீ தானே விடிஞ்சா பொழுது பட்டா இணையத்தோட இருக்கிறனி உனக்கும் உது தெரியாதோ?'


தங்கச்சி நிறையக் கேள்விகள் கேட்டாள். என்னால பலதுக்குப் பதில் சொல்ல முடியேல்ல. உதாரணத்துக்கு இன்னுமொரு கேள்வி. ஒரு வருட நாட்காட்டியில் இலங்கை அரசாங்க விடுமுறைகள் எத்தனை நாட்கள்? என்னால முடியேல்ல. நான் சொன்னன் 'பிள்ளை ஒண்டையும் யோசியாத, உதையெல்லாம் யோசிச்சுக் குளம்பாத, நாளைக்குப் போய் தெரிஞ்சத செய்து போட்டு வா...' தாய் சொன்னா 'தம்பி அதெப்பிடி சும்மா விடேலும். நல்ல புள்ளியெடுக்கேல்ல எண்டா கொழும்பில உயர் பள்ளிக்கூடங்களுக்கு ஆறாம் ஆண்டு அனுமதியில்லாமல் போடும். பிறகு எந்தப் பள்ளிக்கூடத்தில அனுமதியெடுக்கிறது. பிறகு என்ர பிள்ளை கண்ட கண்ட காவாலிப் பிள்ளையளோடதானே படிக்க வேண்டி வரும். நீங்கள் மட்டும் நல்ல பள்ளிக்கூடங்களில படிச்சு முன்னுக்கு வந்திடுங்கோடா...' உதுக்கு நான் என்னத்த சொல்லுறது. நாளைக்கு சோதினையெழுதப் போற பிள்ளைக்கு முன்னால விவாதிக்க விரும்பேல்ல.


எனக்குத் தெரிஞ்சு நான் படிச்ச கல்லூரியில நுழைவுத்தேர்வு தனியாக நடத்துவாங்கள்.  அதில் சித்தியெய்தினாலே கல்லூரி அனுமதி கிடைச்சிடும். அரசாங்கம் புலமைப் பரிசில் வழங்குறதுக்காக நடத்துற சோதினையை தங்கட சோம்பேறித் தனத்துக்காக தங்கட பள்ளிக்கூடத்துக்கான நுழைவுத்தேர்வா கருதுற பள்ளிக்கூடங்கள் இருக்கும் வரை, அதையே தங்களுக்கான பெரிய கெளரவமாக கருதுற பெற்றோர் இருக்கும் வரை பிள்ளை சித்திரவதை செய்யப்படுவது தடுக்கப்பட முடியாது.


எல்லாத்தையும் விட, தங்கச்சி கேட்ட கேள்விகளைப் பாக்கேக்க கடைசியா எனக்கு ஒரு பெரிய உண்மை விளங்கிச்சு. நாளைக்குச் சோதினையெழுதப் போற பிள்ளைகளோட நான் சோதினையெழுதினால் நான் பரீட்சையில சித்தியடைவது சந்தேகமே; இன்னும் சொல்லப் போனால் கொழும்பிலுள்ள உயர் பாடசாலை எண்டு சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களில் எனக்கு ஆறாம் ஆண்டுக்கான அனுமதி கிடைக்காது.

Wednesday, August 04, 2010

கணக்கு_12

ஒரு புத்தகத்தின் பக்கங்களை இலக்கமிடுவதற்கு மொத்தமாக 1629 இலக்கங்கள் (digits) பயன்படுத்தப்பட்டுள்ளன எனின் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை எத்தனை?

Thursday, July 29, 2010

வாலாக் கொடி

மார்கழி மழை கால விடுமுறைக்கு எங்கட பிரதேசப் பொடியளின்ர பொழுது போக்கு பட்டமேத்துறதுதான். மழைக்காலம் எண்டபடியா விளையாடேலாது. அப்ப பள்ளிக்கூட விடுமுறை வேற. வட கீழ்ப் பருவக்காற்றும் அப்பத்தான் அளவா வீசத் தொடங்கியிருக்கும். பட்டம் விடுறதுக்கு பொருத்தமான காலம் அப்பத்தான். பொடியளுக்கு பட்டம் விடுறதுதான் தொழில். பட்டத்திலையும் வாலாக்கொடி ஏத்தாதாக்கள் ஒருத்தரும் இல்லை எண்டு சொல்லலாம். வாலாக் கொடியெண்டா டயமண்ட் வடிவில மூண்டே மூண்டு ஈக்கிலையும் ரிசுவையும் கொஞ்சம் நூலையும் பயன்படுத்திச் செய்யப்படும் பட்டம். இவ்வளவுதான் வாலாக்கொடி கட்டுறதுக்குத் தேவை. ஆனாலும் எனக்கு இண்டை வரைக்கும் கட்டத் தெரியாது. ஏனெண்டா ஈக்கிலை வளைச்சு செட்டையை சரியா சமச்சீரா ஒட்டுறதிலதான் திறமையே இருக்கு. 

பெரிய பெரிய பட்டங்கள் கட்டி ஏத்த முன்னம் ஏழெட்டு வயசுகளில வாலாக்கொடியை கடையில வாங்கி ஏத்துறனான். வாலில்லாமல் ஏத்தலாம். ஆனா அது சரியான சிக்கலான விசயம். குத்தத் தொடங்கினா நிலத்தில முட்டுமட்டும் குத்தும். இல்லாட்டி அங்கனக்க பனை தென்னை வேம்பு ஆல அரச மா மரங்களில தொங்கிப் போடும். அதனால பெரும்பாலும் வால் கட்டித்தான் ஏத்துறனாங்கள். ஏத்த முன்னம் முச்சை போடுறதிலையும் கன வகையிருக்கு. உச்சி முச்சையெண்டா பட்டம் தலைக்கு மேல நிக்கக் கூடிய மாரி போடுறது. கொஞ்சம் குறுக்கி விட்டா - இழுவை முச்சையெண்டா பட்டம் தலைக்கு மேல வராம குறிப்பிட்ட ஏற்றத்தில நிக்கும். இழுவை நல்லா இருக்கும். வண்டி வைக்காது (நூல் தொய்யலாக இருக்காது). இப்பிடி கன விசயம் வாலாக் கொடிக்கே இருக்குக் கண்டியளோ. 

இன்னொண்டையும் சொல்லோணும், எத்தினை விதமான பட்டங்கள் ஏத்தினாலும் வானத்தில ராசா இந்த வாலாக் கொடிதான். ஏனெண்டா வானத்தில ஏறி நிக்கேக்க வேற எந்தப் பட்டத்தின்ர நூலோட வாலாக் கொடியின்ர நூல் மாட்டுப்பட்டாலும் மற்றப் பட்டம்தான் அறுத்துக் கொண்டு போகும். மற்றாக்களின்ர பட்டத்தை அறுக்கப் பண்ணோணும் எண்டதுக்காகவே வாலாக்கொடியேத்தினதாகவும் ஞாபகம் இருக்கு.

வாலாக்கொடி


பட்டமேத்தேக்கையும் பல அனுபவங்கள். ஒரு தைப்பொங்கலண்டு ஆசையா வாலாக் கொடியும் நூலும் புதுசு வாங்கி ஏத்தினனான். பட்டம் ஒரே இழுவையில ஏறீட்டுது. வலு சந்தோசம். நூலை தொடர்ந்து இழக்கிக் கொண்டே இருந்தன். பட்டத்தின்ர இழுவைக்கு நூலும் போய்க் கொண்டே இருந்திச்சு. திடீரெண்டு பாத்தா கையில நூலைக் காணேல்ல. காலுக்கு கீழ நூல்க் கட்டை மட்டும்தான் கிடந்தது. புது நூல் கட்டையின்ர அடியில நூல் முடிஞ்சிருக்கிறேல்ல. 'நூலைப் பிடி நூலைப் பிடி'யெண்டு கத்தினதுதான்; வாலாக்கொடி பாத்துக் கொண்டு நிக்கப் போச்சுது. அடியில நூலைக் கட்டியிருந்தா எங்கையாவது மரங்களில அடிக்கட்டை சிக்கி நிண்டு வாலாக் கொடியேறி நிண்டிருக்கும். இராக்கொடி பகல்கொடியா பட்டம் சளைக்காமல் நிண்டிருக்கும் மழை பெய்தோ அல்லது காத்து நிண்டோ பட்டம் படுக்காம இருக்கும் வரை...  

இன்னொருமுறை ஏழெட்டு வயசு காலப் பகுதி. வீட்டுக்கு முன்னால் காணிக்குள்ளதான் வாலாக்கொடியேத்திக் கொண்டு நிண்டனான். பட்டமேறீட்டுது. அப்ப வலு சந்தோசம்தானே. கையில நூலைப் பிடிச்சுக் கொண்டு வலிச்சு, இழக்கி, இழுத்துக் கொண்டோடி குத்த வச்சுப் பாத்து சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தன். தலைக்குமேல படார் எண்டொரு பெரிய வெடிச் சத்தம் கேட்டுது. அந்தக் காலத்தில வெடிச் சத்தம் கேட்டா எந்த இடத்தில நிண்டாலும் உடன குப்புறப்படு எண்டு சொல்லித் தந்தவங்கள். எனக்கு அந்தச் சின்ன வயசு காலப்பகுதியில அந்த இடத்தில குப்புறப்படுக்கிறதில உடன்பாடு இல்லை. எங்கையாவது ஓடி மறைஞ்சிருக்கோணுமெண்டதுதான் என்ர எண்ணம். வெட்டை வெளீல நிண்டா குண்டு பட்டுடும். எங்கையாவது ஓடி ஒழிச்சா ஒண்டும் நடக்காது எண்டது என்ர நினைப்பு பாருங்கோ. அந்தக் காலத்திலையே எனக்கு என்ன ஒரு ஞானம்!!! 

ஆட்லறி குண்டுகளின்ர முதலாவது வெடிச்சத்தம் ஏவின இடத்திலையும் ரெண்டாவது வெடிச்சத்தம் வானத்திலையும் மூண்டாவது வெடிக்கிற இடத்திலையும் கேக்கும். எங்கட தலைக்கு மேல ரண்டாவது வெடி வெடிச்சா எங்களுக்குப் பாதிப்பில்லை எண்டத ஊகிக்கலாம் எண்டு பிறகுதானே தெரிஞ்சுது. ஆனாலும் எத்தினை குண்டுகள் அடிக்கிறாங்கள் எண்டு தெரியாதுதானே. அத விட ஒருக்கா அடிச்சா தொடந்து ரண்டு மூண்டு அடிப்பாங்கள் எண்டொரு நம்பிக்கை. அண்டைக்கும் ஓடிப் பொய் ஒரு பத்தேக்குள்ள ஒழிச்சிருந்தனான். ஒரு அரை மணித்தியாலம் கழிஞ்சு சத்தம் ஒண்டும் இல்லையெண்டு வெளீல வந்தா என்ர கையில வாலாக்கொடியின்ர நூலிருக்கு. அதைக் கைவிடாமத்தான் இவ்வளவு நேரமும் இருந்திருக்கிறன்.  மேல பட்டத்தை பாத்தா வாலாக் கொடி எதுவுமே நடக்காததைப் போல எந்த சலனமுமில்லாம சாடிக் கொண்டிருந்தது. அந்த ஆட்லறிக் குண்டுகள் கடற்கரையில விளையாடிக் கொண்டிருந்த, காலாற ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அப்பாவிகள் சிலரின் வாழ்க்கையை காவு கொண்டதோடு சிலரின் அவயவங்களை பறித்தெடுத்ததென்பது வாலாக்கொடியைப் போல அதை ஏவினவங்களுக்கும் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை...

Sunday, June 20, 2010

கணக்கு_11

முந்த நாள் (நேற்றைக்கு முதல் நாள்) எனக்கு வயசு 25. வாற வருசம் நான் 28 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவேன்.
அப்ப நான் எத்தினையாம் திகதி பிறந்தவன் எண்டு கண்டு பிடியுங்கோ பாப்பம்.

Saturday, June 12, 2010

துலாப் போடுதல்...

துலாப்போடுதல் எண்ட சொல் வழக்கை கேள்விப்படாமல் இருக்க மாட்டீங்கள் எண்டு நம்புறன். தூங்கி வழிதல் / விழுதல் எண்டு பொருள் படும். எல்லாருமே துலாப் போட்டிருப்பீங்கள் எண்டே சொல்லலாம். துலாப் போடுறவனை விட துலாப் போடுறவனைப் பாக்குறவனுக்கு ஒரு அலாதி சந்தோசம் இருக்குப் பாருங்கோ. துலாப் போடுறவன்ர ஒவ்வொரு அசைவையும் நல்லாவே ரசிக்கலாம். அது கிடக்க... இப்ப கொஞ்ச நாளா நான் துலாப்போடுற சந்தர்ப்பம் அதிகரிச்சுப் போட்டுது. இருந்தாலும் நான் மீட்டிப் பாக்க வந்த விசயம் சின்ன வயசில துலாப் போட்ட சந்தர்ப்பங்கள். எல்லாருக்குமே தெரியும் தானே படிக்கேக்க தான் துலாப் போட்டிருப்பன் எண்டு. 

அந்தக் காலத்தில ஒரு குப்பி விளக்கோ அல்லது அரிக்கன் லாம்போ கொழுத்தி வச்சுட்டு சுத்தி வர இருந்து படிக்க வேண்டியதுதான். பொழுதுபட்டால் முகம் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து மேசையில இருக்க வேண்டும் எண்டது கட்டளை. என்ன செய்ய? பின்னேரங்களில ஓடி விளையாடிப் போட்டு வந்து மேசையில இருந்தா எப்பிடி இருக்கும்? அடிக்கடி துலாப் போடுவன். துலாப்போட்டு விளக்குக்கு மேல விழுந்து விளக்குப் பத்தியெரிஞ்சு மரணமான சம்பவங்களும் அந்தக் காலத்தில நிறைய நடந்ததுதான். துலாப்போடும்போது கூட இருக்கிறாக்களையும் கவனிக்காம துலாப் போட வேண்டியதுதான் (நித்திரைக்கு எங்க தெரியப் போகுது எங்கட மானப் பிரச்சினை). 

படிக்கும்போது துலாப் போட்டால் ‘புத்தகத்தை மூடி வச்சிட்டுப் போய்ப் படு’ எண்டு அப்பா சொல்லுவார். அப்ப சந்தோசம் தானே எண்டு நினைப்பியள் போல... அண்டைக்குப் போய்ப் படுக்கலாம். பிரச்சினையில்லை. அடுத்தடுத்த நாட்களில, கூட நேரம் இருந்து படிக்க வேணும். சில வேளை விளையாடப் போற ஓய்வு நேரத்திலயும் இருந்து படிக்க வேணும். அண்டைக்கு பழகின பழக்கம் இண்டைக்கும் நான் துலாப் போடும்போது படிப்பது கிடையாது. எத்தினை மணியெண்டாலும் (வெள்ளன எண்டாலும்) படுத்துடுவன். (அறை நண்பர்களுக்கு தெரியும்) இவ்வளவு படிக்கக் கிடக்கே எண்டு சிந்திக்கிறதில்லை.

உயர் தரம் படிக்கும் வரை கற்பிக்கும் போது துலாப் போட்டதா ஞாபகம் இல்லை. ஆனால் அதற்குப் பின்னர் கற்பிக்கும்போது துலாப் போடாத நாளேயில்லையெனலாம். காரணம் சோதினைக்கு முதல் கிழமை தலைகீழா நிண்டு படிச்சுப் பாடமாக்கிப் போட்டுப் போய் சோதினை செய்யலாம் எண்டதால. என்ர நண்பன் சொன்னதுதான் ஞாபகம் வருது... ’என்னடா எந்த நாளும் லெக்சருக்கு வந்து நித்திரை கொள்ளுறியே’ எண்டதுக்கு அவன் சொன்ன பதில் ’நித்திரையில தான் எனக்கு படிப்பிக்கிறது எல்லாம் விளங்கும்.’  சிலர் இருந்த படியே நித்திரை கொண்டுவிடுவார்கள். சிலர் கண்ணாடி போடுறது நித்திரை கொள்ளுறதை மறைக்கத்தான். பஸ்ஸுக்குள்ள பக்கத்தில இருக்கிறவன் துலாப்போட்டு எங்களுக்கு மேல விழுந்தா எரிச்சல்தான் வரும். அதே நேரம் கொஞ்சம் தள்ளியிருந்து துலாப் போடுறவனை, அவனுடைய இயக்கத்தை ரசிக்கச் சொல்லும். என்னத்தைச் சொன்னாலும் துலாப் போடுறவனுக்குத்தான் அவன்ர கஸ்டம் விளங்கும்.  

Sunday, May 16, 2010

வார்த்தைகள் இல்லை...

இரங்கல் கவிதை எழுத என்னால் முடியவில்லை...
எத்தனை பேர் எண்டு எண்ணவும் முடியவில்லை...

முள்ளியில் நின்று வெள்ளி முழைக்குமென்று விழி பிதுங்கியவர்களும்
வாய்க்கால் வழியாக வாழ்வு வருமென்று மன்றாடி நின்றவர்களும்
மனிதாபிமானம் மண்ணில் இன்னும் இருக்கென்று நம்பியவர்களும்
இனி என்னத்தைச் செய்ய என எல்லாத்தையும் இழந்தவர்களும்
சேர்ந்திருந்த செய்தியறிந்தும் செய்து முடித்தனர்...

எதுவுமே நடக்காததைப் போல துடைத்தெடுத்தனர்...
அதையும் வெளியில் தெரியாமல் இருட்டடிப்புச் செய்தனர்...
அப்பாவிகளின் அழுகுரல்கள் அடங்கின...
அவர்களின் நம்பிக்கைகளும் தாகங்களும் அடக்கப்பட்டன...
அவர்களின் உடலங்களும் புதைக்கப்பட்டன...

ஆரார் மாண்டார்? ஆரார் தப்பினர்? ஆரார் இன்னும் இருக்கின்றனர்
அறியாது இன்னும் தவிக்கும் நெஞ்சங்களுக்கு
ஆறுதல் சொல்லவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை...

Sunday, April 04, 2010

உழைப்பு பட்டுது...

“என்ன முதலாளி, இப்ப கடும் உழைப்புப் போல... ஆளைக் காணவே கிடைக்குதில்லை...”

“சும்மா போடா, இருக்கிற வயித்தெரிச்சலைக் கிண்டாத... நானே எப்ப கடையை இழுத்து மூடுவன் எண்டிருக்கிறன்... நீ வேற விசர்க்கதை கதைக்கிறாய்... நான் மட்டுமில்லை இஞ்ச கன பேர் உந்த எண்ணத்திலதான் இருக்கிறாங்கள்.” 

நான் இந்தப் பதிலை சற்றும் எதிர்பார்க்கேல்ல.

“அண்ணே, இப்பதானே பாதை திறந்திருக்கு சமான் மலிவா வரூது எல்லாச் சாமானும் எடுக்கலாம். விதம் விதமா உடுப்புகளை இந்தியாவிலேந்து கூட றக்கலாம். பிறகேன் இப்பிடிச் சலிக்கிறியள்”

“உங்க எல்லாரும் இப்பிடித்தான் நெச்சுக் கொண்டிருக்கிறியள் போல... நேற்றும் ஒருத்தன் போனில கதைக்கேக்க இப்ப உங்கட பிசினஸ் ஆத்தலுக்குப் போகும் தானே எண்டான். உங்களுக்கு எங்கயடா எங்கட நிலை விளங்கப்போகுது. உங்களைச் சொல்லித் தப்பில்லை.”

“அண்ணே, விஷயத்தைச் சொல்லன் அப்பத்தானே என்ன நடக்குதெண்டு எங்களுக்கும் விளங்கும்.”

“பாதை திறந்தாலும் திறந்தாங்கள். எங்கட உழைப்புப் பட்டுது. வேற இடத்து வியாபரிகள் நடைபாதையில கடையைப் போட்டு மலிவா விக்கிறான். எங்கட சனம் வாயைப் பிழந்து கொண்டு அங்கதானே போய் நிக்குதுகள். அவனுகள் அங்கனேக்க தரம் குறைஞ்ச, பாவிச்ச பொருட்களை பூசி மினுக்கிக் கொண்டு வந்து சோவுக்கு அடுக்கி வச்சிருக்கிறான். எங்கட சனம் பாய்ஞ்சு விழுந்தடிச்சுக் கொண்டு போய் அவனுகளட்ட தானே வாங்குதுகள்.”

“அது சரி... ஆனா உங்களுக்கெண்டு இருக்கிற கிறவுட் இருக்குத் தானே அண்ணே...”

“அந்த பிரச்சினையான காலத்திலயே நாங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு சாமானுகளை றக்கி ஓரளவுக்கேனும் மலிவான விலையில நாங்கள் நட்டப்பட்டாலும் பரவாயில்லையெண்டு கடையை நடத்தின்னாங்கள். இப்ப என்னடா எண்டா எங்கட வாடிக்கையாளர்கள் அத மறந்திட்டு இஞ்சேந்து பஸ் ஏறிப் போய் மலிவா சாமான் வாங்கி வரீனம். நாங்கள் கடையைத் திறந்து வச்சிட்டு ஈ ஓட்ட வேண்டியதுதான்... வசந்தம் எண்டது எங்களுக்கில்லைத் தம்பி, அந்த வியாபாரிகளின்ர வாழ்க்கைக்குத் தான்... அத இன்னும் நீ விளங்கிக் கொள்ளேல்லையோ...”

“விளங்குது விளங்குது வசந்தத்தை நம்பி இல்லையண்ணே... எண்டாலும் இப்பிடி நீங்கள் ஈ ஓட்டுற நிலை வருமெண்டு நினைக்கேல்ல... எங்கட சனம் இதோட எண்டாலும் பொருளாதார கஸ்டங்களை மறந்து வாழத் தொடங்கும் எண்டெல்லே நினைச்சன்.”

“நீயே இப்பிடிச் சொன்னா எப்பிடி தம்பி? சாமானுகளை எங்கட சனம் வாங்குது.. சரி.. காசெங்க போகுது? அவன்ர பெட்டிக்குள்ளையெல்லே போகுது. அத எங்களுக்கு தந்தா எங்கட பசி ஆறும் தானே... நாங்களும் சந்தோசப் படுவம் தானே... இண்டைய நிலை என்னெண்டா தம்பி, மலிவா சாமன் வரூது. தரம் குறைஞ்ச சாமானுகள் தான்.. ஆனாலும் வரூது.. எங்கட சனம் சாமானுகளை வாங்கிக் கொண்டு ஆருக்கோ காசைக் குடுக்குதுகள். அவன் பெட்டீக்க போட்டுக் கொண்டு சந்தோசமாப் போய்ச் சேர்றான் . அவன் தன்ர ஊருக்குப் போய் தன்ர பிள்ளை குட்டியோட சந்தோசமா இருக்கிறன். 

காலம் காலமா வியாபாரம் செய்யுற எங்கட நிலையை யாரெண்டாலும் யோசிச்சுப் பாத்தனீங்களே? வியாபாரிகளுக்கு மட்டுமில்லைத் தம்பி... விவசாயிகளுக்கும் கடற்தொழிலாளர்களுக்கும் இதே நிலை தான். எங்களால நம்பி ஒரு தொழில செய்ய முடியேல்லத் தம்பி. எங்கட உற்பத்திகளை சனம் வாங்குதில்லை. வெளீலேந்து பாக்கேக்க எங்கட சனத்தின்ர தரம் உயருது... கஸ்டம் குறையுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கீனம், உண்மை அதில்லைத் தம்பி. எங்கட உழைப்புக் கேற்ற ஊதியம் எங்களுக்கு இல்லாமல் போகுது.”

“எனக்கு விளங்குது உங்கட நிலை... இனி உங்களுக்குப் பிரச்சினியில்லை. தற்காலிக கடையெல்லாத்தையும் மூடச் சொல்லி மாநகர சபை உத்தரவு போட்டிருக்காமே...”

“நீ அடுத்தனீயடா தம்பி... உது நடக்குமெண்டு நினைக்கிறியே? அடே.. சபைக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 000 ரூபா வருமானம் இதால வரூது. விட்டுடுவாங்கள் எண்டு நினைக்கிறியே... அது போக இவங்கள் முடிவெடுத்தாலும் நடைமுறைப் படுத்துறது இவங்கட கையில இல்லையே... இப்பிடித் தான் எல்லாமே... அடே உனக்கொரு விசயம் சொல்லுறன். உந்த சபை தான், தனக்குச் சொந்தமான நிலத்தை மூண்டு நட்சத்திர ஹோட்டல் கட்டுறதுக்கு தெற்குப் பக்க கொம்பனி ஒண்டுக்கு குடுத்திருக்கு. எங்கட சனம், வெளி நாட்டுச் சனம் எத்தினையோ பேர் கேட்டுக் குடுக்காதத அவங்களுக்கு குடுத்திருக்காம். எங்கட சனம் வருமானம் ஈட்டுறத அவங்களே விரும்பேல்லப் போல... ஆரட்டை இதெல்லாத்தையும் சொல்லியழ...” 

Wednesday, March 17, 2010

நகைச்சுவையுணர்வு

நகைச் சுவையுணர்வு என்பது இயல்பாக இருக்க வேண்டும். எதிர்பாராததாக இருக்க வேண்டும். பொருத்தமானதாக இருக்க வேண்டும். எல்லோரும் ரசிக்கும் படியாகவும் மற்றவர்களைப் புண்படுத்தாததாகவும் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதை விட நகைச் சுவையை ரசிப்பதென்பது ஆளாளுக்கு வேறுபடும். சிலர் (நான் உட்பட) வெடிச் சிரிப்புச் சிரிச்சு (கக்கட்டம் போட்டுச் சிரிச்சு) நகைச்சுவையை ரசிப்பார்கள். உண்மையிலேயே தங்களை அறியாமலே நகைச்சுவையை ரசிப்பதனாலேயே எதிர்பாராத நேரங்களில் இவ்வாறு சிரிக்க நேரிடுகிறது. 

அது அப்பிடியே கிடக்க, எனக்குள் ஒரு உறுத்தல் இருக்கிறது. உண்மையிலேயே நாங்கள் தரமான நகைச்சுவையைத் தான் ரசிக்கிறோமா, இல்லை எங்களின் நகைச்சுவை உணர்வுகள் தரமற்ற ஒரு நிலைக்கு கொண்டு செல்லப் படுகின்றனவோ? இன்று அதிகமாக ரசிக்கப்படும் நகைச்சுவைகள் ஒருத்தரை புண்படுத்தவதாக இருப்பதையே காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஒருத்தரைக் கேவலப்படுத்திக் கொச்சைப் படுத்தும் கதைகளைத்தான் நாங்கள் நகைச்சுவை என்று அதிகமாக ரசிக்கிறோம். கூட்டம் ஒன்று சேர்ந்தால் ஒருத்தனை எல்லாரும் போட்டு கடிச்சு அவமானப் படுத்தும்போது அதனைப் பார்த்து சுற்றிவர நிக்கிற எல்லாருமே கைதட்டி ரசிச்சுச் சிரிச்சுக் கொண்டாடுவார்கள். இதுதான் உண்மையான நகைச்சுவை உணர்வா? 

என்னுடைய கருத்துப்படி சினிமாவில் கவுண்டமணி செந்திலைப் பார்த்து ‘கோமுண்டித் தலையா, பனங்கொட்டைத் தலையா’ என்றெல்லாம் கேவலமாக திட்டும் போதுதான் நாங்கள் எல்லாரும் கைதட்டிச் சிரிப்போம். அதிகமாக ரசிப்போம். ஒருத்தனை அவமானப் படுத்தும் வார்த்தைகள் தான் எங்களுக்கு நகைச்சுவை உணர்வை, ரசிப்பைத் தருகிறதென்றால் எங்களுடைய ரசனையின் மட்டம் சரியா? மற்றவர்களை அவமானப் படுத்தாமல் எல்லோருமே சேர்ந்து சிரிக்கக் கூடிய நகைச்சுவைகள் இல்லையா? உண்மையான நகைச்சுவைகளை, தக்க தருணத்தில் எதிர்பாராத விதமாக எழும் நகைச்சுவைகளை ரசிப்பதை விடுத்து தரங்குறைந்த ஒருத்தரை அவமானப் படுத்தும் நோக்கில் கூறும் வார்த்தைகளைத் தான் நாங்கள் சிறந்த நகைச்சுவை என்று ரசிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. 

என்னுடைய எண்ணப்படி சினிமா எங்களை தரங்கெட்ட ரசனைக்கு இழுத்துச் செல்கிறது. மற்றவர்கள் அவமானப்படுவதை, துன்பப்படுவதை ரசிப்பதை ஊக்குவிக்க முயல்கிறது. எங்களை அறியாமலே நாங்கள் அவற்றிற்கு அடிமையாகிறோம். சினிமா தவிர பதிவுலகமாவது தரமான நகைச்சுவைகளை பதிவிடுகிறதா? அல்லது அவற்றைத் தேடியெடுத்து பதிவிட்டு வாசகர்களின் நகைச் சுவையுணர்வை தரமானதாக பேணுகிறதா? அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கிறதா? இல்லை ‘நாசமாப் போக’ என்று மற்றவரை திட்டித் தீர்ப்பதைத் தான் சிறந்த நகைச் சுவையாக எண்ணி ரசிக்கிறதா? மற்றவர்கள் அவமானப் படும்போது கைதட்டிச் சிரிக்கும் கேவலமான விடயங்களைத்தான் தரமான நகைச் சுவையுணர்வு என்று தவறான பாதையில் மக்களை வழி நடத்தாமல் தரமான நகைச்சுவையை எல்லோருமே ரசிக்கக் கூடிய நகைச்சுவைகளை முன் கொணர முடியுமா? 

Sunday, February 21, 2010

விசேஷம்

அண்மையில் ஊருக்குப் போய் மடத்திலேந்து கதைக்கேக்க அறிஞ்ச சில விடயங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. இருந்தாலும் நான் இவற்றை எதிர்பார்க்காமல் இருக்கவில்லை. கலாசரம் பற்றிப் பலர் சொல்லீட்டாங்கள். நான் ஒன்றும் அதுகளை பற்றிச் சொல்லேல்லை. வேறு சில விடயம் பற்றித்தான் சொல்லப் போறன். 

ஊர்ப் பொடியன் ஒருத்தனுக்கு நடந்த சம்பவம் தான் இது. வவுனியாவுக்கு வந்த அவன் வழமையாக ஊரில பாவிக்கிற சாராயப் போத்தல் ஒண்டின்ர பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கிறான். கடைக்காரன் உடன கேட்டானாம் ‘தம்பி நீ யாழ்ப்பாணமோ?’ எண்டு. இவன் அதிர்ந்து போனான். ‘எப்பிடிக் கண்டு பிடிச்சீங்கள்?’ எண்டு இவன் கேக்க கடைக்காரன் சொன்ன பதிலைக் கேட்டு, கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் அதிர்ந்து போனம். 

யாழ்ப்பாணத்தைத் தவிர வேற எந்த இடத்திலையும் அந்தப் பெயருடைய சாராயம் இல்லையாம். இதே வியாபாரப் பெயருள்ள சாராயம் நாடு பூராவும் விக்கப்பட்டாலும், அக்குறித்த பெயருடைய சாராயம் யாழ்ப்பாணத்தில மட்டும் தானாம் விக்கப்படுது. அதில அற்ககோல் வீதாசாரம் அதிகமாம். யாழ்ப்பாண மக்களுக்காக எண்டு விஷேசமாகத் தயாரிக்கப்பட்டதாம். இந்த வியாபாரப் பெயருள்ள சாராயப் போத்தல்கள் எல்லாத்திலையும் போத்தல் கண்ணாடியில் அவங்கட வியாபாரப் பெயர் குறிச்சிருப்பாங்கள். ஆனா யாழ்ப்பாணத்துக்கு வாறதில, போத்தல் கண்ணாடியில எதுவுமே போட்டிருக்கமாட்டாங்கள். தம்பி இனியாவது கவனிச்சுப் பார் எண்டு கடைக்காரன் சொன்னானாம். 

எப்பிடியெல்லாம் சீரழிக்க முடியுமோ அப்பிடியெல்லாம் சீரழிக்க முயற்சி செய்யுறாங்கள்.

அதில கதைச்சுக் கொண்டிருந்த ஒருத்தன் இதச் சொன்னவனைக் கேட்டான் இப்பிடித் தெரிஞ்சு கொண்ட பிறகும் ஏன்ரா குடிக்கிறாய்? குடியை விட வேண்டியது தானே எண்டு. ‘அடே நான் இதில ஊறிப் போனன். என்னால விடேலாது. சொன்னா நம்ப மாட்டாய் நான் குடிக்கேல்லையெண்டா என்ர கை நடுங்கும்’ எண்டான்.   

விட முடியும் எண்டு நினைக்கிறவங்கள் குடியை விடலாம். இனி பழகுறவங்கள் பழகாமல் விடலாம். குறிப்பா உந்தக் கம்பஸ் வழிய ராகிங் நேரம் கொடுமைப் படுத்திக் குடிக்கப் பழக்குவிக்கிற படிச்ச நாய்கள் யோசிச்சாலும் கொஞ்சம் குடியைக் கட்டுப்படுத்தி நல்ல சமுதாயத்தை வளர்க்க முடியும். குறிப்பாக நாம் இலக்கு வைக்கப் படுகிறோம் என்று தெரிந்த பின்னும் விழிப்புணர்வு அடையாமல் இருப்பது மடமைத் தனம்.

அடுத்த விடயம் வரி விதிப்பு. என்னை விட வயது மூத்த ஒருத்தர் சொன்னார், ‘தம்பி யாழ்ப்பாணத்துக்குப் வாற வியாபார வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுதாம். அவங்கட பார்வையில இன்னும் நாங்கள் வேற நாடுதான் தம்பி. வரித் தொகை பொடியள் அறவிட்டத விட கூடவாம். அவங்களாவது எங்களட்ட வாங்கி எங்கட பிரதேசங்களைக் கட்டியெழுப்பினாங்கள்.  இவங்கள்...???’   

Thursday, January 07, 2010

கணக்கு_10

நான் ஒன்று தொடக்கம் பத்து வரையிலான இலக்கங்களுக்குள் அடுத்துள்ள இலக்கங்கள் இரண்டை நினைத்தேன். அதிலொன்றை கண்ணனிடமும் மற்ற இலக்கத்தை நந்தனிடமும் இரகசியமாகச் சொன்னேன். இருவருக்குமிடையில் கீழுள்ள கலந்துரையாடல் மட்டுமே நடந்தது.

நந்தன் : எனக்கு உன்னுடைய இலக்கம் தெரியாது.
கண்ணன் : எனக்கும் உன்னுடைய இலக்கம் தெரியாது.
நந்தன் : ஆம், உன்னுடைய இலக்கத்தைக் கண்டு பிடித்து விட்டேன்.

நான் நினைத்த இலக்கங்களுக்குச் சாத்தியமான, நான்கு சோடி இலக்கங்கள் (நான்கு விடைகள்) மேற்குறித்த கலந்துரையாடலிலிருந்து உங்களால் கண்டு பிடிக்க முடியும். எங்கே, உங்களுடைய மூளையைக் கொஞ்சம் கசக்கி விடையைக் கண்டு பிடியுங்கள் பார்ப்போம். விளக்கங்களுடன் விடைகளை இணைத்தால் உதவியாக இருக்கும்.

Wednesday, January 06, 2010

கள்ள வோட்டு

நாட்டின்ர சனாதிபதித் தேர்தலும் வருது. இப்ப இருக்கிறவர் இன்னும் ரெண்டு வருசம் சனாதிபதியா இருக்கலாமாம். ஆனா இப்ப நடத்துறதுக்கு என்ன காரணம் எண்டா தான் திரும்பி வரோணும் எண்டதுக்காகவாம். என்ன ஒரு தேசப் பற்றுப் பாருங்கோ. வழமையைப் போல சிறுபான்மை இன மக்களின்ர வோட்டிலதான் வெற்றி தங்கியிருக்கெண்டு தேர்தலையொட்டிச் சிறு பான்மையினர் விசேசமா கவனிக்கப் படீனம். என்னதான் இருந்தாலும் எங்கட நாட்டில நீண்டகாலமா இருக்கிற சூழலைப் பாத்தா ஒரு காலமும் சிறுபான்மையினர் ஒருத்தர் ஐம்பது சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று சனாதிபதியாக முடியாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை எண்டைக்கும் சிறுபான்மையினருக்கு எதிரானதுதான். அதனால அத ஒழிக்கிறதுக்கு ஏதாச்சும் வழியிருக்கோ எண்டு பாக்க வேணும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாட்சி முறை இருக்கும் வரை எண்டைக்குமே சிறுபான்மைக்கு நம்மட நாட்டில விமோசனம் இல்லை. இவ்வளவுதான் எனக்கிருக்கிற அரசியல் அறிவு.

அது இருக்கட்டும் நான் சொல்ல வந்த விசயம் வேற. 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழர்கள் எல்லாரும் தாங்கள் ஒரு தலைமையின் கீழ்தான் இருக்கிறம் எண்டதைக் காட்ட ஒரே கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எண்ட நிபந்தனை. உண்மையைச் சொல்லோணுமெண்டா அப்ப எனக்கு வாக்குரிமை கூட இல்லை. உயர்தரச் சோதினைக்கு படிச்சுக் கொண்டிருந்த காலம். தமிழ்த் தேசியம் மீதிருந்த உந்துதாலால் நானும் என்ர வயசையொத்த சில நண்பர்களும் வோட்டுப் போடுறதெண்டு முடிவெடுத்தாச்சு. அந்தத் தேர்தல்ல பல்கலைக் கழக பொடியள் மும்முரமா பிரச்சாரம் செய்ததாலையும் ‘வயதுக்கு வந்தாக்களுக்கு மட்டும்’ எண்டிருக்கிறதுகளை என்னண்டொருக்கா பாக்கோணும் எண்டிருக்கிறதைப் போல (இதுவும் வயசுக்கு வந்தாக்களுக்கு மட்டும்தானே) எப்பிடி வோட்டுப் போடுறதெண்டதைப் பாக்கோணுமெண்ட ஆசையும் கூடவே இருந்ததாலையும் வோட்டுப் போடுறதெண்டு யோசிச்சம்.

வழமையா நாங்கள் கூடுற மடத்தடிக்குப் போனா நாங்கள் தான் தாமாதமாப் போயிருக்கிறம். அதுக்கு முன்னமே எங்கட பொடியள் வோட்டுப் போடத் தொடங்கீட்டாங்கள். குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாக்களிக்கும் நிலையங்களுக்கு அனுப்பப் பட்டோம். (களவுக்கு போறது இப்பிடித்தானே ) எனக்குத் தரப்பட்ட இடம் எங்கட இடத்திலேந்து கொஞ்சத் தூரத்தில இருக்கிற பள்ளிக்கூடம். முதல்ல உதில கொஞ்சம் அனுபவம் உள்ளாள் வாக்களிப்பு நிலையத்துக்குள்ள போனார். அடுத்ததா அவற்ற தலமையில பின்னால புதுசா வோட்டுப் போடப் பழகுறாக்கள் நாங்கள் ஒரு அணி போல உள்ளுக்குள்ள போனம்.

எனக்குத் தரப்பட்ட வாக்காளர் அட்டையை முதலாவதா இருக்கிறவரட்டை நீட்டினன்.  அதில இருக்கிற பெயரைப் பெலமா வாசிக்கேக்கதான் பார்த்தன் அவர் என்னுடன் அதிக காலம் கூடப் படித்த நண்பன் ஒருவனின் தகப்பன். அவர் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். அவற்ற முகத்த பாக்கேலாமப் போச்சு. டக்கெண்டு திரும்பி அவர் பெயரை ஆருக்காக வாசிச்சாரோ அவையளைப் பாத்தன். அடுத்த அதிர்ச்சி. அதில இருந்த எல்லாருக்கும் என்னைத் தெரியும். எனக்கும் அவையளைத் தெரியும். வாசிக்கப்பட்டது என்னுடைய பெயரில்லையெண்டது மட்டுமில்லை நான் வோட்டுப் போடுறதுக்காக அந்தப் பள்ளிக்கூடப் பக்கம் வந்திருக்கக் கூடாதெண்டதும் அவையளுக்குத் தெரிஞ்சிருக்கும். ஒருத்தரும் ஒண்டும் பறையேல்ல. அப்பத்தான் எனக்கு மெல்ல நடுக்கம் பிடிச்சுது. ஒகோ,இது இப்பிடிச் சிக்கலோ? பிடிபட்டா கதை கந்தல் தான் எண்டது விளங்கிச்சுது. வோட்டுப் போட்டுட்டுப் போய் கையை நீட்டினா கைக்கு வர்ணம் பூசினதும் இன்னுமொரு ஆசிரியர். என்னை ஏழெட்டு வயது முதல் அறிந்தவர். கிட்டத்தட்ட மூண்டு வருசம் என்னுடைய வகுப்புக்கு வகுப்பாசிரியராகவும் இருந்தவர்.  சின்ன விரலை இழுத்து வச்சு ‘இன்னுமொரு தரம் நீ வோட்டுப் போடக்கூடாது’ எண்டு சொல்லிச் சொல்லி அந்த விரல் முழுக்க தன்ர பலம் முழுக்கச் சேத்து அழியாத படி நிறந்தீட்டி விட்டார். வெளீல வந்தாப்போல தான் அப்பாடா ஒரு மாரித் தப்பீட்டம் எண்டு பெருமூச்சு விட்டன். அதே நாளில நான் பொலீசு வாகனத்தில ஏத்தப்பட்ட சோகக் கதையைப் பிறகொருக்காச் சொல்லுறன்.

அண்டைக்கு பின்னேரம் எல்லாம் முடிய பொடியள் எல்லாரும் ஒண்டு கூடி அவரவர் சாகசங்களைச் சொன்னாங்கள். எண்ணுக் கணக்கில்லாத வோட்டுப்போட்டவங்களும் இருந்தாங்கள். அத விட பலருக்கு நடந்த கொடுமையென்னண்டா தங்கட சொந்த வோட்டுப் போட முடியேல்ல. நெஞ்ச நிமித்திக் கொண்டு அடையாள அட்டையிருக்கிற துணிவில தங்கட வோட்டுக்களை கடைசில போடப் போன கன பேர் இந்த வோட்டு உன்னுடையதில்லை. நீ இதுக்கு முன்னம் வந்து வோட்டுப் போட்டுட்டாய் எண்டு சொல்லி திருப்பியனுப்பப்பட்டிருந்தினம். அதை விட கொடுமை என்னண்டா ஓடியோடி வோட்டுப் போட்ட ஒருத்தன்ர சொந்த வோட்டை இன்னுமொருத்தன் கொண்டு போய் வோட்டுப் போட்டுட்டு வந்தது தான்...