Tuesday, March 01, 2011

திறமையிருந்தும்...


என்ர ஊராக்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் போலத்தான் என்ர வாழ்க்கையும் இருந்தது. என்ர வாழ்க்கையொண்டும் விதி விலக்கானதல்ல.  சொன்னா நம்பமாட்டியள் முதலாம் ஆண்டு ஒரு பள்ளிக்கூடம். ரண்டாம் மூண்டாம் ஆண்டு இன்னொரு பள்ளிக்கூடம். நாலாம் அஞ்சாம் ஆண்டு அடுத்த பள்ளிக்கூடம். இப்பிடி சாதாரண தரம் வரை ஒண்டைவிட்ட ஒரு வருசம் நான் பள்ளிக்கூடம் மாறின படிதான். இதில முக்கிய விசயம் என்னெண்டா ஒவ்வொரு பள்ளிக்கூடமும் ஒவ்வொரு ஊரில. நான் அவ்வளவு குழப்படியோ எண்டு தானே நினைக்கிறீங்கள். ஆனா நான் அப்பிடியில்லை.

ஈழத்தமிழன்ர நாளாந்த நிகழ்ச்சிகளில ஒண்டான இடப்பெயர்வு என்னை இப்பிடிப் பாடாப் படுத்திப் போட்டுது. இஞ்ச கொஞ்சம் தொட்டு அங்க கொஞ்சம் தொட்டு படிப்புகளும், நாளுக்கு நாள் புதுப் புது ஆசிரியர்களும் புதுப்புது நண்பர்களும் எண்டு என்ர வாழ்க்கை போச்சுது. இருந்தாலும் படிச்சு நல்ல நிலைக்கு வரவேணுமெண்ட கொள்கையை நான் ஒரு நாளும் கை விடேல்ல.

சுனாமி என்ர வாழ்க்கையிலையும் தன்ர கை வரிசையைக் காட்டிச்சு. ஆர்ப்பரிச்சு உள்ளுக்கு வந்த கடல் அம்மாவையும் அவவின்ர குடும்பத்தில சிலரையும் காவு கொண்டது. கடல் அலை உயரமா வரூது எண்டத கண்டுட்டு நான் ஓடித் தப்பின்னான். அந்த நேரத்தில அம்மான்ர நினைப்பு வராமல் போச்சு. நான் பத்தாம் ஆண்டு படிச்சுக் கொண்டிருந்த கடைசில நடந்த இந்த கொடூரத்தால பதினோராமாண்டில முதல் நாலைஞ்சு மாசமா நான் பள்ளிக்கூடம் போகேல்ல. என்னால அந்த சோகத்திலேந்து மீள முடியேல்ல. படிப்பு வேண்டாம் எண்டு நினைச்சிருந்தனான். அப்பாவும் சொந்தக்காரங்களும்எனக்கு ஆறுதல் சொல்லி பள்ளிக்கூடம் அனுப்பி வச்சினம். சாதரண தரச் சோதினை எழுதினன். எட்டு A ஒரு B. பாழாய்ப் போன ஆங்கிலத்துக்குத் தான் B.

உ/ தரத்தில கணிதம் தான் படிக்கிறதெண்டு எப்பவோ நான் தீர்மானிச்சுக் கொண்ட விசயம். முதல் ஆறு மாசம் பள்ளிக்கூடமும் தனியார் கல்வி நிறுவனமும் போய் படிச்சுக் கொண்டிருந்தனான். அப்பத்தான், பாழாய்ப் போன வயசு பதினெட்டைத் தாண்டிச்சுது.  வீட்டுக்கொருத்தர் நாட்டைக் காக்கப் புறப்படுக எண்டு கட்டாயப் படுத்தினாங்கள். தேடித் தேடி ஆக்களைப் பிடிக்கத் தொடங்கினாங்கள். நான் மட்டுமென்ன விதிவிலக்கோ?

ஒழிச்சு வாழ வேண்டிய நிலை. ஆரம்பத்தில வேறொரு இடத்தில இருந்த நான் என்ர சொந்த ஊருக்குத் திரும்பினன். ஊரிலேந்து பலர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான வேற இடங்களுக்குப் போயிட்டினம். கடும் செல்லடியால ஊரில பெரிசா ஒருத்தரும் இருக்கேல்ல. எனக்கு வேற வழி தெரியாமல் செல்லடியையும் பொருட்படுத்தாமல் ஊருக்கே போனன். வலுக்கட்டாயமா ஆக்களைச் சேக்கிறதில பொடியள் மும்முரமா நிண்டதால பகல் நேரத்தில ஒருத்தரும் புழங்காத பனங்கூடலுக்குள்ள காவோலைகளை சுத்தவரக் குமிச்சுப் போட்டு நடுவுக்குள்ள படுத்திருந்தன்.

மத்தியானச் சாப்பாட்டை அப்பம்மா ஒழிச்சுக் கொண்டு வருவா. பக்கத்துக் காணிக்குள்ள வந்து வச்சிட்டுப் போவா. நான் எடுத்துச் சாப்பிடுவன். அந்த நேரம் நிறையப் படிக்கோணுமெண்ட வெறியிருந்ததால என்னட்ட கிடந்த உயர்தரப் பாடப் புத்தகங்களை என்ர பாட்டில வாசிச்சன். சுயமாப் படிச்சன். பல பாடங்கள் தொடக்கத்தில விளங்காம இருந்தாலும் படிப்பிக்கவும் சந்தேகம் கேக்கவும் ஒருத்தரும் இல்லை. ஒண்டும் செய்யேலாது. என்ர அறிவுக்கெட்டின வகையில திரும்பித் திரும்பி வாசிச்சு அவையளை விளங்கிக் கொண்டன். பயிற்சிப் புத்தகங்களோ, செய்து பாக்க சோதினைப் பேப்பர்களோ இல்லை.

இரவு கடக்கரை மணல் வெளியில கொஞ்சம் பள்ளம் தோண்டிப் போட்டு படுத்திருப்பன். ஏனெண்டா இரவிரவா வெளிச்சத்தோட வீடு காணி வழிய பொடியள் தப்பியோடினாக்களைத் தேடுவாங்கள். கடக்கரையில ரோந்து போய்க் கொண்டிருப்பாங்கள். ஊராக்களும் மாறி மாறி ஒழுங்கு முறையில ரோந்து போகோணும். நான் படுத்திருக்க ரோந்து போறவங்கள் கதைச்சுக் கொண்டு போறது வடிவாக் கேக்கும்.  எல்லாத்தையும் தாண்டித் தான் நான் ஒழிக்க வேண்டிய நிலை.

ஒரு நாள் ரண்டு நாளில்ல, ஒண்டரை வருசம் நான் இப்பிடி வாழ்ந்தன். சூரியன் உதிச்சு மறையும் வரை ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி. நான் பல சந்தர்ப்பங்களில் அருந்தப்பில் பிடிபடாமல் தப்பியிருக்கிறன். அந்த நேரங்களில ஆமி அடிக்கிற மல்ரி பரல் முதல் எல்லா செல்களும் என்னைச் சுத்தி எங்கட ஊரில விழும். செவிப்பறை வெடிக்கும். எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு ஒழிச்சு இருந்தன்.

எங்கட தமிழாக்களின்ர குணம் தெரியும் தானே. தான் நல்லாயில்லட்டிலும் பரவாயில்லை. மற்றவன் நல்லாயிருந்தா பொறுக்காதே. ஆரோ ஒருத்தர் நான் ஊரில தான் இருக்கிறதா மாட்டிக் குடுத்திட்டாங்கள். என்ர அப்பாவைப் பிடிச்சுக் கொண்டு போய் என்னை ஒப்படைச்சாத்தான் விடுவன் எண்டாங்கள். என்னைப் பிடிச்சுத் தரச் சொல்லி அப்பாவை விடுவிச்சாங்கள். அதோட அப்பா தலை மறைவானவர்தான்.  எப்பவாவது இரவோட இரவா ஊருக்கு வந்து தான் உயிரோட இருக்கிற விசயத்த அப்பம்மாக்குச் சொல்லிப் போட்டு போடுவார்.

கடைசியில பொடியள் எங்கட இடத்தை விட்டுப் பின் வாங்க வேண்டிய நிலை. நான் கொஞ்ச தூரம் இடம்பெயர்ந்து போனன். பிறகு சனத்தோட சனமா ராணுவக் கட்டுப் பாட்டுக்குள்ள வந்தன். அங்க அனுபவிச்சத சொல்லத் தேவையில்லை. நாலு மணிக்கெழும்பி குழிச்சாத்தான் நல்ல நிலையிலுள்ள தண்ணியில குளிக்கலாம். சாப்பாடு தண்ணி உடுப்பு வசதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

அதுக்குள்ள இருந்து நான் எப்பிடியும் உ/த சோதினை எடுக்க வேணுமெண்டு முடிவெடுத்தன். படிக்கிற வசதி செய்து தரச் சொல்லி எத்தினை பேரைக் கெஞ்சினன். நான் மட்டுமில்லை என்னோட சில பொடியங்களையும் சேத்துக் கொண்டு மண்டாடினன். பல பெரியாக்கள் வந்து அது செய்யலாம் இது செய்யலாம் எண்டு அறிக்கை மட்டும் விட்டுட்டு போவினம். எதுவும் நடந்ததில்லை. கொஞ்சக் கொஞ்ச வசதி வாய்ப்புகள் படிக்கிறதுக்கு கிடைச்சது. அதுக்கு நன்றி சொல்லியே ஆகவேணும்.

நான் படிக்கிற பொடியன் எண்டு சொன்னபடியாத்தான் ஆமி விசாரணைக் கெடுபிடிகளிலேந்து ஓரளவுக்கேனும் விடுதலை கிடைச்சுது. அதுக்குள்ளேந்து படிக்கேக்க எங்கட மெத்தப்படிச்ச சில தமிழர்களே சொன்னாங்கள் நீ படிச்சு என்னத்த கிழிக்கப் போறாயெண்டு. இருந்தாலும் என்ர வைராக்கியத்தை நான் கை விடேல்ல.

நான் படிக்கிறதுக்கு எடுத்த முயற்சிக்கு சின்ன உதாரணம். முகாமுக்குள்ள வந்து போற அண்ணாமார் அக்காமர் சிலரைப் பிடிச்சு எனக்கிருந்த சில சந்தேகங்களைத் தீக்கிறதுக்கு ஆசுப்பத்திரியில ஆசிரியர் சிலரைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தன். ஏற்பாடு முடிஞ்சாப்பிறகு நான் ஆசுப்பத்திரிக்கு முகாமிலேந்து போக வேணுமெண்டா தமிழ் வைத்தியர் எனக்கு வருத்தமெண்டு உறுதிப்படுத்த வேணும். முதல் நாள் காச்சலெண்டு போய் காட்டினன். வைத்தியர் போக விடேல்ல. ரண்டாம் நாள் வைத்தியரட்டைப் போய் உண்மையைச் சொன்னன் படிக்கிறதுக்காகத்தான் நான் போக வேணுமெண்டு. வைத்தியர் நக்கலா நாலு கதையும் சொல்லி, படிச்சுக் கிழிச்சது காணுமெண்டு திட்டி போகேலாதெண்டு சொன்னார். இப்பிடிப் பல முயற்சி செய்து முகாமுக்குள்ள கிடைச்ச வசதியைக் கொண்டு படிக்கோணுமெண்ட வெறியில படிச்சன். உ/த பரீட்சை மண்டபத்தில நான் ஒருத்தன் தான் கணிதப் பிரிவு. எனக்காக நாலு பரீட்சை மேற்பார்வையாளர்கள்.

சோதினை முடிவில கணிதப்பிரிவில நல்ல பெறுபேறுகளை எடுத்ததால தகுதியடிப்படையில் மொறட்டுவை கம்பஸ் பொறியியல் பீடம் கிடைச்சுது. இஞ்ச வந்தா ஆங்கிலத்தில விரிவுரைகள். எனக்கு சரியாப் புரியேல்ல. நாலு வருசத்துக்குப் பிறகு ஒரு வகுப்பறையிலேந்து ஆசிரியர் படிப்பிக்க பாடம் படிக்கிறன். எனக்கு நித்திரை நித்திரையா வந்துது. என்னால சமாளிக்க முடியேல்ல. கம்பஸ் தொடங்கி மூண்டு மாசத்துக்குள்ள சோதினை. அந்த சோதினை தான் நான் படிக்க வேண்டிய பொறியியில் பிரிவைத் தீர்மானிக்கப் போகுது.

நான் எதிர்பார்த்த துறை எனக்குச் சில வேளை கிடைக்காமல் போகலாம். ஒரே காரணம் ஆங்கிலத்தில பாடங்களை என்னால தொடர முடியாமல் போனதுதான். ஆங்கில மொழியில ஒரு பாடத்தை படிக்கிறதுக்குரிய ஆயத்தத்தை செய்யுறதுக்கு அவகாசம் காணாததுதான். ஆனால் நீங்களெல்லாரும் என்னைப் பாத்து சொல்லுவீங்கள் வன்னி மாவட்டத்திலேந்து வந்தவனுக்கு ஒண்டுமே தெரியாதெண்டு. ஆனா அதப் பற்றி எனக்கு கவலையில்லை. இவ்வளவு முன்னேறி வந்த எனக்கு இப்பிடியொரு சிக்கல் வருமெண்டு கனவில கூட நினைச்சதில்லை. இருந்தாலும் மேலும் மேலும் படிக்க வேணுமெண்டிருக்கிற என்ர ஆர்வத்தை ஆராலையும் தடுக்கேலாது....

-------------------------------------------------------------------------------------------------------------

நான் சந்தித்த நண்பர்களில் இவனும் ஒருத்தன். இவனுடைய திறமை என்னை வியக்க வைத்தது. ஆனால் இவனை இந்த சமூகம் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாதது என்னைப் பாதித்தது. அவனுடைய வாழ்க்கையை அவனாக நான் இங்கே எழுதியிருக்கிறேன். நிறைய இருந்தாலும் முடிந்தளவு சுருக்கியிருக்கிறேன். 

எனக்குள்ளே எழுந்த சில கேள்விகள் :
  • இனங்காணப்படாத திறமைசாலிகள் இவனைப் போல பலர் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. எவ்வாறு அவர்களை இனம் காணுவது?
  • மின் விளக்கு வெளிச்சத்தில் படிச்சு, அம்மா சத்துணவு சமைச்சுத் தர, நேரத்துக்கு நேரம் சாப்பாடு சமைச்சு - தேத்தண்ணி போட்டுத் தர, மணித்தியாலத்துக்கொரு பிரத்தியேக வகுப்பு வச்சு, நாளுக்கொரு பயிற்சி சோதினை வச்சு, சந்தேகம் தீர்க்க வாத்திமார் டசின் கணக்கில இருக்கப் படிச்சு நல்ல பெறுபேறெடுத்த நம்மவர்கள் எங்கே? சுயமாக உ/த கணிதப்பிரிவில் கற்று சிறந்த பெறுபேறெடுத்த இவனைப் போன்றவர்கள் எங்கே? 
  • இவர்களுடைய அறிவுத் திறமை இப்பிடியே மழுங்கடிக்கப் பட்டு விடுமோ? 
  • மிகத் திறமையான இவனைப் போன்றவர்கள் மொழிப் பிரச்சினையால் பல்கலையில் திறமையற்றவர்களாக கணிக்கப்படுகிறார்களே... ஒருத்தனின் திறமையை எவ்வாறு சரியாக மதிப்பிட முடியும்?

-தனஞ்சி.