Wednesday, December 28, 2011

நள்ளிரவில்


சொய்சாபுரத்தில இருந்த காலத்தில ஒரு நாள் இரவு, கிட்டத்தட்ட அதிகாலை பன்னிரண்டு முப்பது மணியிருக்கும். சூடான கதை ஒண்டு கதைச்சுக் கொண்டிருந்ததால நாங்கள் நித்திரை கொள்ளேல்ல. திடீரெண்டு ஆரோ ஓடி வாற சத்தம்... எங்கட கதவைத் தட்டுற சத்தம்... ஓடிப் போய் முதலாம் மாடியிலேந்து குதிக்கிற சத்தம்... நாங்கள் குழம்பிப் போனம். என்ன நடக்குதெண்டு விழங்கேல்ல...

கொஞ்ச நேரத்தில எங்கட வீதியால ரண்டு பேர் ஓடி வந்தாங்கள். சிங்களத்தில “கொட்டி... கொட்டி...” (தமிழ்ல புலி.. புலி..) எண்டு சத்தம் போட்டுக் கொண்டு.. சமாதானம் செத்துக்கொண்டிருந்த காலம் எண்ட படியா பொடியள் ஆரையும் துரத்திக் கொண்டு வந்தவங்களோ? அவன் ஏன் வந்து எங்கட வீடுக் கதவைத் தட்ட வேணும்? எங்களுக்கு மெல்ல பயம் பிடிக்கத் தொடங்கிச்சுது. மெல்லமா எங்கட வீட்டு விளக்குகளை அணைச்சுப் போட்டு சன்னலோட ஒட்டி நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம் எண்டு யோசிச்சம். திடீரெண்டு கன சனம் எங்கட வீதியில கூடீட்டுது. கொட்டி கொட்டி எண்டு சொல்லிக் கொண்டு எங்கட வீட்டை கை காட்டி கதைக்கத் தொடங்கினம். எங்களுக்கு மெல்ல நடுங்கத் தொடங்கீட்டுது. பொலிஸ் வந்தால் எங்கள் எல்லாரையும் உள்ளுக்குக் கொண்டு போய்ப் போடப் போறான் எண்ட நிலை.

திடீரெண்டு ”ராமு (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) வாடா.. நான் சோமு சொல்லுறன். ஒரு பயமுமில்லை. வெளீல வாடா” எண்டு பலமா சத்தம் போட்டுக் கேட்டுது. இந்தக் குரல் எங்கட சிரேஸ்ட மாணவர் அண்ணா ஒருத்தருடையது. ராமு எங்கட மட்டத்தைச் சேர்ந்தவன். அவங்கள் ரண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கிறவங்கள். ஆனால் எங்கட வீட்டிலேந்து கிட்டத்தட்ட 600 மீற்றர் தூரத்தில இருக்கிறவங்கள். அவங்கள் ஏன் எங்கட வீதிக்கு தலை தெறிக்க ஓடி வரோணும்? சோமு ஏன் எங்கட வீடுப் பக்கம் வந்து பிறகு எங்கேயோ ஓடி ஒழிக்கோணும். ஒண்டுமே புரியேல்ல. வீதி முழுக்க சனம் ஓடித் திரியுது. சிங்களத்தில புலி புலி எண்டு சொல்லுறாங்கள்.எங்கட வீட்டைக் காட்டியும் கதைக்கிறாங்கள். கொஞ்ச நேரம் ஆடிப் போனம். வெளீல போய் நடந்தது என்ன எண்டு விசாரிக்க விரும்பேல்ல. பிடிபட்டால் உள்ளுக்குள்ள தான். உள்ளுக்குள்ள போட்டா ஆள் இருக்குதோ இல்லையோ எண்டும் தெரியாது, எப்ப வெளீல விடுவாங்கள் எண்டும் தெரியாது.

அந்த நேரத்தில எங்களுக்கு தெரிஞ்ச, அந்த நண்பர்களின்ர அறையிலேந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பு எடுத்தம், ”கொஞ்சம் பொறுத்தெடு” எண்டுட்டு அந்த இணைப்புத் துண்டிக்கப் பட்டது. எங்கட வீதியில வாகன சத்தம் கேட்டது.   மெதுவா எட்டிப் பாத்தம் வீதி வெளிச்சத்தில இவங்கள் ரண்டு பேரும் வாகனத்துக்குள்ள ஏத்தப் படூறது தெரிஞ்சது. நிலமை கவலைக்கிடம். திருப்பியும் அந்த அண்ணாக்கு அழைப்பெடுத்தம். இப்ப அவர் இணைப்பில இருக்கிறார். அவர் எதுவுமே பேசவில்லை. சிங்களத்தில சரமாரியாக உரையாடிக் கேட்குது. வாகனமும் ஓடிக் கொண்டிருக்கிற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அழைப்பு துண்டிக்கப் பட்டது. அந்த அண்ணாவும் வாகனத்தில் ஏற்றப்பட்டதை உணர்ந்து கொண்டோம்.

அவர்களிருந்த வீட்டுக்கு பக்கத்தில இருந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பெடுத்தம். நேற்று புதுசா எங்கட வீட்டுக்கு பக்கத்தில குடியிருக்க வந்த அண்ணன்மார் இருவரின் வீட்டில ’குடு’க்காரர் வந்து நிக்கிறாங்களாம். (போதை வஸ்து பாவிப்பவர்கள், அப்பப்ப வழிப்பறி களவுகளிலும் ஈடுபடுபவர்கள்). அவங்களுக்கு பயமா இருக்கெண்டு சொன்னதால தாங்கள் என்னண்டு பாக்கப் போறம் எண்டு தனக்குச் சொன்னவை எண்டு சொன்னார். இப்ப என்ன செய்யுறது. நடந்தது என்னண்டும் தெரியேல்ல...  

எங்களுக்கு அந்த நேரத்தில வந்த யோசினை மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு இதனைத் தெரியப்படுத்துறது. அந்த ராத்திரி நேரத்தில் (அதிகாலை 1 மணியிருக்கும்) அவருடைய தொலை பேசிக்கு அழைப்பு எடுத்தம். துணை வேந்தர் அழைப்புக்கு பதில் சொன்னார். எங்களுக்கு தெரிந்த விடயங்களை தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னோம். வாகனத்தில் ஏத்திக் கொண்டு போனதையும் அவர்களுடைய தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் சொன்னோம். அவர் சொன்னார் இன்னும் ஐந்து நிமிடத்தில் எம்முடன் மறு படியும் தொடர்பு கொள்வதாக... சிறிது நேரத்தில் துணைவேந்தர் எங்களுடைய தொலைபேசிக்கு அழைத்து சொன்னார் அவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் பிடிக்கப்பட்டு கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் இருக்கிறார்கள். விசாரணை முடிந்ததும் விடுவிக்கப்படுவார்கள். நீங்கள் ஒண்டும் பயப்படத் தேவையில்லை. அந்த நேரம் கெட்ட நேரத்திலும் மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தர் எங்களுக்கு உதவினார் எண்டு சொன்னால் நம்ப முடிகிறதா? 

பொலீஸ் பிடித்தார்களா? அப்படியானால் ஏன் இவர்கள் ஓடினார்கள்? 

அன்று நடந்தது என்ன?

நாங்கள் இருந்த பகுதி குடுக்காரர்களுக்கு பிரசித்தமானது. முதல் நாள் எங்களுடைய வீட்டுக்கு அண்மையில் குடி வந்த அண்ணன்மார்களுக்கு குடுக்காரர்களைப் பற்றி தெரிந்திருந்தது. அன்றைய நாள் பகல்வேளை அவர்கள் கணனி ஒன்றை வீட்டுக்கு கொண்டு வரும்போது வீட்டுக்கு முன்னால் ஓரிருவர் சந்தேகத்துக்கிடமாக நடமாடியிருக்கிறார்கள். தங்களுடைய வீட்டை நோட்டம் விட வந்த குடுக்காரர் எண்டு அவர்கள் நினைத்து விட்டார்கள். 

அண்டைக்கு இரவு பொலீஸ் சிவில் உடையில் சோதனையிட அவங்கட வீட்டுக்கு வந்திருக்கிறாங்கள். அவங்கள் வந்து வீட்டுக் கதவைத் தட்டினதைப் பாத்து வந்தது குடுக்காரர் எனப் பயந்து, பொலீசில் பிடிபட்ட அண்ணாக்கு அழைப்பெடுத்து உதவிக்கு வரும்படி கேட்டிருக்கிறார்கள். அவர் தன்னுடைய அறை நண்பர்கள் நால்வரையும் கூட்டிக்கொண்டு இவர்களுக்கு உதவிக்காக நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் புறப்பட்டு வந்திருக்கிறார். வந்த இடத்தில் சிவில் உடையில் நின்ற பொலீஸ் இவர்களை மறித்திருக்கிறான். வந்தவர்களும் மறிப்பது குடுக்காரர் என நினைத்து தப்புவதற்காக ஓடினார்கள். இதுதான் நடந்தது. பொலீஸ் துரத்தி பிடிச்சு கிட்டத்தட்ட ஒரு கிழமைக்குப் பின்னரே அவர்களை விடுவித்தனர். படிக்க வந்து கொஞ்ச நாள்ல நடந்த இந்த சம்பவமும் மறக்க முடியாதது.

- தனஞ்சி


Thursday, December 22, 2011

தண்ணிக் காசு


நாங்கள் இருந்த சொய்சாபுர வீட்டின்ர நீர் மானி எங்கட வீட்டுக்குள்ளேயே இருந்தது. அதனால நீர்மானி வாசிப்பாளர் எங்கட வீட்டுக்குள்ள வந்துதான் நீர்மானியை வாசிச்சு கட்டணம் அறவிட வேணும். நாங்கள் பாவிச்ச நீருக்கான கட்டணம் பாவிச்ச அலகுகளை அடிப்படையாகக் கொண்டது. முதல் 15 அலகுக்கும் 50 ரூபா, 15 - 20 அலகு பாவிச்சிருந்தால் 80 ரூபா அளவில வரும். 20-25 அலகு பாவிச்சிருந்தால் 250 ரூபா அளவில வரும். எப்பிடியும் இந்தக் கட்டணத்தை 100 ரூபாக்குள்ள கட்டுப்படுத்தியே ஆக வேணும் எண்டு யோசிச்சம். குளிக்காம இருக்கிறது சிறந்த தீர்வெண்டாலும் அதனால மற்றாக்களும் பாதிக்கப்படுவினம் எண்டதால என்ன செய்யலாம் எண்டு யோசிச்சம். அப்பத்தான் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்ர வழமை ஒண்டைக் கண்டு பிடிச்சம். அத எங்களுக்கு சாதகமா பயன்படுத்திறதெண்டு முடிவெடுத்தம். 

நீர்மானி வாசிப்பவர் வீட்டுக்குள்ள வந்து வாசிப்பை வாசிக்க முடியாமல் போனால் கடைசி மாதம் என்ன கட்டணம் வந்ததோ அந்தக் கட்டணத்தைத் தான் இந்த மாதக் கட்டணமாக அறவிடுவார். அப்ப ஒரு மாதம் மிகக்குறைஞ்ச கட்டணத்தை பதிவு செய்து போட்டு அடுத்த மாதத்திலேந்து அவரை உள்ள விடாமல் கதவைப் பூட்டி வச்சிருந்தால் அவர் பழைய கட்டணத்தை பதிவு செய்வார். நாங்கள் குறைஞ்ச கட்டணம் கட்டலாம். ஏன் நாங்கள் இப்பிடி செய்யத் துணிஞ்சனாங்களெண்டால் பெரும்பாலும் நாங்கள் ஊரில தான் நிக்கிறது. பெயர் தான் கம்பஸில படிக்கிறமெண்டு. சோதினை வருதெண்டால் தான் எல்லாரும் ஒண்டா நிப்பம். அந்த நேரம் தண்ணிக் காசு எகிறும். அடுத்த மாதம் எங்கட வீடு பூட்டிக் கிடக்கும். தண்ணி பாவிச்சிருக்க மாட்டம். சராசரியாப் பாத்தா 15 - 20 அலகுக்குள்ள தான் பாவிச்சிருப்பம். இந்த சராசரியை எங்களுக்கு சாதகமாப் பயன்படுத்திறதுதான் நோக்கம். 

அதன் படி தண்ணிக் கட்டணத்தை 80 ரூபாக்குள்ள மட்டுப்படுத்தி ரண்டு மாதம் வெற்றிகரமா எங்கட திட்டம் நிறைவேறிச்சு. நீர் மானி வாசிப்பாளர் வரும் திகதிகள் எங்களுக்கு கொஞ்சம் தெரியும். அந்தக் காலத்தில எங்கட வீட்டுக் கதவை ஆர் தட்டினாலும் திறக்கிறேல்ல. மூண்டாம் மாதம் மானி வாசிப்பாளர் வீட்டுக்குள்ள வந்து மானியை வாசிச்சா, கட்ட வேண்டிய கட்டணம் 700 ரூபாவை எட்டியது. இப்ப எங்களுக்கு ஒரு சிக்கல் வந்திட்டுது. அடுத்த முறை மானி வாசிப்பாளர் வரேக்க வீட்டில நாங்கள் நிண்டே ஆக வேணும் இல்லாட்டி திருப்பியும் 700 ரூபா வரும். பாவிக்காத தண்ணிக் காசும் சேர்ந்து எங்கட தலையில கட்டப்படும். 

அப்ப இன்னுமொரு வழி கண்டு பிடிச்சம், மானி வாசிப்பை எழுதி வீட்டுக் கதவில ஒட்டி விடுறது. மானி வாசிப்பாளர் அதனை மானி வாசிப்பாக கருதி கட்டணம் அறவிடுவார். எங்களுக்கு ஏற்றமாரி மானி வாசிப்பை கணக்குப் போட்டு வாசல்ல ஒட்டி விடுவம். மானி வாசிப்பளரும் அதை நம்பி அலகுகளைக் கணிப்பார். கொஞ்ச காலம் நீர்க் கட்டணமாக 100 ரூபாக்குள்ள செலுத்தின்னாங்கள்.

Wednesday, December 21, 2011

ஞாபகம்


நீண்ட நாட்களுக்கு பிறகு பல்கலைக் கழகம் சென்றதில் பழைய ஞாபகங்கள் சில வந்து போயின. நான் கற்ற காலத்தில் நிலவிய சூழல் இப்போது இல்லை. அன்றைய சூழல் பயம் மிக்கதும் அடுத்தது என்ன நடக்கும் எண்டு தெரியாததாகவும் இருந்தது. வீட்டிலிருந்து வெளிக்கிட்டால் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்வோமோ என்பது உறுதியில்லாமல் இருந்த காலம். அந்தக் கால கட்டங்களில் நிகழ்ந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வந்து போயின. சில சம்பவங்களை இப்ப நினைச்சால் சிரிப்பாக் கிடந்தாலும் அந்த நேரம் எங்கட வாழ்க்கை பயத்தோடே கழிந்தது. அவற்றில் என் நினைவுக்கு வரும் சில சம்பவங்களை மீட்டிப் பார்க்கிறேன்.

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கற்றதால் சொய்சாபுரம் தான் நானும் என்னுடைய நண்பர்களும் தங்கிய இடம். முதல் வருடம் சொய்சாபுர தொடர்மாடிகள் ஒன்றில் வீடு ஒன்றை எடுத்து மொத்தமாக நால்வர் பகிர்ந்து கொண்டோம்.  சிக்கனமான தொகைக்கு வீடு கிடைக்குதெண்டு எடுத்த வீட்டின் சூழல் எப்பிடி எண்டது கொஞ்ச நாள் போகத்தான் புரிஞ்சு கொண்டது. இனி என்ன செய்யுறது தலையைக் குடுத்திட்டம் பயத்தை வெளீல காட்டாமல் பிரச்சினைகளை எதிர் கொண்டே ஆக வேண்டிய சூழல்.  



நாங்கள் இருந்தது முதலாவது மாடி. ஒரே நீட்சியாக அமைந்திருந்த மூன்று தொடர் மாடிகளின் நடு மாடியில் எங்கள் வீடு. சன்னலால் எட்டிப் பார்த்தால் இந்தத் தொங்கல்லேந்து அந்த தொங்கல் வரையும் தெரியும். எதிர் மடிகளில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு பொழுது போக்கு. சிங்களத்தில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு விளங்காட்டிலும் ககைக்கிற தொனி, கையால் அடிபடுகின்ற மற்றும் கதவு சன்னல் அடிக்கப்படுற சத்தங்களை வைத்து சண்டையை நாங்களே கற்பனை பண்ணி அவர்கள் பேசுவதை எங்களுக்கு விரும்பிய தமிழுக்கு மாத்தி (டப்பிங் படங்களைப் போல) எங்களுக்குள் நக்கலடித்துக் கொள்ளுவம்.  நாங்கள் மூவர் ஒரே மட்டத்தைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரே சிந்தனை ஒரே ரசனையுள்ளவர்களாகவும் அரட்டையடிப்பதில் வல்லவர்களாகவும் இருந்தோம். 

பிறகென்ன கதைக்கப் பிடிச்சால் கதை அந்த மாரிப் போகும். சில வேளைகளில் படுக்கேக்க காலமை மூண்டு நாலு மணியாகும். சூடான விவாதங்கள் ஆளாளுக்கு நக்கல், அவன் அவள் அவர் எண்டு ஊருலகம் முழுக்க அலசி ஆராஞ்சு நாட்டு நடப்பு (சமாதானம் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருந்த காலப்பகுதி) எண்டு கதை நீளும். எங்களுக்கிடையில் ஒழிவு மறைவின்றி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உட்பட எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொண்டோம். கிட்டடியில சில காலம் நெருங்கிய தொடர்புகள் இல்லாமல் போன, அன்றைய அறை நண்பர்களில ஒருத்தனை சந்திச்சன். “மச்சான் அந்தக்காலத்திலேந்து எங்களுக்குள்ள ஒழிவு மறைவு இருந்ததில்லைத் தானே, வேறொருத்தருக்கும் சொல்லேல்ல உனக்கு மட்டும் சொல்லுறன்” எண்டு தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான முடிவு ஒன்றை எனக்கு சொன்ன போது எனக்கு வந்த சந்தோசத்துக்கு அளவேயில்லை. அவன் எங்க எங்கையோ போய் வந்தாலும் அதே நட்பு இண்டைக்கும் இருக்கு எண்டு நினைக்க சந்தோசம் தான். நீண்ட நேரம் அவனோட இருந்து பழைய சில ஞாபகங்களை மீட்டிச் சந்தோசப்பட்டன்.

- தனஞ்சி