Saturday, April 13, 2013

கிணத்தில தண்ணியள்ளி..


பள்ளிக்கூடம் படிச்சுக் கொண்டிருந்த பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் கிணத்தில தண்ணியண்ணிக் குளிச்சம். நாங்கள் சகோதரர் உறவுமுறையுள்ள (ஒரே வளவுக்குள் மூன்று வீடுகள்) அஞ்சு பேர் ஒரே கிணத்தில குளிச்சிட்டு பள்ளிக் கூடம் போகோணும். அத விட வேலைக்குப் போற மூண்டு பேரும் குளிக்க வேண்டும். ஆனாலும் ஒவ்வொருநாளும் எல்லாரும் குளிப்பம். 

எங்களுக்கிடையில் இருந்த ஒப்பந்தம் என்னண்டால் ஆர் முதல் கிணத்தடிக்குப் போகினமோ அவரே முதலாவதாகக் குளிக்கும் உரிமை உடையவர். குளிக்கும் உரிமையுடையவர் விரும்பினால் ஒத்துமாறல் அடிப்படையில் மாறிக் கொள்ளலாம். 

கிணத்தடியில் இடம்பிடிக்கிறதுக்கு சகோதரங்களுக்கிடையில் போட்டி. ஒரே நேரம் கிணத்தடியை நோக்கி ரண்டு பேர் வெளிக்கிட்டால் ஓடிப் போய் இடம் பிடிப்பம். ஓட்டப் போட்டி எண்டு வந்திட்டால் பெரும்பாலும் தங்கச்சிமார் என்னட்ட தோக்க வேண்டி வந்துடும். ஓடிப் போய் இடம் பிடிச்சிட்டு அவளைப் பாத்து “நான் தானே முதலாவது” எண்டு சொல்லி அவளை வம்புச் சண்டைக்கு இழுக்கிறதில ஒரு சந்தோசம்.  சிலவேளை எதிர்த்து வாதாடுவாள். சிலவேளை சின்னண்ணா என்னை முன்னுக்கு விடுங்கோ எண்டு கெஞ்சுவாள். கொஞ்ச நேரம் வம்பிழுப்பன். பிறகு அவளை முன்னுக்கு விட்டுடுவன். ஒருமுறை சண்டை உச்சக்கட்டத்துக்கு போய் இரு வீட்டுப் பெரியாக்களும் வந்து சமரசம் பேச வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இப்ப அதே கிணறு இருக்கு. கிணத்தில குளிக்க ஆக்களில்லை. வயசு ஏறினதாலயும் மின்சாரம் வந்து வீட்டுக்குள்ளையே குளியலறை வந்ததாலையும் போட்டி இல்லை. கிணத்தில கையால தண்ணியள்ளிக் குளிக்கும்போது சொந்தக் கையால உழைச்சுச் சாப்பிடும் போது தோன்றும் பெருமிதம் தோன்றும். மூடிய அறைக்குள் நின்று கொண்டு குளிக்கும் போது ஏற்படாத சுதந்திரம், சந்தோசம் இயற்கையை ரசித்தபடி கிணத்தில குளிக்கும்போது ஏற்படுகிறது. கிணத்த படத்தில காட்டி இதுதான் கிணறு எண்டு பிள்ளையளுக்கு சொல்லிக் குடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை...

- தனஞ்சி.