Sunday, June 16, 2013

தாய்மடி தேடி..

இன்னும் நினைவிருக்கு...
ஆரம்ப பாடசாலை நாட்களில் ஓர் நாள் பின்னேரம்..
நான் ஏதோ ஒரு குழப்படி செய்து விட்டேன்.
நான் குழப்படி செய்யுறதெண்டது புதினமில்லையே...
இப்பிலிப்பில் தடி முறித்து சுழறச் சுழற அடிச்சீங்கள்
கால்கள் முழுவதும் தழம்புகள்...
வலி தாங்க முடியாமல் நான் அழுதேன்
ஓடிப் போய் கட்டிலில் படுத்தபடி அழுதேன்...

அரவணைக்க வந்தீர்கள்.
தழம்புகளுக்கு வாயால் ஊதி ஒத்தடம் கொடுத்தீர்கள்
நோகுதோ எண்டு கேட்டு பதறினீர்கள்...
நான் அடிச்சது உன்னைத் திருத்தத் தான்...
வேற ஒண்டுக்குமில்லை எண்டு என்னிடம் மண்டாடினீர்கள்
என்னைத் தேற்றுவதற்காய் மாம்பழங்கள் வெட்டித் தந்தீர்கள்...
அன்று முழுவதும் எனக்குப் பக்கத்திலேயே இருந்து
என்னைப் பார்த்து பார்த்து மனம் வெந்தீர்கள்
நோகுதோ நோகுதோ எண்டு எத்தினை முறை கேட்டீர்கள் எண்டு
எனக்கு ஞாபகம் இல்லை..

அடிச்சது வலிச்சதை விட நீங்கள் அழுதது தான் வலிச்சது
என்னுடைய வலியை விட நான் அன்பு வைத்திருப்பவர்கள்
என்னால் வேதனைப் படுவதைத்தான் என்னால்
தாங்கிக் கொள்ள் முடியவில்லை..
அன்றுதான் நான் திடமாய் முடிவெடுத்தேன்
என்னுடைய வலி எவரையும் காயப்படுத்தக் கூடாது.
எனக்கு எத்தனை வலிகள் இருந்தாலும் அதனை முயன்றளவு
அன்பானவர்கள் முன்னிலையில் வெளிக்காட்டக் கூடாது

ஆனாலும் உங்களிடம் நான் எப்போதும் தோற்றுவிடுகிறேன்
என்னதான் நான் ஒழிக்க முயன்றாலும் கண்டு பிடித்துவிடுவீர்கள்
கொஞ்ச நாளைக்கு முதல் கூட, என்ன முகம்
வாடிக் கிடக்குது எண்டு கேட்டீர்கள்
எங்க தான் உந்த வித்தையை கற்றுக் கொண்டீர்களோ...
ஆறுதல் தேடி உங்களை நாடி ஓடி வருகிறேன்.

- தனஞ்சி