Thursday, July 18, 2013

யாழ் பொறியியல் பீடமும் எங்கட சனத்தின்ர கதையும்...

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அது ஆரம்பிப்பது நல்லதா இல்லையா என்ற விவாதம் இன்னமும் முற்றுப் பெறாமல் போய்க் கொண்டிருக்கிறது. இன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒருவர் இது சம்பந்தமாக விவாதித்ததை கேட்டு அதிர்ந்து போனேன்.

“எங்கட பொடியளின்ர படிப்பை பாழாக்குறதுக்குத் தானே தொடங்குறீங்கள். எங்க தொடங்கப் போறீங்கள்? கிளிநொச்சியில வெறும் காணி தானே இருக்கு. ஒழுங்கான கட்டிடங்கள் இல்லை. ஆய்வுகூட வசதிகள் இல்லை. அதுக்குள்ள கொண்டு போய் இஞ்சினியர் பொடியளைப் பாழாக்கப் போறியள். அவங்கள் படிச்சு முடிச்சு வெளியேற 8 வருசம் செல்லப் போகுது. இவங்கள் வெளியேறேக்க அவனோட மற்ற கம்பசுக்குப் படிக்கப் போனவங்கள் வேலைக்கு போய் 4 வருசம் அனுபவம் எடுத்திடுவாங்கள். எங்கட பொடியளை நீங்களே கெடுத்துக் குட்டிச் சுவராக்குங்கோ... உங்களுக்கென்ன சும்மா இருக்க சம்பளம் வரும்தானே... உங்கட பாட்டை நீங்கள் பாத்துக் கொள்ளுவீங்கள். படிக்க வாற பொடியளைப் பற்றி உங்களுக்கென்ன அக்கறை? எங்கட படிப்பை அழிக்கிறதுதானே அவங்கட நோக்கம். அதுக்கு நீங்களும் துணை போங்கோ... எங்கட தமிழ் சனம் அழிஞ்சது உங்களை மாரியானாக்களால தானே...

பொறியியல் பீடம் ஆரம்பிக்கிறது நல்லதோ கூடாதோ எண்ட விவாதம் காலாவதியாகி விட்டது. ’என்னாது காந்தி செத்துட்டாரா?’  என்று இப்போது கேட்பதைப் போன்றது. எனக்குத் தெரிந்து 1974ம் ஆண்டிலிருந்து பொறியியல் பீடம் ஆரம்பிப்பது பற்றிய முன்னெடுப்புகளும் விவாதங்களும் இருந்து கொண்டே இருக்கின்றன.    நான் விரும்பிறனோ விரும்பவில்லையோ அரசாங்கம் பொறியியல் பீடத்தை ஆரம்பித்தே தீரும். நான் விரிவிரையாளனாக சேருறனோ இல்லையோ விரிவுரைகள் நடக்கத்தான் போகுது. பொறியியல் பீடம் தொடங்குவது நல்லதோ இல்லையோ எண்ட விவாதத்தை இப்ப கதைக்கிறது பொருத்தமில்லாத விசயம், இது பலருக்கு ஏன் விளங்குதில்லை?

பொறியியல் பீட கட்டட திட்ட வரைவு


பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசங்கம் மேற்கொள்கிறது. ஆரம்பிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனை நானும் நீயும் வாக்குவாதப் பட்டோ, அறிக்கை விட்டோ நிறுத்த முடியாது எண்ட நிலைக்கு வந்து விட்டது. இப்ப நாங்கள் பார்க்க வேண்டியது, ஆரம்பிக்கப் பட இருக்கிற பொறியியல் பீடத்தை எப்பிடி முன்னிலைக்கு கொண்டு வருவது? அதுக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதனை நாங்கள் செய்கிறோமா என்பது தான்.

வெறும் காணியைத் தந்து கட்டிடம் கட்டித் தரலாம், வசதிகள் செய்து தரலாம் இப்ப நீங்கள் பொறியியல் பீடத்தை தொடங்குங்கோ எண்டு அரசாங்கம் சொல்லி இருக்கிறது எண்டால், படிக்க வாற பிள்ளைகளை எப்பிடி பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்?, அவர்களுக்கு எங்களால் முடிந்தளவு சிறப்பான கற்கை நெறிகளை வழங்குவதற்கான வழிவகைகள் என்ன?, எப்பிடி அவர்களுக்கு நாங்கள் உதவி செய்ய முடியும் என்று சிந்திப்பதை அல்லது அது சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டு, அதன் மூலம் பெறும் சிறந்த வழிமுறைகளை கையாளுவதை விடுத்து, இப்பவும் பொறியியல் பீடம் தொடங்குவது பிழை எண்டு விவாதித்துக் கொண்டிருக்க முடியுமோ? ஏன் எங்கட சமூகம் கள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அந்த நேரத்துக்குத் தேவையான விடயங்களைச் சிந்திக்காமல் திரும்பத் திரும்ப பழசையே சொல்லிக் கொண்டிருக்கிறது எண்டு இன்னும் எனக்கு விளங்கவில்லை.

பொறியல்பீடம் ஆரம்பிப்பதில் சிக்கல்கள் இருக்கிறது என்பது எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. முறையான கற்பித்தலை முதல் ஓரிரு வருடங்களுக்கு வழங்க முடியாத நிலை இருக்கிறது என்பதும் அதனை நானோ நீயோ கதைப்பதனால் நீக்கிவிட முடியாது என்பதும் பொறியியல் பீடத்தில் இணைந்து கொண்டுள்ள அனைத்து விரிவுரையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் தெளிவாக தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் பிரச்சினை பிரச்சினை என்று ஒதுங்கி நிக்காமல் தெளிவாகத் தெரிந்த பிரச்சினையை துணிச்சலோடு எதிர்கொள்ளுவோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை நம்பி வரும் மாணவர்களுக்கு எங்களால் முடிந்ததை அனைத்து தரப்பினரது உதவிகளோடும் முன்னெடுப்போம். அதற்கு ஏன் எங்கட சமூகம் ஒண்டு சேர்ந்து உதவி செய்ய முன்வரக்கூடாது?

நான் விரும்பிறனோ விரும்பவில்லையோ பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படத்தான் போகிறது. நான் விரிவுரையாளனாகிறனோ இல்லையோ விரிவுரைகள் நடக்கத்தான் போகிறது. ஆரம்ப காலங்களில் மாணவர்கள் பாதிக்க்கப் படத்தான் போகிறார்கள். இவ்வளவும் வெளிப்படை உண்மைகள். இதை சொல்லிக் காட்டுவதற்கு ஒருவரும் தேவை இல்லை. இப்போது நாங்கள் சிந்திக்க வேண்டியது, கதைக்க வேண்டியது, மாணவர்களுக்கேற்படப் போகும் பாதிப்புகளை எப்பிடி குறைக்கலாம்? பாதிக்கப்படப் போகிற மாணவர்களை எப்பிடி பாதிப்புகளிலிருந்து மீட்க முடியும்?  பொறியல்பீடத்தை எவ்வாறு முன்னிலைக்கு கொண்டு வரலாம்? இதை ஏன் இன்னும் எங்கள் சமூகம் (அனைவரையும் இங்கே குறிக்கவில்லை) புரிந்து கொள்ளவில்லை? ஏன் இன்னமும் பழைய, தற்காலத்திற்கு பொருந்தாத, செல்லாத கதைகளையே சொல்லிக் கொண்டிருக்கிறது?

- தனஞ்சி.