Wednesday, December 21, 2011

ஞாபகம்


நீண்ட நாட்களுக்கு பிறகு பல்கலைக் கழகம் சென்றதில் பழைய ஞாபகங்கள் சில வந்து போயின. நான் கற்ற காலத்தில் நிலவிய சூழல் இப்போது இல்லை. அன்றைய சூழல் பயம் மிக்கதும் அடுத்தது என்ன நடக்கும் எண்டு தெரியாததாகவும் இருந்தது. வீட்டிலிருந்து வெளிக்கிட்டால் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்வோமோ என்பது உறுதியில்லாமல் இருந்த காலம். அந்தக் கால கட்டங்களில் நிகழ்ந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வந்து போயின. சில சம்பவங்களை இப்ப நினைச்சால் சிரிப்பாக் கிடந்தாலும் அந்த நேரம் எங்கட வாழ்க்கை பயத்தோடே கழிந்தது. அவற்றில் என் நினைவுக்கு வரும் சில சம்பவங்களை மீட்டிப் பார்க்கிறேன்.

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கற்றதால் சொய்சாபுரம் தான் நானும் என்னுடைய நண்பர்களும் தங்கிய இடம். முதல் வருடம் சொய்சாபுர தொடர்மாடிகள் ஒன்றில் வீடு ஒன்றை எடுத்து மொத்தமாக நால்வர் பகிர்ந்து கொண்டோம்.  சிக்கனமான தொகைக்கு வீடு கிடைக்குதெண்டு எடுத்த வீட்டின் சூழல் எப்பிடி எண்டது கொஞ்ச நாள் போகத்தான் புரிஞ்சு கொண்டது. இனி என்ன செய்யுறது தலையைக் குடுத்திட்டம் பயத்தை வெளீல காட்டாமல் பிரச்சினைகளை எதிர் கொண்டே ஆக வேண்டிய சூழல்.  



நாங்கள் இருந்தது முதலாவது மாடி. ஒரே நீட்சியாக அமைந்திருந்த மூன்று தொடர் மாடிகளின் நடு மாடியில் எங்கள் வீடு. சன்னலால் எட்டிப் பார்த்தால் இந்தத் தொங்கல்லேந்து அந்த தொங்கல் வரையும் தெரியும். எதிர் மடிகளில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு பொழுது போக்கு. சிங்களத்தில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு விளங்காட்டிலும் ககைக்கிற தொனி, கையால் அடிபடுகின்ற மற்றும் கதவு சன்னல் அடிக்கப்படுற சத்தங்களை வைத்து சண்டையை நாங்களே கற்பனை பண்ணி அவர்கள் பேசுவதை எங்களுக்கு விரும்பிய தமிழுக்கு மாத்தி (டப்பிங் படங்களைப் போல) எங்களுக்குள் நக்கலடித்துக் கொள்ளுவம்.  நாங்கள் மூவர் ஒரே மட்டத்தைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரே சிந்தனை ஒரே ரசனையுள்ளவர்களாகவும் அரட்டையடிப்பதில் வல்லவர்களாகவும் இருந்தோம். 

பிறகென்ன கதைக்கப் பிடிச்சால் கதை அந்த மாரிப் போகும். சில வேளைகளில் படுக்கேக்க காலமை மூண்டு நாலு மணியாகும். சூடான விவாதங்கள் ஆளாளுக்கு நக்கல், அவன் அவள் அவர் எண்டு ஊருலகம் முழுக்க அலசி ஆராஞ்சு நாட்டு நடப்பு (சமாதானம் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருந்த காலப்பகுதி) எண்டு கதை நீளும். எங்களுக்கிடையில் ஒழிவு மறைவின்றி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உட்பட எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொண்டோம். கிட்டடியில சில காலம் நெருங்கிய தொடர்புகள் இல்லாமல் போன, அன்றைய அறை நண்பர்களில ஒருத்தனை சந்திச்சன். “மச்சான் அந்தக்காலத்திலேந்து எங்களுக்குள்ள ஒழிவு மறைவு இருந்ததில்லைத் தானே, வேறொருத்தருக்கும் சொல்லேல்ல உனக்கு மட்டும் சொல்லுறன்” எண்டு தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான முடிவு ஒன்றை எனக்கு சொன்ன போது எனக்கு வந்த சந்தோசத்துக்கு அளவேயில்லை. அவன் எங்க எங்கையோ போய் வந்தாலும் அதே நட்பு இண்டைக்கும் இருக்கு எண்டு நினைக்க சந்தோசம் தான். நீண்ட நேரம் அவனோட இருந்து பழைய சில ஞாபகங்களை மீட்டிச் சந்தோசப்பட்டன்.

- தனஞ்சி

No comments :

Post a Comment