Friday, October 04, 2013

அஞ்சாமாண்டு பெறுபேறும் விளைவுகளும்

எனக்கு இன்னமும் விளங்காமல் இருக்கிறதுகளில ஒண்டு எங்கட சனம் ஏனுந்த அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் சோதினைக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குறாங்கள் எண்டதுதான். பத்திரிகையில ஒரு விளம்பரம் அஞ்சாம் ஆண்டு சித்தியடைஞ்ச ஒருவருக்கு பட்டமளிப்பு விழாவுக்கு அணியிற மாதிரி ஒரு தொப்பியும் அதற்குரிய ஒரு உடுப்பும் போட்டு உறவினர்களால வாழ்த்து விளம்பரம் போடப்பட்டிருந்தது.

தனிப்பட்ட விளம்பரம் போடுறது அவரவர் உரிமை, அதை நான் தடுக்கவில்லை. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தான் நான் யோசிக்கிறேன்.  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் வறிய மாணவர்கள் மட்டுமே மாதாந்த உதவி கிடைக்கும். பலருக்கு கிடைப்பதில்லை. இதனை எந்தவொரு பெற்றோரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சித்தியடையாத மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். சித்தியடையாத மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்பார்கள். இதுவே பல பிரச்சினைகளுக்கு ஆரம்பமாக அமைவதுமுண்டு.  இதில சித்தியடையாவிட்டால் வாழ்க்கையே தொலைஞ்சு போகுமெண்ட பிழையான எண்ணம் மாணவர்கள் மத்தியில விதைக்கப் படுகிறது.

சுயமாக கற்றலை இன்னும் உணராத வயதிலுள்ள மாணவர்களுக்கு கல்வி மேல் வெறுப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். கல்விக்கு முக்கியம் குடுக்கப்படலாம் தான் அதுக்காக அதில்லையெண்டால் எதுவுமேயில்லை எண்ட மாயை உருவாக்கப்படக்கூடாது. அதுவும் சிறு வயதிலேயே... 

பெற்றோர்களே, உறவினர்களே அஞ்சாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்தளவுக்கு பெரிசாக்கி விளம்பரம் பண்ணுவதன் மூலம் சிறு பிள்ளைகளின் மனதில் குறைந்த புள்ளியெடுத்தவர்களை ஒதுக்கி வைக்கும் மனப்பாங்கையும் மற்றவர்களின் மேல் வெறுப்பு, பொறாமை காழ்ப்புணர்ச்சிகள் வளர்வதையும் ஊக்குவிக்காதீர்கள். இந்த பெறுபேற்றை வைத்து நான் படிப்பதற்கு பொருத்தமற்றவன் என எந்தவொரு மாணவனோ அல்லது எனது பிள்ளை படிப்பதற்கு லாயக்கில்லாதவன் என எந்தவொரு பெற்றோரும் முடிவெடுப்பார்களாயின் அதுவே அவர்களது வாழ்க்கையின் அழிவின் ஆரம்பமாகும். அதில் எந்த உண்மையும் இல்லை என்பதை நாம் உணர்வதேயில்லை. 

- தனஞ்சி

No comments :

Post a Comment