Sunday, August 30, 2009

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு...

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு அஞ்சலோட்டத்தின் கோல் இப்போது என்வசம்.ஓடுவமோ வேண்டாமோ, ஓடினால் வெல்லுறது சந்தேகம் தான். இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில்  பங்குபற்றுதல்தான் முக்கியம். வெற்றி தோல்வியல்ல (என்னைப் போல ஏலாவாளியள் சொல்லுற சாட்டு) என்பதற்காகவும் என்னிடமிருந்து கோலைப் பெற்று மறுகரையில் ஓடுவதற்கு தயாராகக் காத்திருக்கின்ற நண்பர்களுக்காகவும் நான் ஓட வேண்டிய நிலை. மு.மயூரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு வந்தியண்ணாவால் தொடரப்பட்டு கீத்தினால் என்னிடம் தரப்பட்டிருக்கிறது. பள்ளிக்காலத்தில் கீத்தும் நானும் ஒரே இல்லமாக இருந்தாலும் என்னிடம் ஒரு நாளும் கீத் அஞ்சலோட்டக் கோலைக் கொண்டு வந்து தந்ததில்லை. (நான் அஞ்சலோட்டம் ஓடினால்தானே என்னிடம் கோலைத் தாறதுக்கு) 
வலைப்பதிவில மாட்டுப்பட்டுப் போனன். இது என்னுடைய இருபத்தைந்தாவது பதிவு (எதிர்பாராத நிகழ்வு). இதில் என்னைப் பதிவுலகிற்கு அழைத்து வந்தவர்களை மீட்டிப் பார்ப்பதில் மிகவும் சந்தோசமே.

விதி முறைகள்.

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.
2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும்.
3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

நான் எழுத வந்த கதை

முதன்முதல் வலைப்பதிவுகளைப் பற்றியும் தன்னுடைய வலைப்பதிவைப் பற்றியும் என்னுடன் கலந்துரையாடி என்னையும் எழுதச் சொல்லிக் கேட்டவன் விமலாதித்தன். (அவனுடைய வலைப்பதிவு  முகவரியைத் தொலைத்தது சோகக்கதை). அப்போது நான் எழுதும் எண்ணம் துளியும் கொண்டிருக்கவில்லை. மூஞ்சிப் புத்தகத்தில (face book) ஆதிரை அண்ணா வலைப்பதிவுகளின் இணைப்புகளைக் கொடுப்பார். தன்னுடையது மட்டுமன்றி சிறந்த வலைப்பதிவுகளையும் இணைப்பார். அதேபோல மூஞ்சிப் புத்தகத்தில் எனக்கு நண்பர்களாக இருக்கின்ற கீத், சுபானு, நிமல், பனையூரான், பிரவீன் மற்றும் விமலாதித்தன் ஆகியோரும் இணைப்புக் கொடுத்திருப்பார்கள். அவற்றை மட்டும் வாசிப்பேன். தேடித்தேடி வாசிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை. நான் அவ்வளவு சோம்பேறி (பால்குடி தானே).

இவர்களின் பதிவுகளால் கவரப்பட்டு நானும் ஒண்டு தொடங்கினா என்ன எண்டு நினைத்தேன். அந்த நினைப்பு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல்.(சுபானு என்னுடைய பயணக்கட்டுரை ஒன்றை வெளியிடுவது பற்றி கதைத்தபோது தோன்றிய நப்பாசை). ஆனாலும் என்னுடைய சோம்பேறித்தனத்தால் மிக அண்மையிலேயே ஆரம்பிக்க முடிந்தது. ஆரம்பித்தாலும் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை- பதிவர் சந்திப்பு நடக்கும் வரை.
அண்ணன் ஆதிரையின் தொலைபேசி அழைப்புக்கு நானும் வாறன் என்று பதில் சொல்லி சந்திப்பு ஏற்பாடுகள் பற்றி கதைக்க ஒன்று கூடினோம்.  நீண்டகாலமாக பதிவுலகை ஆண்டு வரும் வந்தியத்தேவன் அண்ணாவையும் பதிவால் மட்டுமல்ல கு்ரலாலும் அனைவரையும் கவர்ந்த லோஷன் அண்ணாவையும் சதீஷையும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் முதற்சந்திப்பிலேயே முன்பின் தெரிந்தவர்கள் போல என்னுடன் பழகிக்கொண்டார்கள். பிறகென்ன பதிவர் சந்திப்பில பலரைச் சந்தித்தேன். எல்லோருமே இயல்பாகப் பழகினார்கள். எண்ணிக்கையைப் பார்த்து நான் வியந்து போனேன். தொடர்ந்து முடிந்தளவு எழுதலாம் என நினைக்கிறேன். இருந்தாலும் என்னுடைய பதிவுகள் பெரும்பாலும் நினைவு மீட்டல்களாகவோ அல்லது எமது சமூகம் சார்ந்தவையாகத்தான் இருக்கும். (வந்தியண்ணா தான் நொந்த கதையைச் சொன்ன பின்னரும் நான் மாறுவதாக இல்லை). எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்று சொல்வதைவிட கிடைக்கும் நேரத்தில் பெரும்பகுதியை நண்பர்களுடன் கூடி அரட்டையடிப்பதிலேயே செலவிடுகிறேன் (இதற்காகவே செந்தில் குடும்பத்தார் வீட்டின் ஒரு பகுதியையும் வெள்ளவத்தைக் கடற்கரை ஒரு பகுதியையும் ஒதுக்கித் தந்தது வேறு விடயம்). இனி வரும் காலங்களில் நிறைய பதிவிடலாம் என்றே நம்புகிறேன்.

எனக்கு வலைப்பதிவு ஆரம்பிப்பதில் பெருமளவு சிக்கல் இருக்கவில்லை. ஆதிரை அண்ணாவின் ஆலோசனைகளுடனும் (என்னுடைய வலைப்பூவின் முதல் கருத்துரையும் அவருடையதே) சுபானு நிமலின் ஆலோசனைகளுடனும் இலகுவில் ஆரம்பிக்க முடிந்தது. நான் தட்டச்ச NHM Writer இன் Phonetic முறையைப் பயன்படுத்தி வருகிறேன்(விமலாதித்தனின் அறிமுகத்தினால்). தமிழ் எழுத்துக்களை நன்கு தெரிந்து வைத்திருப்பதால் வேகமாகத் தட்டச்சு செய்ய இம்முறை பயன்படுவதாகக் கருதுகிறேன்.

என்னுடைய அழைப்புகள்.

அதிகம் எழுதாத என்னை பதிவுலகின் அனுபவம் மிக்க கீத் நட்புடன் அழைத்திருப்பது என்னை ஊக்குவிப்பதற்க்காக என்றே நான் கருதுகிறேன். அதே போல நானும் என்னுடைய நண்பர்களை அழைப்பதன் மூலம் அவர்களை மேலும் எழுதத் தூண்டலாம் என்றே நம்புகிறேன். அதனால் எல்லோர் மத்தியிலும் பிரபல்யமான பெரியவர்களை (நண்பர்கள் பிரவீன், நிமல் உட்பட) அழைக்கவில்லை (அனைவரும் என்கருத்தை புரிந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்). 

விமலாதித்தன்: முதன் முதல் வலைப்பதிவைப் பற்றி என்னுடன் கலந்துரையாடியவன். நிறையப் புத்தகங்கள் வாசித்தறிந்தவன். சிறந்த விவாதப் பேச்சாளனும் கூட. ஊரில் என் பக்கத்து வீட்டுக்காரன்.  தவிர்க்க முடியாத, தமிழனுக்கேயுரித்தான போர்ச்சூழ்நிலையால் நாம் சின்னஞ்சிறு வயது முதலே பிரிந்திருந்தாலும் இன்றும் எம்முடன் உறவு கொண்டாடுபவன். இந்தச் சந்தர்ப்பத்தில் மூஞ்சிப்புத்தகத்தில் இவன் பிரசுரிக்கும் தொடர்கதைகளை வலைப்பதிவிலும் பிரசுரிக்க வேண்டும் என நட்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

பனையூரான் : இவன் என்னுடன் ஒன்றாகப் படித்தவன். நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். தற்போது அவன் வசிக்கும் சூழல் தமிழுக்குப் பொருத்தமற்றதாக இருப்பினும் தமிழிலில் எழுதி தமிழை வளர்க்க வேண்டும் என்ற துடிப்புள்ளவன். எனக்கு திரட்டிகள் பற்றிய ஆலோசனை தந்தவன்.

சுபானு: இவனைப்பற்றி என்னைவிட வலைப்பதிவர்களுக்கு நன்றாகத் தெரியும். பதிவுலகில் பிரபல்யமானவன். இவனும் என்னுடன் படித்தவன். ஊஞ்சல் கட்டி அனைவரையும் ஆட வைத்துக்கொண்டிருப்பவன். சில வேளைகளில் தூதும் விடுகிறான். படிக்கும் காலங்களில் இவனுடன் இடைக்கிடை கருத்து மோதல்களில் ஈடுபட்டதும் உண்டு. எல்லோரினதும் செல்லப்பிள்ளை இவன்.

யசீர் நிஷார்தீன்
: குட்டிச் சுட்டிப் பயல். நானெல்லாம் கணனியைக் கண்டது பதினாறு வயதில- அதுவும் யாழ் பல்கலைக்கழக கண்காட்சியில. பாவிக்கத் தொடங்கியது உயர்தரத்துக்குப் பிறகு. ஆனால் ஆறாம் தரத்திலேயே வலைப்பதிவை மேற்கொள்வதனால் என்னைக் கவர்ந்த இந்த சிறுவனை, பால்குடி நான் அழைக்கிறேன்.

அப்பாடா ஒரு மாதிரி அஞ்சல் கோலை கை மாற்றியாயிற்று.எங்கே உங்கள் கதையை எழுதத் தொடங்குங்கள்.



16 comments :

  1. சுருக்கமாய் முடிச்சிட்டீர் பால்குடி.... முழுக்க முழுக்க பாமினியில ஒரு பின்னூட்டம்

    ReplyDelete
  2. பதிவு எழுத வந்த கதை- என்னை அழைத்ததுக்காக நன்றி அண்ணா

    ReplyDelete
  3. முதல் வருகை உங்கள் தளத்திற்குள்.....

    தளமும், ஆக்கங்களும் அருமையாக இருக்கிறது...

    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  4. வாழ்த்துகள்.... :)

    ReplyDelete
  5. பால்குடி பேரில் மட்டும் தான் என்று லோஷன் எழுதியிருந்தார் அது உண்மை. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  6. விஷயத்தை என்னிடம் விட்டிட்டாய் . இப்ப எங்களுக்கு study leave எண்டாலும் எலுமானவரை கெதியா எழுதப் பார்க்கிறன்.

    ReplyDelete
  7. follower gadget ஐ சேர் உன்னுடைய தளத்தில்

    ReplyDelete
  8. கீத்,யசீர்,அபூ பக்கர்,நிமல்,யோ வாய்ஸ் மற்றும் பனையூரான் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. //சுருக்கமாய் முடிச்சிட்டீர் பால்குடி.... முழுக்க முழுக்க பாமினியில ஒரு பின்னூட்டம்

    கீத், தொடர்ந்தும் பாமினியில் எழுதும் நோக்கமோ அல்லது சும்மா ஒரு முயற்சியோ?

    பனையூரான், விரைவில் இணைக்கிறேன்.

    ReplyDelete
  10. அழகாகவும் சுருக்கமாகவும் முடித்துவிட்டீர்கள் பால்குடி. 25 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். நான் கணபதிப்பிள்ளை இல்லம் நீங்கள் என்ன ஹவுஸ்?

    நண்பர் ஆதிரைக்கும் வாழ்த்துக்கள் உங்களை மட்டுமல்ல பலரை எழுதத்தூண்டியிருக்கின்றார்.

    //வெள்ளவத்தைக் கடற்கரை ஒரு பகுதியையும் ஒதுக்கித் தந்தது வேறு விடயம்//

    வெள்ளவத்தைக் கடற்கரையில் இருந்து சிந்தித்து நிறைய எழுதுங்கள், அங்கே வரும் குடைகளே பல கதை சொல்லும்.

    ReplyDelete
  11. வந்தியண்ணாவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    நாங்கள் தாமோதரம் இல்லம் (வெள்ளிக்கிழமைக் கூட்டுமுறைக்காரர்)
    ஆதிரையண்ணா கல்லூரியில் ஆற்றிய ‘மாணவர் சக்தி மாபெரும் சக்தி’ என்ற உரை மாணவர்கள் மத்தியில் பிரபல்யமானது. அவர் பலருக்குத் தூண்டுகோலாக இருந்தது உண்மையே.
    குடையைப் பற்றி எழுதுவதை விட குடைக்குள் நடப்பதை எழுதலாம் எண்டா குடையை விலத்தி நடப்பதை பாக்குறதுக்குள்ள விழுகிற அடியை என்னுடம்பு தாங்காது.

    ReplyDelete
  12. அட... உங்களின்ர கல்லூரியிலும் ஒரு ஆதிரை இருந்திருக்கிறார். :)

    ReplyDelete
  13. மாயா மற்றும் ஆதிரையின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் பால்குடி!

    ReplyDelete
  15. ஆதித்தனின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete