Friday, July 24, 2009

அவசர வேண்டுகோள்!!!

வவுனியா முகாம்களில் வாழும் இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் தம்முடைய கல்வித் தேவைக்காக சில பாடப் புத்தகங்களை வாங்கித்தருமாறு கேட்டிருக்கிறார்கள். கொழும்பிலிருந்து கல்வி கற்பிக்கச் செல்லும் ஆசிரியர்களூடாக கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய உரிமையுடன் கூடிய அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் (ICUTS) என்ற அமைப்பினூடாக தங்களாலியன்றதை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு சில மாதங்களாக சிறப்பான முறையில் இதனை முன்னெடுத்திருக்கிறார்கள். இதனை அவர்களின் http://www.icuts.org/ இணையத்தளத்தினூடாக அறிய முடிகிறது. ஆனால் அவர்கள் தற்போது நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். இதுவரையிலும் சிறப்பாகச் செய்ய முடிந்ததை தற்போது நிதி நெருக்கடியால் செய்யமுடியாமல் போகின்றதே என்கின்ற மாணவர்களின் மன வலியை அவர்களின் அவசர வேண்டுகோள் மூலமாக உணர முடிகிறது. பரீட்சை மிக நெருங்கி விட்ட நிலையிலும் தங்களாலியன்றதை செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியோடு நிற்கிறார்கள்.

எம்முறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட உள்ளங்களே! தயவு செய்து நீங்களாக முன்வந்து மாணவர்களின் கல்விக்காக உதவி செய்யுங்கள். இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள நபருடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விரைந்து உதவுங்கள். அவர்களின் நெல்லெண்ணம் ஈடேற உதவுங்கள். மேலதிக விபரங்களுக்கு... http://www.icuts.org/


முகாம்களில் வாடும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதன் மூலம் அவர்களை கல்வி கற்க ஊக்கப்படுத்தலாம். இந்த முறை குறுகிய ஆயத்தப்படுத்தலின் மூலமாக சிறந்த பெறுபேறு பெறுவது கடினமாயினும் அடுத்த வருடமாயினும் அவர்கள் சிறந்த பெறுபேற்றுக்காக முயல்வார்கள். கோட்டா முறை மூலம் உள்வாங்கப்படும் மாணவர்களின் நலன் கருதியாயினும் கற்றலுக்கு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். அடுத்த வருடம் கற்கவிருக்கும் மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் கைமாறும். வேறு பொழுது போக்குகளோ கதைப்புத்தகங்களோ இல்லாத நிலையில் அங்கு வாடும் மாணவர்கள் தொடர்ந்து இப்புத்தகங்களை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு முயல்வார்கள்.

முகாம்களுக்குள் நுழையவே முடியாத இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் உயர்தரப் பரீட்சை காலத்தோடு முடிவுக்கு வரலாம். அதற்கிடையில் முடிந்தளவு செய்வதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முயல்கிறார்கள். அதே நேரம் அங்கு வாடும் மாணவர்களுடன் வெளியேயிருந்து தொடர்புகளை உருவாக்கி மாணவர்களின் மனதில் நம்பிக்கையையும் எதிர்காலம் மீதான புத்துணர்வையும் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

புத்தகங்கள் கொடுப்பதனால் முகாம்களில் வாடும் மக்களின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் உண்டாகும் என்றோ அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்றோ வீண் விதண்டாவாதம் செய்யும் நேரம் இதுவல்ல. எமது நாட்டின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டவர்கள், இடம் பெயர்ந்து எல்லாத்தையும் இழந்து வாடும் கொடுமையை அனுபவித்தவர்களுக்கு இன்றைய அவல நிலை புரியும்.

உதவிக்காக ஏங்கித் தவிக்கும், கடிதம் எழுதிவிட்டு பதிலுக்கு கல்விப் புத்தகங்கள் வந்து சேரும் என்று காத்திருக்கும், மற்றைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அன்புத் தம்பி தங்கைக்காக நான் இதுவரை என்ன செய்தேன்? தேடியும் விடை கிடைக்கவில்லை. உங்களிடம் விடை இருக்கிறதா?

No comments :

Post a Comment