Sunday, February 26, 2017

போய் வாருமையா...

தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட குரல்களில் சாந்தனின் குரல் இரண்டாவது. (முதற்குரல் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஒலித்தாலும் அதற்கு ஈர்க்கப்படாத/ கட்டுப்படாத தமிழர்களே இல்லை எனலாம்.)

எத்தனை எத்தனை உள்ளங்களை ஒரு புள்ளியில் இலட்சியத்திற்காக பாடல்கள் மூலம் இணைத்த குரல்களில் முதன்மையான குரலுக்குச் சொந்தக்காரன் இன்று விதைக்கப்படுகிறார். உம் குரல் என்றென்றும் ஈழத் தமிழர் மனங்களில், அவர்களின் உணர்வுகளோடு வாழுமையா... நீர் போய் வாரும்...

-தனஞ்சி

Friday, October 04, 2013

அஞ்சாமாண்டு பெறுபேறும் விளைவுகளும்

எனக்கு இன்னமும் விளங்காமல் இருக்கிறதுகளில ஒண்டு எங்கட சனம் ஏனுந்த அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் சோதினைக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குறாங்கள் எண்டதுதான். பத்திரிகையில ஒரு விளம்பரம் அஞ்சாம் ஆண்டு சித்தியடைஞ்ச ஒருவருக்கு பட்டமளிப்பு விழாவுக்கு அணியிற மாதிரி ஒரு தொப்பியும் அதற்குரிய ஒரு உடுப்பும் போட்டு உறவினர்களால வாழ்த்து விளம்பரம் போடப்பட்டிருந்தது.

தனிப்பட்ட விளம்பரம் போடுறது அவரவர் உரிமை, அதை நான் தடுக்கவில்லை. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தான் நான் யோசிக்கிறேன்.  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் வறிய மாணவர்கள் மட்டுமே மாதாந்த உதவி கிடைக்கும். பலருக்கு கிடைப்பதில்லை. இதனை எந்தவொரு பெற்றோரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சித்தியடையாத மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். சித்தியடையாத மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்பார்கள். இதுவே பல பிரச்சினைகளுக்கு ஆரம்பமாக அமைவதுமுண்டு.  இதில சித்தியடையாவிட்டால் வாழ்க்கையே தொலைஞ்சு போகுமெண்ட பிழையான எண்ணம் மாணவர்கள் மத்தியில விதைக்கப் படுகிறது.

சுயமாக கற்றலை இன்னும் உணராத வயதிலுள்ள மாணவர்களுக்கு கல்வி மேல் வெறுப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். கல்விக்கு முக்கியம் குடுக்கப்படலாம் தான் அதுக்காக அதில்லையெண்டால் எதுவுமேயில்லை எண்ட மாயை உருவாக்கப்படக்கூடாது. அதுவும் சிறு வயதிலேயே... 

பெற்றோர்களே, உறவினர்களே அஞ்சாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்தளவுக்கு பெரிசாக்கி விளம்பரம் பண்ணுவதன் மூலம் சிறு பிள்ளைகளின் மனதில் குறைந்த புள்ளியெடுத்தவர்களை ஒதுக்கி வைக்கும் மனப்பாங்கையும் மற்றவர்களின் மேல் வெறுப்பு, பொறாமை காழ்ப்புணர்ச்சிகள் வளர்வதையும் ஊக்குவிக்காதீர்கள். இந்த பெறுபேற்றை வைத்து நான் படிப்பதற்கு பொருத்தமற்றவன் என எந்தவொரு மாணவனோ அல்லது எனது பிள்ளை படிப்பதற்கு லாயக்கில்லாதவன் என எந்தவொரு பெற்றோரும் முடிவெடுப்பார்களாயின் அதுவே அவர்களது வாழ்க்கையின் அழிவின் ஆரம்பமாகும். அதில் எந்த உண்மையும் இல்லை என்பதை நாம் உணர்வதேயில்லை. 

- தனஞ்சி

Thursday, July 18, 2013

யாழ் பொறியியல் பீடமும் எங்கட சனத்தின்ர கதையும்...

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அது ஆரம்பிப்பது நல்லதா இல்லையா என்ற விவாதம் இன்னமும் முற்றுப் பெறாமல் போய்க் கொண்டிருக்கிறது. இன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒருவர் இது சம்பந்தமாக விவாதித்ததை கேட்டு அதிர்ந்து போனேன்.

“எங்கட பொடியளின்ர படிப்பை பாழாக்குறதுக்குத் தானே தொடங்குறீங்கள். எங்க தொடங்கப் போறீங்கள்? கிளிநொச்சியில வெறும் காணி தானே இருக்கு. ஒழுங்கான கட்டிடங்கள் இல்லை. ஆய்வுகூட வசதிகள் இல்லை. அதுக்குள்ள கொண்டு போய் இஞ்சினியர் பொடியளைப் பாழாக்கப் போறியள். அவங்கள் படிச்சு முடிச்சு வெளியேற 8 வருசம் செல்லப் போகுது. இவங்கள் வெளியேறேக்க அவனோட மற்ற கம்பசுக்குப் படிக்கப் போனவங்கள் வேலைக்கு போய் 4 வருசம் அனுபவம் எடுத்திடுவாங்கள். எங்கட பொடியளை நீங்களே கெடுத்துக் குட்டிச் சுவராக்குங்கோ... உங்களுக்கென்ன சும்மா இருக்க சம்பளம் வரும்தானே... உங்கட பாட்டை நீங்கள் பாத்துக் கொள்ளுவீங்கள். படிக்க வாற பொடியளைப் பற்றி உங்களுக்கென்ன அக்கறை? எங்கட படிப்பை அழிக்கிறதுதானே அவங்கட நோக்கம். அதுக்கு நீங்களும் துணை போங்கோ... எங்கட தமிழ் சனம் அழிஞ்சது உங்களை மாரியானாக்களால தானே...

பொறியியல் பீடம் ஆரம்பிக்கிறது நல்லதோ கூடாதோ எண்ட விவாதம் காலாவதியாகி விட்டது. ’என்னாது காந்தி செத்துட்டாரா?’  என்று இப்போது கேட்பதைப் போன்றது. எனக்குத் தெரிந்து 1974ம் ஆண்டிலிருந்து பொறியியல் பீடம் ஆரம்பிப்பது பற்றிய முன்னெடுப்புகளும் விவாதங்களும் இருந்து கொண்டே இருக்கின்றன.    நான் விரும்பிறனோ விரும்பவில்லையோ அரசாங்கம் பொறியியல் பீடத்தை ஆரம்பித்தே தீரும். நான் விரிவிரையாளனாக சேருறனோ இல்லையோ விரிவுரைகள் நடக்கத்தான் போகுது. பொறியியல் பீடம் தொடங்குவது நல்லதோ இல்லையோ எண்ட விவாதத்தை இப்ப கதைக்கிறது பொருத்தமில்லாத விசயம், இது பலருக்கு ஏன் விளங்குதில்லை?

பொறியியல் பீட கட்டட திட்ட வரைவு


பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசங்கம் மேற்கொள்கிறது. ஆரம்பிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனை நானும் நீயும் வாக்குவாதப் பட்டோ, அறிக்கை விட்டோ நிறுத்த முடியாது எண்ட நிலைக்கு வந்து விட்டது. இப்ப நாங்கள் பார்க்க வேண்டியது, ஆரம்பிக்கப் பட இருக்கிற பொறியியல் பீடத்தை எப்பிடி முன்னிலைக்கு கொண்டு வருவது? அதுக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதனை நாங்கள் செய்கிறோமா என்பது தான்.

வெறும் காணியைத் தந்து கட்டிடம் கட்டித் தரலாம், வசதிகள் செய்து தரலாம் இப்ப நீங்கள் பொறியியல் பீடத்தை தொடங்குங்கோ எண்டு அரசாங்கம் சொல்லி இருக்கிறது எண்டால், படிக்க வாற பிள்ளைகளை எப்பிடி பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்?, அவர்களுக்கு எங்களால் முடிந்தளவு சிறப்பான கற்கை நெறிகளை வழங்குவதற்கான வழிவகைகள் என்ன?, எப்பிடி அவர்களுக்கு நாங்கள் உதவி செய்ய முடியும் என்று சிந்திப்பதை அல்லது அது சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டு, அதன் மூலம் பெறும் சிறந்த வழிமுறைகளை கையாளுவதை விடுத்து, இப்பவும் பொறியியல் பீடம் தொடங்குவது பிழை எண்டு விவாதித்துக் கொண்டிருக்க முடியுமோ? ஏன் எங்கட சமூகம் கள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அந்த நேரத்துக்குத் தேவையான விடயங்களைச் சிந்திக்காமல் திரும்பத் திரும்ப பழசையே சொல்லிக் கொண்டிருக்கிறது எண்டு இன்னும் எனக்கு விளங்கவில்லை.

பொறியல்பீடம் ஆரம்பிப்பதில் சிக்கல்கள் இருக்கிறது என்பது எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. முறையான கற்பித்தலை முதல் ஓரிரு வருடங்களுக்கு வழங்க முடியாத நிலை இருக்கிறது என்பதும் அதனை நானோ நீயோ கதைப்பதனால் நீக்கிவிட முடியாது என்பதும் பொறியியல் பீடத்தில் இணைந்து கொண்டுள்ள அனைத்து விரிவுரையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் தெளிவாக தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் பிரச்சினை பிரச்சினை என்று ஒதுங்கி நிக்காமல் தெளிவாகத் தெரிந்த பிரச்சினையை துணிச்சலோடு எதிர்கொள்ளுவோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை நம்பி வரும் மாணவர்களுக்கு எங்களால் முடிந்ததை அனைத்து தரப்பினரது உதவிகளோடும் முன்னெடுப்போம். அதற்கு ஏன் எங்கட சமூகம் ஒண்டு சேர்ந்து உதவி செய்ய முன்வரக்கூடாது?

நான் விரும்பிறனோ விரும்பவில்லையோ பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படத்தான் போகிறது. நான் விரிவுரையாளனாகிறனோ இல்லையோ விரிவுரைகள் நடக்கத்தான் போகிறது. ஆரம்ப காலங்களில் மாணவர்கள் பாதிக்க்கப் படத்தான் போகிறார்கள். இவ்வளவும் வெளிப்படை உண்மைகள். இதை சொல்லிக் காட்டுவதற்கு ஒருவரும் தேவை இல்லை. இப்போது நாங்கள் சிந்திக்க வேண்டியது, கதைக்க வேண்டியது, மாணவர்களுக்கேற்படப் போகும் பாதிப்புகளை எப்பிடி குறைக்கலாம்? பாதிக்கப்படப் போகிற மாணவர்களை எப்பிடி பாதிப்புகளிலிருந்து மீட்க முடியும்?  பொறியல்பீடத்தை எவ்வாறு முன்னிலைக்கு கொண்டு வரலாம்? இதை ஏன் இன்னும் எங்கள் சமூகம் (அனைவரையும் இங்கே குறிக்கவில்லை) புரிந்து கொள்ளவில்லை? ஏன் இன்னமும் பழைய, தற்காலத்திற்கு பொருந்தாத, செல்லாத கதைகளையே சொல்லிக் கொண்டிருக்கிறது?

- தனஞ்சி.

Sunday, June 16, 2013

தாய்மடி தேடி..

இன்னும் நினைவிருக்கு...
ஆரம்ப பாடசாலை நாட்களில் ஓர் நாள் பின்னேரம்..
நான் ஏதோ ஒரு குழப்படி செய்து விட்டேன்.
நான் குழப்படி செய்யுறதெண்டது புதினமில்லையே...
இப்பிலிப்பில் தடி முறித்து சுழறச் சுழற அடிச்சீங்கள்
கால்கள் முழுவதும் தழம்புகள்...
வலி தாங்க முடியாமல் நான் அழுதேன்
ஓடிப் போய் கட்டிலில் படுத்தபடி அழுதேன்...

அரவணைக்க வந்தீர்கள்.
தழம்புகளுக்கு வாயால் ஊதி ஒத்தடம் கொடுத்தீர்கள்
நோகுதோ எண்டு கேட்டு பதறினீர்கள்...
நான் அடிச்சது உன்னைத் திருத்தத் தான்...
வேற ஒண்டுக்குமில்லை எண்டு என்னிடம் மண்டாடினீர்கள்
என்னைத் தேற்றுவதற்காய் மாம்பழங்கள் வெட்டித் தந்தீர்கள்...
அன்று முழுவதும் எனக்குப் பக்கத்திலேயே இருந்து
என்னைப் பார்த்து பார்த்து மனம் வெந்தீர்கள்
நோகுதோ நோகுதோ எண்டு எத்தினை முறை கேட்டீர்கள் எண்டு
எனக்கு ஞாபகம் இல்லை..

அடிச்சது வலிச்சதை விட நீங்கள் அழுதது தான் வலிச்சது
என்னுடைய வலியை விட நான் அன்பு வைத்திருப்பவர்கள்
என்னால் வேதனைப் படுவதைத்தான் என்னால்
தாங்கிக் கொள்ள் முடியவில்லை..
அன்றுதான் நான் திடமாய் முடிவெடுத்தேன்
என்னுடைய வலி எவரையும் காயப்படுத்தக் கூடாது.
எனக்கு எத்தனை வலிகள் இருந்தாலும் அதனை முயன்றளவு
அன்பானவர்கள் முன்னிலையில் வெளிக்காட்டக் கூடாது

ஆனாலும் உங்களிடம் நான் எப்போதும் தோற்றுவிடுகிறேன்
என்னதான் நான் ஒழிக்க முயன்றாலும் கண்டு பிடித்துவிடுவீர்கள்
கொஞ்ச நாளைக்கு முதல் கூட, என்ன முகம்
வாடிக் கிடக்குது எண்டு கேட்டீர்கள்
எங்க தான் உந்த வித்தையை கற்றுக் கொண்டீர்களோ...
ஆறுதல் தேடி உங்களை நாடி ஓடி வருகிறேன்.

- தனஞ்சி

Sunday, May 12, 2013

இருந்தாலும் நாங்கள் நண்பர்கள்.


தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளாந்த செயற்பாடுகளை இன்னும் இன்னும் சுலபமாக்குகிறது, வேகமாக்குகிறது என்றாலும் மனித உணர்வுகளை, உறவுகளை கொன்று புதைக்கிறது.

மெய்நிகர் நண்பர்கள் (virtual friends) 
முகப்புப் புத்தகம், கூகிள் பிளஸ் என்பவற்றின் வளர்ச்சி எங்கோ தொலை தூரத்தில் இருப்பவர்களை, எங்களோடு நீண்ட நாள் தொலைந்து போனவர்களை இணைப்பதற்கு பயன்பட்டாலும், நட்பு என்ற மனித உணர்வை மழுங்கடிக்கவே செய்கிறது. ஆரென்று முகம் தெரியாதவர்கள், முன்பின் தெரியாதவர்கள் கூட என் நண்பர்கள். 

நான் இண்டைக்கு படம் போட்டால் அல்லது நிலையை எழுதினாலோ (status update) பகிர்ந்து கொண்டாலோ (share) அதுக்கு அவன்/ அவள் வந்து விருப்பம் (like) தெரிவிப்பான்/ள். நாளைக்கு அவன்/ள் படம் போட்டாலோ அல்லது நிலையை மேம்படுத்தினாலோ பகிர்ந்து கொண்டாலோ நான் அதுக்கு விருப்பம் தெரிவிப்பேன். அல்லது கொஞ்சம் மேல போய் ஏதாவது கருத்து (comment) தெரிவிப்பேன். மாறி மாறி எங்களுக்கிடையில் இது ஒரு எழுதப் படாத ஒப்பந்தத்தினடிப்படையில் இப்பிடி நடந்து கொண்டிருக்கும். அவ்வளவு தான்... அதுக்கு பெயர் நாங்கள் இருவரும் நண்பர்கள்.

ஒரு சிலர் மற்றவர்களை பொறாமைப் பட வைப்பதற்காகவே படங்களைத் தரவேற்றுவார்கள். நிலையை மேம்படுத்துவார்கள். உண்மையான அவர்களின் மன நிலையோ அல்லது சூழ்நிலையோ அவை பிரதிபலிப்பதில்லை. அப்பிடி மற்றவன் போட்டுட்டான் எண்டதுக்காகவே நானும் படம் போட்டு அவனுக்கு என்னாலையும் செய்ய முடியும் எண்டு காட்டோணும், அவன் வாங்கின விருப்பங்களின் எண்ணிக்கையளவு நானும் வாங்க வேணுமெண்டு நானும் அப்பிடியே செய்யுறது. 

அவன் ஒண்டு செய்தால் அதுக்கு ஒரு படி மேல போய் நானும் செய்து காட்ட வேணுமெண்டு செய்யுறது. உண்மையிலே அது எனக்கு தேவையா, எனக்கு பயனுள்ளதா என்றெல்லாம் சிந்திப்பதில்லை.  எப்போதுமே நான் சந்தோசமா இருக்கிறேன் எண்டு மற்றவனுக்கு காட்ட வேணும் எண்டதுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறம். ஆனால் உண்மையில் சந்தோசமாக இருக்கிறேனா, நான் எனக்கு எது பிடிக்கும்: எது சந்தோசத்தை தரும் என்று தீர்மானித்து அதன் படி வாழ்கிறேனா என்று சிந்திப்பதில்லை. இவை எங்களையெல்லாம் ஒரு பொறாமை மனப்பாங்குக்கும், மற்றவர்களுக்கு படம் காட்டும் மன நிலைக்கும், மனித உணர்வுகளை மதிப்பதை குழி தோண்டிப் புதைக்கும் மன நிலைக்கும் இட்டுச் செல்கிறது என்பதை நாங்கள் உணரவில்லை.



நண்பனுக்கு ஒரு உதவி எண்டால் நேரடியாக சென்று என்ன வேணுமெண்டு கேட்டு செய்த நட்பு காணாமலே போகிறது. உரிமையோட உதவி கேட்க முடிந்த உதவி செய்ய முடிந்த காலத்தை நினைச்சுப் பாக்க மட்டும் தான் முடிகிறது. மச்சான் நான் சந்தோசமா இருக்கிறன் எண்டு அவன் உதடுகள் சொன்னாலும் அவன்ர முகத்தை பார்த்து அவன் மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட நட்பும் இருந்தது. மன பாரங்களை ஒரு நண்பனுக்கு எதிரே இருந்து சொல்லச் சொல்ல அவன் அதற்கு ஆறுதல் சொல்லித் தேற்றி இருந்த கவலை எல்லாத்தையும் போக்கின காலம் வாராமலே போய்விடுமோ? 

முந்தியெல்லாம் நண்பனின் பிறந்த நாள் என்றால் வீடு தேடிப் போய் கொண்டாடுவோம். உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுவோம். இண்டைக்கு முகப்புப் புத்தகத்தில பிறந்த நாள் வாழ்த்து ஒண்டு போட்டால் போதும். அவனுடன் எங்களுடைய சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு விட்டோம் எண்ட திருப்தி எங்களுக்குள் ஏற்பட்டுக் கொள்கிறது. வெளியிடங்களிலிருந்து ஒருத்தன் நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருந்தால் அவனை நேரில போய் சந்திச்சு அவனோட எங்கட நேரத்தை செலவழிச்சு உணர்வுகளை, உள்ளக் கிடக்கைகளை பகிர்ந்து கொள்ளுவோம். இணடைக்கு அவன் வந்து நிக்கிறானம் எண்டால் ஓ.. முகப்புப் புத்தகத்தில பாத்தனான்... அவ்வளவுதான்... நேரில போக வேணும், சந்திக்க வேணும், சுகம் விசாரிக்க வேணும், நட்பை, உணர்வுகளை பகிர வேணும் எண்ட எண்ணம் தோன்றுவதில்லை.

மெய்நிகராக்கம் (virtualization) கணனித் துறைக்கு என்னவோ புதிய புரட்சியாக இருக்கலாம். பல பயன்களை தருவதாகக் கூட இருக்கலாம். மனித வாழ்க்கையில் மெய்நிகராக்கல் என்பது உணர்வுகளை, உறவுகளை மழுங்கடிக்கிறது. மனிதபிமானத்தை கொன்று புதைக்கிறது. மெய்நிகராக்கல் மேலைத் தேய கலாசாரங்களுக்கு பொருந்துவதாக இருக்கலாம், நிச்சயமாக எங்களுடைய, உறவுகளால் பிணைக்கப் பட்டு வாழ்கின்ற எங்களின் கலாச்சாரத்துடன் ஒத்துப் போகவேயில்லை.  மனிதர்களை உணர்வுகளற்ற சடங்களாக்கிறது. 


- தனஞ்சி.

Saturday, April 13, 2013

கிணத்தில தண்ணியள்ளி..


பள்ளிக்கூடம் படிச்சுக் கொண்டிருந்த பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் கிணத்தில தண்ணியண்ணிக் குளிச்சம். நாங்கள் சகோதரர் உறவுமுறையுள்ள (ஒரே வளவுக்குள் மூன்று வீடுகள்) அஞ்சு பேர் ஒரே கிணத்தில குளிச்சிட்டு பள்ளிக் கூடம் போகோணும். அத விட வேலைக்குப் போற மூண்டு பேரும் குளிக்க வேண்டும். ஆனாலும் ஒவ்வொருநாளும் எல்லாரும் குளிப்பம். 

எங்களுக்கிடையில் இருந்த ஒப்பந்தம் என்னண்டால் ஆர் முதல் கிணத்தடிக்குப் போகினமோ அவரே முதலாவதாகக் குளிக்கும் உரிமை உடையவர். குளிக்கும் உரிமையுடையவர் விரும்பினால் ஒத்துமாறல் அடிப்படையில் மாறிக் கொள்ளலாம். 

கிணத்தடியில் இடம்பிடிக்கிறதுக்கு சகோதரங்களுக்கிடையில் போட்டி. ஒரே நேரம் கிணத்தடியை நோக்கி ரண்டு பேர் வெளிக்கிட்டால் ஓடிப் போய் இடம் பிடிப்பம். ஓட்டப் போட்டி எண்டு வந்திட்டால் பெரும்பாலும் தங்கச்சிமார் என்னட்ட தோக்க வேண்டி வந்துடும். ஓடிப் போய் இடம் பிடிச்சிட்டு அவளைப் பாத்து “நான் தானே முதலாவது” எண்டு சொல்லி அவளை வம்புச் சண்டைக்கு இழுக்கிறதில ஒரு சந்தோசம்.  சிலவேளை எதிர்த்து வாதாடுவாள். சிலவேளை சின்னண்ணா என்னை முன்னுக்கு விடுங்கோ எண்டு கெஞ்சுவாள். கொஞ்ச நேரம் வம்பிழுப்பன். பிறகு அவளை முன்னுக்கு விட்டுடுவன். ஒருமுறை சண்டை உச்சக்கட்டத்துக்கு போய் இரு வீட்டுப் பெரியாக்களும் வந்து சமரசம் பேச வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இப்ப அதே கிணறு இருக்கு. கிணத்தில குளிக்க ஆக்களில்லை. வயசு ஏறினதாலயும் மின்சாரம் வந்து வீட்டுக்குள்ளையே குளியலறை வந்ததாலையும் போட்டி இல்லை. கிணத்தில கையால தண்ணியள்ளிக் குளிக்கும்போது சொந்தக் கையால உழைச்சுச் சாப்பிடும் போது தோன்றும் பெருமிதம் தோன்றும். மூடிய அறைக்குள் நின்று கொண்டு குளிக்கும் போது ஏற்படாத சுதந்திரம், சந்தோசம் இயற்கையை ரசித்தபடி கிணத்தில குளிக்கும்போது ஏற்படுகிறது. கிணத்த படத்தில காட்டி இதுதான் கிணறு எண்டு பிள்ளையளுக்கு சொல்லிக் குடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை...

- தனஞ்சி.

  

Friday, February 08, 2013

வலிகளோடு வாழப் பழகிக் கொண்டேன்.


விதியா என்று சிந்திக்கத் தலைப்பட்டாலும்
மனம் கலங்கி சிந்தனை சிதற மாட்டேன்.
தன்னம்பிக்கை என் தாரக மந்திரம்.
எல்லாம் வெல்லலாம். என்னால் முடியும்.

எத்தடை வரினும் எதிர் கொள்வேன்.
தோல்விகள் தொடர்ந்தாலும் தளரமாட்டேன்.
விளைவுகள் எதனையும் ஏற்றுக் கொள்வேன்.
வலிகளோடு வாழப் பழகிக் கொண்டேன்.

- தனஞ்சி.

Sunday, April 01, 2012

ஊருக்குப் போனன்...


தாய்மடி என்னும் இந்த வலைத்தளத்தை நான் ஆரம்பித்து இன்றுடன் மூன்று வருடங்கள் முடிவடைகின்றன. இன்றைய நாளில் நான் வலைப்பதிவு எழுதுவதற்கு உதவிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கூருகிறேன். ஆரம்ப காலங்களில் அடிக்கடி எழுதி வந்தாலும் பின்னர் சோம்பல் காரணமாக எப்போதாவது எழுதி வந்தேன். அண்மைய நாட்களில் பதிவுகள் எதனையும் எழுதவில்லை. நான் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன் என தெரிவிக்கும் முகமாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களால் வெளியிடப்பட்ட சஞ்சிகளில் ஒன்றான சங்கமம் 2008 இல் இடம்பெற்ற என்னுடைய ஆக்கமொன்றை இங்கே பதிவிடுகிறேன்.

நன்றி
தனஞ்சி.




ஊருக்குப் போனன்…

ஊருக்கு புறப்படுவதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்னரே தமிழர் தலைநகர நண்பர்களின் உதவியுடன் கப்பலுக்கான முன்பதிவுகளை மேற்கொண்டோம். அவர்களின் வீடுகளிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டு பெரிய எடுப்பில் பயணத்தை மேற்கொண்டோம். ஐந்து மணிக்கு பல்கலைக்கழகம் முடிந்ததும் தங்குமிடம் வந்த பின்னர் திடீரென முடிவெடுத்து வீடுகளுக்குச் சொல்லாமலே இரவு ஒன்பது மணிக்கு வாகனமேறி, மதியம் ஒரு மணியளவில் வீடுகளுக்கு போய்ச் சேர்ந்து, குடும்பத்தினர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காலங்களையும் நான் எண்ணாமலில்லை. தங்குமிடத்தில் இருவர் ஊருக்குப் போகிறார்களென்றால் மற்றவர் நிச்சயமாக ஊருக்குப் போக வேண்டிய கட்டாயம். அந்தளவுக்கு அலுப்படிச்சு ஊர் நினைப்புகளைச் சொல்லி உசுப்பேத்தி ஒரு மாதிரி அவரையும் ஊருக்குப் புறப்படும் வழி பண்ணிவிடுவோம். இப்போது புறப்படவேணும் எண்டு நினைத்தால் எத்தனை ஆயத்தங்கள்.. அப்பாடா..

தமிழர் தலைநகரத்து நண்பர்களின் சிறந்த வரவேற்போடும் உபசரிப்போடும் நான் முதன்முதல் அந்நகரத்தில் காலடி எடுத்து வைத்தேன். தலை நிமிர்ந்து நடக்கவேண்டிய தலைநகரத்து மக்கள் அடுத்த பரிசோதனை நிலையம் எங்கே என்று பார்ப்பதற்காய் தலையை நிமிர்த்துகிறார்கள். ஐம்பது மீற்றர்களுக்கு ஒரு முறை நாங்கள் வழிமறிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதைப் பார்க்கும் போது அந்த அரணிலும் இந்த அரணிலும் நிற்பவர்கள் ஒருவருக்கொருவர் கோபமோ என எண்ணத்தோன்றுகிறது. இலங்கை அரசாங்கத்தின் பாரம்பரியமான காலம் தாழ்த்தி நிகழ்வுகளை நடத்தல் எங்களின் கப்பல் பயணத்திலும் நடந்தது. ஒரு நாள் கப்பல் தாமதமானது நகரைச் சுற்றிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

கன்னியாவுக்கு காலை ஆறு மணிக்கு வாகன சகிதம் எங்களால் முன்னெடுக்கப்பட்ட பயண நடவடிக்கை கேவலம் இரண்டு மரக்குற்றிகளால் வழிமறிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னேறும் முயற்சி பயனளிக்காததால், அங்குள்ளவர்களுடன் களநிலவரங்கள் பற்றி கலந்துரையாடி, எங்களுக்கான சாதக பாதக தன்மை பற்றி சிந்தித்துக் கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின் அடிப்படையில் அடுத்த முயற்சி முற்பகல் ஒன்பது மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்து, சிறந்த வழிகாட்டலின் கீழ் நிகழ்த்தப்பட்ட பயணம் வெற்றி இலக்கை அடைந்தது. ஏழு கிணறுகளிலும் குளிப்பதில் நம்மவர்கள் காட்டிய அவசரத்தில் வெற்றிக்களிப்பு மட்டுமல்ல கொழும்பில் காணப்படும் தண்ணீர்ப் பஞ்சமும் வெளிப்படையாகவே தெரிந்தது. தொடர்ந்து கோணேச்சரர் கோவிலுக்கு, அமைதியான இயற்கைச் சூழலையும் மான் மயில்களையும் ரசித்த படியே சென்றடைந்தோம். பழைய ஐதீகக்கதைகளை சொல்லிய படியே இரட்டைப் பாறைகளுக்கிடையே கல்லெறிந்ததையும் மறக்க முடியாது. இயற்கையாய் அமைந்த ஆலய சூழலில் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தியமை மனதுக்கு இதமாய் இருந்தது. எம்மை நன்கு உபசிரித்த நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் விடைபெற்று கப்பலுக்கு புறப்பட்டோம். கப்பலில் நாங்கள் ஏறிவிட்டோம். ஆனாலும் இன்னும் புறப்படவில்லை. எப்பாடா இது வெளிக்கிடும் என்று சலிப்பு மேலோங்கியபோது என் எண்ணங்கள் பழைய நிகழ்வுகளில் இதே போன்ற சந்தர்ப்பங்களை நாடியது.

ஏ - 9 வீதி திறந்திருந்த அந்த காலங்களில் கொழும்பிலிருந்து இரவு ஒன்பது மணியளவில் வெளிக்கிடும் வாகனங்கள் அடுத்தநாள் காலை நாலு மணி முதல் ஐந்து மணிக்குமிடையில் தாண்டிக்குளத்தில் பாதை திறப்பதற்காக தரித்து நிற்கும். பாதை காலை ஆறரைக்கு திறக்கும் வரை வாகனத்தை விட்டிறங்கி சுற்றிப்பார்ப்போம். விடுமுறை நாட்களில் காணப்படும் பெரிய வாகன வரிசையில் எங்களுக்கு தெரிந்தவர்களை கண்டுபிடித்து கதைப்பதில் ஒரு அலாதிப்பிரியம். ஆரார் ஊருக்கு போகிறார்கள் என்பதைக் கண்டறிந்து விடுவோம். முகத்தை கழுவிக்கொண்டு தேத்தண்ணி குடிக்கத் தேத்தண்ணிக் கடைக்குப் போனால் அங்கு சூரியன் வானொலி பெரிதாக ஒலிக்கும். "தங்கச் சூரியனே பொங்கும் எரிமலையே" என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேத்தண்ணி குடிச்சதாக ஞாபகம். குடிச்சுட்டு வெளிக்கிட நேரம் சரியா இருக்கும். உடன நாங்கள் வந்த வாகனத்தில் இருந்து இறங்கி ஆக முதல் நிற்கும் வாகனத்துக்கு போவம். கொஞ்சக் காசு கூடக் குடுத்தாலும் முதலாவதாக வீட்ட போகவேணும் எண்ட போட்டியால ஓட்டம் தான். வேகமா விண்ணப்பப் படிவங்கள் நிரப்ப வேணும் எண்டதுக்காகவே எங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கங்களை மனப்பாடம் பண்ணியதையும், நாங்கள் கம்பஸ் எண்டு பெருமையடிச்சு சலுகைகள் பெற்றுக்கொண்டு மற்றையவர்களை விடவும் முன்னுக்கு போகவும் பின்னிற்பதில்லை. இப்ப கப்பல் மெதுவாக ஆட்டம் கண்டது. கப்பல் வெளிக்கிட்டதை உணரக்கூடியதாக இருந்தது.

கப்பல் தரை காணாத்தூரம் செல்லும் வரை மேல் தளத்தில் இருந்தபடி கரையில் தெரியும் வெளிச்சத்தை பார்த்தபடியும், கப்பல் கடலை கிழிக்கும் விதத்தினையும், ஆனாலும் கப்பலை முத்தமிடும் அலைகளையும் ரசித்தபடியே சென்றேன். நள்ளிரவு வேளையில் மெதுவாகப்பசி கண்டது. வாய்க்கு ஏதாவது கிடைக்குமா எனப் பார்க்க கீழ்த்தளத்துக்கு போனேன். என்னோட வந்த எல்லோரும் நல்ல நித்திரையில் இருந்தார்கள். அதிலொருத்தன் கப்பல் இயந்திர சத்ததை விடப் பெரிய சத்தமாக குறட்டை விட்டதை மறக்கவா முடியும். ஒவ்வொருத்தனின் பைகளுக்குள்ளும் கையை விட்டேன். ஒருமாதிரி இரண்டு அப்பிள் பழம் அகப்பட்டது. அதுவும் கொஞ்ச நேரத்திற்குள்ளேயே எனக்குள் சமர்ப்பணமாகியது. (என்ன பிரச்சனையெண்டால் நான்தான் அந்த அப்பிளை சுட்டதெண்டு இதுவரை ஒருத்தனுக்கும் தெரியாது. இதை அவங்கள் வாசிச்சாங்களெண்டால் பிரச்சனை பெரிசானாலும் பெரிசாகலாம்.) காலை வேளையில் கப்பல் தரை தட்டுது தட்டுது என்றால் எங்கே கரையைத் தொட்டது. நீண்ட நேரப் பயண வெறுப்பின் உச்சம் எங்களுடைய வார்த்தைகளிலும் தெரிந்தது. ஆனாலும் தரை தட்டிவிட்டோம் எண்ட உற்சாகம் மேலாகவே காணப்பட்டது.

அன்று இரவோடிரவகவே உயிரையும் பணயம் வைத்து வீடுகளுக்கு போய்ச்சேர்ந்தோம். பயண சலிப்பை வண்டியினுள் ஒலித்த பாடல் மறக்கச்செய்தது. அங்கு தனியார் வண்டிகளில் பயணிக்கும் போது ஒலிக்கும் பாடல்களின் தெரிவே வித்தியாசமானது. அவை பயணத்துக்கு தனி சுகம் சேர்ப்பவை. மெல்லிய சோகம் இழையோடும் நல்ல அர்த்தமுள்ளஇ சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்ற பாடல்களைக் கேட்ட படியே பயணம் செய்யும் போது பயணத்திலுள்ள சலிப்பு முதல் வீட்டுப் பிரச்சனை வரை அனைத்தையும் மறந்து பயணம் செய்வது அமைதியானது. எங்கிருந்து தான் இப்படிப் பொருத்தமான பாடல்களை தேடிப்பிடிப்பார்களோ என்று நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. பிற்காலத்தில் அரசாங்கப் போக்குவரத்து வாகனங்களிலும் மக்களைக் கவர்வதற்காக அதே தெரிவுப் பாடல்களை ஒலிக்க விட்டதிலிருந்து நம்மவர்களை அத்தகைய பாடல்கள் எந்தளவுக்குக் கவர்ந்துள்ளது என்பதை உணரலாம். ஏன் எங்களுடைய கணணிகளில் கூட அத்தகைய தெரிவுகளென ஒரு தொகுதி பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளதை மறக்கவா முடியும்.

இயற்கை எழில் கொஞ்சும் மரங்களால் சூழப்பட்ட எமது வீடுகளையும், எம்மைக் கண்டதும் துள்ளிக் குதித்து சொந்தம் கொண்டாடிச் சந்தோசமாக வரவேற்கும் செல்லப்பிராணிகளையும், பூத்துக்குலுங்கி நறுமணத்தைப் பரப்பியபடியே அழகைத்தரும் பூமரங்களையும், தேவையறிந்து ஓடிவந்து தோள் கொடுக்கும் அயலவர்களின் அரவணைப்பையும், அமைதியான சூழலில் எம்மையெல்லாம் காத்து நிற்கும் தெய்வ சந்நிதானங்களையும், மிதிவண்டிகளில் உலாவரும் சின்னஞ்சிறார்களையும், ஊருக்கே சோறு போடும் உழவர்களையும், கண நேரம் ஓய்வெடுக்காது உழைப்பால் சிவந்த கைகளையும், கலாசாரம் பேணும் பொருத்தமான குடும்பப்பாங்கை கண்முன் காட்டும் உடைகளை அணிந்தவர்களையும், யார் வந்து எதிர்த்தாலும் கட்டிக்காக்கப்படும் விழுமியங்களையும், பறையுடனான காவடிகளையும், உடுக்குடனான கரகங்களையும், என்றும் மறவாத யாவரையும் உபசரித்து விருந்துண்ணக் கொடுக்கும் பழக்கங்களையும், ஒருவேளை உணவில்லையெனினும் மானத்தோடு மனிதத்தையும் இழக்காத மனிதர்களையும் பார்க்கும் போது நிச்சமாக சொல்லுகிறேன் அது தான் சொர்க்கம்.

மகிழ மரச் சோலையிலே இருக்கை போல் வடிவமைந்த கல்லிலே படுத்திருந்தபடி ஊர்க்கதைகள் உலகக் கதைகள் குடும்பச் சண்டைகள் சமகால அரசியல் மற்றும் காதல் விவகாரங்களை அலசுவதில் கிடைக்கும் தனி சுகம் வேறெங்கும் கிடைப்பதில்லை. அப்பப்ப கோயிலில் நடக்கும் பூசை அபிஷேகங்களில் கிடைக்கும் சோறு, “கோட்டா” மோதகங்களைப் பகிர்ந்துண்டபடியே இன்பமாய், ஒற்றுமையாய் ஒரே குடும்பம்போல மடத்தில் கூடிக்குலவியதை மறக்கவா முடியும்? மிதி வண்டிகளில் கடந்து செல்லும் நம்ம ஊரிளம் பெண்கள் முதலில் என்னை வித்தியாசமாகப் பார்த்தாலும் அடையாளம் கண்டு கொண்டதும் வழமையான பாணியில் கடைக்கண் பார்வையுடனும் தலைகுனிந்த வெட்கப் புன்னகையுடனும் கடந்து சென்றார்கள். பூங்காவனத்து மணலிலிருந்தபடியே கடந்து செல்லும் பெண்களுக்கு அடித்த நக்கல்களையும் நையாண்டிகளையும் மறந்திருக்க மாட்டார்கள்தானே. ஊரில் நடக்கும் கல்யாணவீடு முதல் செத்தவீடு அந்தியேட்டி வரை அனைத்து வைபவங்களுக்கும் இளைஞர்கள் சார்பில் பங்குபற்றி தேவையறிந்து உதவி செய்வதையும் சிறப்பாக சபை நடத்தி ஒற்றுமையாய் உணவுண்டு மகிழ்வதையும் நான் மறக்கவில்லை.

ஆனாலும் பழைய சந்தோசங்கள் போல இம்முறை இருக்கவில்லை. எந்நேரமும் என்னுடன் சண்டை பிடித்துக் கொண்டே நகைச்சுவையுடன் கதைத்து விளையாடி மகிழ்ந்த சகோதரர்கள் வீட்டிலில்லை. எல்லா வயதினரும் உலா வந்த வீதிகளில் வயது முதிர்ந்தவர்களும் சின்னஞ்சிறார்களுமே வலம் வருகிறார்கள். என் வயதையொத்த இளைஞர்கள், என்னுடன் படித்த நண்பர்களைக் காண முடியவில்லை. பழைய காலப் பள்ளி வாழ்க்கையை மீட்டிப்பார்க்கத் தோழர்களில்லை. சிறுவயதினர் என்னை “அண்ணா”என அழைக்கும்போது பெருமையாயிருந்தாலும் “டேய்” எனக் கூப்பிட்டு என்னை ஆட்டுவிக்கும் அன்புக் கட்டளைகள் இல்லாதது கவலையைத் தருகிறது. ஒரு காலத்தில் நாங்கள் ஓடி விளையாடிய நண்பர்களின் வீடுகள் நிழல் தரு மரங்களின் இலைகளாலும் செடி கொடிகளாலும் நிரம்பிப் பாழடைந்து கிடக்கிறது. வீடுகளை அழகு படுத்த இளையவர்கள் இல்லாதது ஒவ்வொரு வீடுகளிலும் காணமுடிகிறது. பள்ளிக்கூடம் போகும் மாணவர்களின் மனங்களிலே எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. நாளை விடியும்போது நானிருப்பேனா என்ற சந்தேகத்துடன்தான் ஒவ்வொரு நாளும் விடிகிறது. பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இல்லை. படிப்பதற்குகந்த நேரங்கள் தவிர்ந்த நேரங்களில்தான் மின்சாரம் கிடைக்கிறது. கைத்தொலைபேசி சமிக்ஞைகளோ நானுமிருக்கிறேனென அமாவாசைக்கொருமுறை தோன்றி மறையும்.

விசிலடித்ததும் தங்கள் வாகனத்தை விட்டிறங்கி யாவரும் நின்ற இடத்திலேயே குறைந்தது இரண்டு மணி நேரமாவது நிற்க வேண்டிய “பாதை மறிப்பு” நம்மவர்களைப் பாடாய்ப் படுத்துகிறது. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தினுள் திட்டமிட்டு எதனையும் செய்ய முடிவதில்லை. மச்சான் ஒருத்தியும் மாட்டுறாளில்லையெண்டால் பேசாமல் பாதைமறிப்பில் போய் நில். பக்கத்தில நிக்கிறவளிட்டை பேச்சுக்குடு. பாதை மறிப்பு முடிய நீங்கள் ரெண்டு பேரும் புதுச்சோடிகள் தான்டா. அந்தளவுக்கு கதைக்கிறதுக்கு நேரமும் கிடைக்கும் அதைவிட அவளுக்கும் வேற பொழுது போக்குமிருக்காது. நீ ஆட்டையைப்போட்டு விசயத்தை வெண்டிடலாமெண்டு நண்பர்கள் நகைச்சுவையாய் சொல்லுவார்கள். பாதை மறிப்பு விவகாரத்தால் உயர்தரப் பரீட்சை எழுதமுடியாமற் போன சந்தர்ப்பங்களும் கல்யாண வீடுகள் காலம் தப்பி நடந்த சந்தர்ப்பங்களுமுண்டு.

இத்தனையுமிருந்தென்ன, எந்தத் தடைகள் வந்தாலும் ஒவ்வொரு முறை வீழுகின்ற போதும் எழுந்து நிற்கும் வல்லமை படைத்தவர்கள் நம்மவர்கள். வீழ்வது அவமானமல்ல, ஒவ்வொரு முறை வீழும்போதும் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கிறோம் என்பதுதான் பெருமை. எத்தனை வழிகளில், யூத்தமென்ற போர்வையில் எம்மை அடக்க முயன்றாலும், அழிக்க முயன்றாலும் சாம்பலிலிருந்தும் எழுந்து நிற்கும் பீனிக்ஸ் பறவைகள் நம்மவர்கள். எத்தனை பொருளாதாரப் பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் கொடுத்தாலும் தளர்ந்து விடாது வளைந்து கொடுத்து அன்றாட வாழ்வை நடாத்துபவர்களும் அவர்களே. இதற்குச் சீதனம் என்ற போர்வையில் எம்மவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்துக் கட்டிக்காத்த பணமும் பொருளுமே காரணமென்றால் அது மிகையாகாது. இல்லையேல் நம்மவர்கள் பட்டினிச் சாவால் துடித்துச் சாவடைந்திருப்பார்கள். தமிழனென்றொரு இனம் நம்மூரில் மண்ணோடு மண்ணாய்ப் போயிருக்கும்.

பெற்றோலுக்குப் பதிலாய் மண்ணெண்ணெயில் வாகனமோட்டியவர்களுக்கு, மிதிவண்டியைச் சுற்றி மட்டைப்பந்துப் போட்டி பார்த்தவர்களுக்கு, சுண்ணாம்பினால் கட்டிடிடம் கட்டியவர்களுக்கு, குண்டும் குழியுமான திருத்த முடியாத வீதிகளிலும் இலாவகமாக வாகனமோட்டக் கற்றுக் கொண்டவர்களுக்கு, ஆகாயத்தில் பறப்பது முதல் ஆழ்கடலினாழத்தில் பயணிப்பது வரை அனைத்துத் தொழில்நுட்பங்களையும் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு, ஏன் பல்குழல் குண்டுகளின் மேலுறைகளையே பூச்சாடியாக்கி அழகு பார்த்தவர்களுக்கு, குண்டுச்சத்தங்களுக்கும் குழல்களினதிர்வுகளுக்குமிடையேயும் வாழ்ந்தவர்களுக்கு, செங்குருதியுறைந்த மண்மேலே நடக்கப் பழகிய நம்மவர்களுக்கு வாழவா கற்றுக் கொடுக்க வேண்டும்? தன்மானத்தோடும் சுய உரிமை காக்கும் அதிகாரத்தோடும் வாழுவோமென்ற வெறி இருக்கும் வரை, எம்மால் முடியுமென்ற நம்பிக்கையிருக்கும்வரை  எதையுமெதிர்கொள்ளும் வீரமிருக்கும்வரை தமிழன் வாழ்வும் நிலைத்திருக்கும். வரலாற்றில் தடம் பதிக்கும்.


ச. தனஞ்ஜெயன்
மட்டம் 03

Wednesday, December 28, 2011

நள்ளிரவில்


சொய்சாபுரத்தில இருந்த காலத்தில ஒரு நாள் இரவு, கிட்டத்தட்ட அதிகாலை பன்னிரண்டு முப்பது மணியிருக்கும். சூடான கதை ஒண்டு கதைச்சுக் கொண்டிருந்ததால நாங்கள் நித்திரை கொள்ளேல்ல. திடீரெண்டு ஆரோ ஓடி வாற சத்தம்... எங்கட கதவைத் தட்டுற சத்தம்... ஓடிப் போய் முதலாம் மாடியிலேந்து குதிக்கிற சத்தம்... நாங்கள் குழம்பிப் போனம். என்ன நடக்குதெண்டு விழங்கேல்ல...

கொஞ்ச நேரத்தில எங்கட வீதியால ரண்டு பேர் ஓடி வந்தாங்கள். சிங்களத்தில “கொட்டி... கொட்டி...” (தமிழ்ல புலி.. புலி..) எண்டு சத்தம் போட்டுக் கொண்டு.. சமாதானம் செத்துக்கொண்டிருந்த காலம் எண்ட படியா பொடியள் ஆரையும் துரத்திக் கொண்டு வந்தவங்களோ? அவன் ஏன் வந்து எங்கட வீடுக் கதவைத் தட்ட வேணும்? எங்களுக்கு மெல்ல பயம் பிடிக்கத் தொடங்கிச்சுது. மெல்லமா எங்கட வீட்டு விளக்குகளை அணைச்சுப் போட்டு சன்னலோட ஒட்டி நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம் எண்டு யோசிச்சம். திடீரெண்டு கன சனம் எங்கட வீதியில கூடீட்டுது. கொட்டி கொட்டி எண்டு சொல்லிக் கொண்டு எங்கட வீட்டை கை காட்டி கதைக்கத் தொடங்கினம். எங்களுக்கு மெல்ல நடுங்கத் தொடங்கீட்டுது. பொலிஸ் வந்தால் எங்கள் எல்லாரையும் உள்ளுக்குக் கொண்டு போய்ப் போடப் போறான் எண்ட நிலை.

திடீரெண்டு ”ராமு (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) வாடா.. நான் சோமு சொல்லுறன். ஒரு பயமுமில்லை. வெளீல வாடா” எண்டு பலமா சத்தம் போட்டுக் கேட்டுது. இந்தக் குரல் எங்கட சிரேஸ்ட மாணவர் அண்ணா ஒருத்தருடையது. ராமு எங்கட மட்டத்தைச் சேர்ந்தவன். அவங்கள் ரண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கிறவங்கள். ஆனால் எங்கட வீட்டிலேந்து கிட்டத்தட்ட 600 மீற்றர் தூரத்தில இருக்கிறவங்கள். அவங்கள் ஏன் எங்கட வீதிக்கு தலை தெறிக்க ஓடி வரோணும்? சோமு ஏன் எங்கட வீடுப் பக்கம் வந்து பிறகு எங்கேயோ ஓடி ஒழிக்கோணும். ஒண்டுமே புரியேல்ல. வீதி முழுக்க சனம் ஓடித் திரியுது. சிங்களத்தில புலி புலி எண்டு சொல்லுறாங்கள்.எங்கட வீட்டைக் காட்டியும் கதைக்கிறாங்கள். கொஞ்ச நேரம் ஆடிப் போனம். வெளீல போய் நடந்தது என்ன எண்டு விசாரிக்க விரும்பேல்ல. பிடிபட்டால் உள்ளுக்குள்ள தான். உள்ளுக்குள்ள போட்டா ஆள் இருக்குதோ இல்லையோ எண்டும் தெரியாது, எப்ப வெளீல விடுவாங்கள் எண்டும் தெரியாது.

அந்த நேரத்தில எங்களுக்கு தெரிஞ்ச, அந்த நண்பர்களின்ர அறையிலேந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பு எடுத்தம், ”கொஞ்சம் பொறுத்தெடு” எண்டுட்டு அந்த இணைப்புத் துண்டிக்கப் பட்டது. எங்கட வீதியில வாகன சத்தம் கேட்டது.   மெதுவா எட்டிப் பாத்தம் வீதி வெளிச்சத்தில இவங்கள் ரண்டு பேரும் வாகனத்துக்குள்ள ஏத்தப் படூறது தெரிஞ்சது. நிலமை கவலைக்கிடம். திருப்பியும் அந்த அண்ணாக்கு அழைப்பெடுத்தம். இப்ப அவர் இணைப்பில இருக்கிறார். அவர் எதுவுமே பேசவில்லை. சிங்களத்தில சரமாரியாக உரையாடிக் கேட்குது. வாகனமும் ஓடிக் கொண்டிருக்கிற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அழைப்பு துண்டிக்கப் பட்டது. அந்த அண்ணாவும் வாகனத்தில் ஏற்றப்பட்டதை உணர்ந்து கொண்டோம்.

அவர்களிருந்த வீட்டுக்கு பக்கத்தில இருந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பெடுத்தம். நேற்று புதுசா எங்கட வீட்டுக்கு பக்கத்தில குடியிருக்க வந்த அண்ணன்மார் இருவரின் வீட்டில ’குடு’க்காரர் வந்து நிக்கிறாங்களாம். (போதை வஸ்து பாவிப்பவர்கள், அப்பப்ப வழிப்பறி களவுகளிலும் ஈடுபடுபவர்கள்). அவங்களுக்கு பயமா இருக்கெண்டு சொன்னதால தாங்கள் என்னண்டு பாக்கப் போறம் எண்டு தனக்குச் சொன்னவை எண்டு சொன்னார். இப்ப என்ன செய்யுறது. நடந்தது என்னண்டும் தெரியேல்ல...  

எங்களுக்கு அந்த நேரத்தில வந்த யோசினை மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு இதனைத் தெரியப்படுத்துறது. அந்த ராத்திரி நேரத்தில் (அதிகாலை 1 மணியிருக்கும்) அவருடைய தொலை பேசிக்கு அழைப்பு எடுத்தம். துணை வேந்தர் அழைப்புக்கு பதில் சொன்னார். எங்களுக்கு தெரிந்த விடயங்களை தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னோம். வாகனத்தில் ஏத்திக் கொண்டு போனதையும் அவர்களுடைய தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் சொன்னோம். அவர் சொன்னார் இன்னும் ஐந்து நிமிடத்தில் எம்முடன் மறு படியும் தொடர்பு கொள்வதாக... சிறிது நேரத்தில் துணைவேந்தர் எங்களுடைய தொலைபேசிக்கு அழைத்து சொன்னார் அவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் பிடிக்கப்பட்டு கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் இருக்கிறார்கள். விசாரணை முடிந்ததும் விடுவிக்கப்படுவார்கள். நீங்கள் ஒண்டும் பயப்படத் தேவையில்லை. அந்த நேரம் கெட்ட நேரத்திலும் மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தர் எங்களுக்கு உதவினார் எண்டு சொன்னால் நம்ப முடிகிறதா? 

பொலீஸ் பிடித்தார்களா? அப்படியானால் ஏன் இவர்கள் ஓடினார்கள்? 

அன்று நடந்தது என்ன?

நாங்கள் இருந்த பகுதி குடுக்காரர்களுக்கு பிரசித்தமானது. முதல் நாள் எங்களுடைய வீட்டுக்கு அண்மையில் குடி வந்த அண்ணன்மார்களுக்கு குடுக்காரர்களைப் பற்றி தெரிந்திருந்தது. அன்றைய நாள் பகல்வேளை அவர்கள் கணனி ஒன்றை வீட்டுக்கு கொண்டு வரும்போது வீட்டுக்கு முன்னால் ஓரிருவர் சந்தேகத்துக்கிடமாக நடமாடியிருக்கிறார்கள். தங்களுடைய வீட்டை நோட்டம் விட வந்த குடுக்காரர் எண்டு அவர்கள் நினைத்து விட்டார்கள். 

அண்டைக்கு இரவு பொலீஸ் சிவில் உடையில் சோதனையிட அவங்கட வீட்டுக்கு வந்திருக்கிறாங்கள். அவங்கள் வந்து வீட்டுக் கதவைத் தட்டினதைப் பாத்து வந்தது குடுக்காரர் எனப் பயந்து, பொலீசில் பிடிபட்ட அண்ணாக்கு அழைப்பெடுத்து உதவிக்கு வரும்படி கேட்டிருக்கிறார்கள். அவர் தன்னுடைய அறை நண்பர்கள் நால்வரையும் கூட்டிக்கொண்டு இவர்களுக்கு உதவிக்காக நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் புறப்பட்டு வந்திருக்கிறார். வந்த இடத்தில் சிவில் உடையில் நின்ற பொலீஸ் இவர்களை மறித்திருக்கிறான். வந்தவர்களும் மறிப்பது குடுக்காரர் என நினைத்து தப்புவதற்காக ஓடினார்கள். இதுதான் நடந்தது. பொலீஸ் துரத்தி பிடிச்சு கிட்டத்தட்ட ஒரு கிழமைக்குப் பின்னரே அவர்களை விடுவித்தனர். படிக்க வந்து கொஞ்ச நாள்ல நடந்த இந்த சம்பவமும் மறக்க முடியாதது.

- தனஞ்சி


Thursday, December 22, 2011

தண்ணிக் காசு


நாங்கள் இருந்த சொய்சாபுர வீட்டின்ர நீர் மானி எங்கட வீட்டுக்குள்ளேயே இருந்தது. அதனால நீர்மானி வாசிப்பாளர் எங்கட வீட்டுக்குள்ள வந்துதான் நீர்மானியை வாசிச்சு கட்டணம் அறவிட வேணும். நாங்கள் பாவிச்ச நீருக்கான கட்டணம் பாவிச்ச அலகுகளை அடிப்படையாகக் கொண்டது. முதல் 15 அலகுக்கும் 50 ரூபா, 15 - 20 அலகு பாவிச்சிருந்தால் 80 ரூபா அளவில வரும். 20-25 அலகு பாவிச்சிருந்தால் 250 ரூபா அளவில வரும். எப்பிடியும் இந்தக் கட்டணத்தை 100 ரூபாக்குள்ள கட்டுப்படுத்தியே ஆக வேணும் எண்டு யோசிச்சம். குளிக்காம இருக்கிறது சிறந்த தீர்வெண்டாலும் அதனால மற்றாக்களும் பாதிக்கப்படுவினம் எண்டதால என்ன செய்யலாம் எண்டு யோசிச்சம். அப்பத்தான் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்ர வழமை ஒண்டைக் கண்டு பிடிச்சம். அத எங்களுக்கு சாதகமா பயன்படுத்திறதெண்டு முடிவெடுத்தம். 

நீர்மானி வாசிப்பவர் வீட்டுக்குள்ள வந்து வாசிப்பை வாசிக்க முடியாமல் போனால் கடைசி மாதம் என்ன கட்டணம் வந்ததோ அந்தக் கட்டணத்தைத் தான் இந்த மாதக் கட்டணமாக அறவிடுவார். அப்ப ஒரு மாதம் மிகக்குறைஞ்ச கட்டணத்தை பதிவு செய்து போட்டு அடுத்த மாதத்திலேந்து அவரை உள்ள விடாமல் கதவைப் பூட்டி வச்சிருந்தால் அவர் பழைய கட்டணத்தை பதிவு செய்வார். நாங்கள் குறைஞ்ச கட்டணம் கட்டலாம். ஏன் நாங்கள் இப்பிடி செய்யத் துணிஞ்சனாங்களெண்டால் பெரும்பாலும் நாங்கள் ஊரில தான் நிக்கிறது. பெயர் தான் கம்பஸில படிக்கிறமெண்டு. சோதினை வருதெண்டால் தான் எல்லாரும் ஒண்டா நிப்பம். அந்த நேரம் தண்ணிக் காசு எகிறும். அடுத்த மாதம் எங்கட வீடு பூட்டிக் கிடக்கும். தண்ணி பாவிச்சிருக்க மாட்டம். சராசரியாப் பாத்தா 15 - 20 அலகுக்குள்ள தான் பாவிச்சிருப்பம். இந்த சராசரியை எங்களுக்கு சாதகமாப் பயன்படுத்திறதுதான் நோக்கம். 

அதன் படி தண்ணிக் கட்டணத்தை 80 ரூபாக்குள்ள மட்டுப்படுத்தி ரண்டு மாதம் வெற்றிகரமா எங்கட திட்டம் நிறைவேறிச்சு. நீர் மானி வாசிப்பாளர் வரும் திகதிகள் எங்களுக்கு கொஞ்சம் தெரியும். அந்தக் காலத்தில எங்கட வீட்டுக் கதவை ஆர் தட்டினாலும் திறக்கிறேல்ல. மூண்டாம் மாதம் மானி வாசிப்பாளர் வீட்டுக்குள்ள வந்து மானியை வாசிச்சா, கட்ட வேண்டிய கட்டணம் 700 ரூபாவை எட்டியது. இப்ப எங்களுக்கு ஒரு சிக்கல் வந்திட்டுது. அடுத்த முறை மானி வாசிப்பாளர் வரேக்க வீட்டில நாங்கள் நிண்டே ஆக வேணும் இல்லாட்டி திருப்பியும் 700 ரூபா வரும். பாவிக்காத தண்ணிக் காசும் சேர்ந்து எங்கட தலையில கட்டப்படும். 

அப்ப இன்னுமொரு வழி கண்டு பிடிச்சம், மானி வாசிப்பை எழுதி வீட்டுக் கதவில ஒட்டி விடுறது. மானி வாசிப்பாளர் அதனை மானி வாசிப்பாக கருதி கட்டணம் அறவிடுவார். எங்களுக்கு ஏற்றமாரி மானி வாசிப்பை கணக்குப் போட்டு வாசல்ல ஒட்டி விடுவம். மானி வாசிப்பளரும் அதை நம்பி அலகுகளைக் கணிப்பார். கொஞ்ச காலம் நீர்க் கட்டணமாக 100 ரூபாக்குள்ள செலுத்தின்னாங்கள்.