Sunday, June 20, 2010

கணக்கு_11

முந்த நாள் (நேற்றைக்கு முதல் நாள்) எனக்கு வயசு 25. வாற வருசம் நான் 28 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவேன்.
அப்ப நான் எத்தினையாம் திகதி பிறந்தவன் எண்டு கண்டு பிடியுங்கோ பாப்பம்.

Saturday, June 12, 2010

துலாப் போடுதல்...

துலாப்போடுதல் எண்ட சொல் வழக்கை கேள்விப்படாமல் இருக்க மாட்டீங்கள் எண்டு நம்புறன். தூங்கி வழிதல் / விழுதல் எண்டு பொருள் படும். எல்லாருமே துலாப் போட்டிருப்பீங்கள் எண்டே சொல்லலாம். துலாப் போடுறவனை விட துலாப் போடுறவனைப் பாக்குறவனுக்கு ஒரு அலாதி சந்தோசம் இருக்குப் பாருங்கோ. துலாப் போடுறவன்ர ஒவ்வொரு அசைவையும் நல்லாவே ரசிக்கலாம். அது கிடக்க... இப்ப கொஞ்ச நாளா நான் துலாப்போடுற சந்தர்ப்பம் அதிகரிச்சுப் போட்டுது. இருந்தாலும் நான் மீட்டிப் பாக்க வந்த விசயம் சின்ன வயசில துலாப் போட்ட சந்தர்ப்பங்கள். எல்லாருக்குமே தெரியும் தானே படிக்கேக்க தான் துலாப் போட்டிருப்பன் எண்டு. 

அந்தக் காலத்தில ஒரு குப்பி விளக்கோ அல்லது அரிக்கன் லாம்போ கொழுத்தி வச்சுட்டு சுத்தி வர இருந்து படிக்க வேண்டியதுதான். பொழுதுபட்டால் முகம் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து மேசையில இருக்க வேண்டும் எண்டது கட்டளை. என்ன செய்ய? பின்னேரங்களில ஓடி விளையாடிப் போட்டு வந்து மேசையில இருந்தா எப்பிடி இருக்கும்? அடிக்கடி துலாப் போடுவன். துலாப்போட்டு விளக்குக்கு மேல விழுந்து விளக்குப் பத்தியெரிஞ்சு மரணமான சம்பவங்களும் அந்தக் காலத்தில நிறைய நடந்ததுதான். துலாப்போடும்போது கூட இருக்கிறாக்களையும் கவனிக்காம துலாப் போட வேண்டியதுதான் (நித்திரைக்கு எங்க தெரியப் போகுது எங்கட மானப் பிரச்சினை). 

படிக்கும்போது துலாப் போட்டால் ‘புத்தகத்தை மூடி வச்சிட்டுப் போய்ப் படு’ எண்டு அப்பா சொல்லுவார். அப்ப சந்தோசம் தானே எண்டு நினைப்பியள் போல... அண்டைக்குப் போய்ப் படுக்கலாம். பிரச்சினையில்லை. அடுத்தடுத்த நாட்களில, கூட நேரம் இருந்து படிக்க வேணும். சில வேளை விளையாடப் போற ஓய்வு நேரத்திலயும் இருந்து படிக்க வேணும். அண்டைக்கு பழகின பழக்கம் இண்டைக்கும் நான் துலாப் போடும்போது படிப்பது கிடையாது. எத்தினை மணியெண்டாலும் (வெள்ளன எண்டாலும்) படுத்துடுவன். (அறை நண்பர்களுக்கு தெரியும்) இவ்வளவு படிக்கக் கிடக்கே எண்டு சிந்திக்கிறதில்லை.

உயர் தரம் படிக்கும் வரை கற்பிக்கும் போது துலாப் போட்டதா ஞாபகம் இல்லை. ஆனால் அதற்குப் பின்னர் கற்பிக்கும்போது துலாப் போடாத நாளேயில்லையெனலாம். காரணம் சோதினைக்கு முதல் கிழமை தலைகீழா நிண்டு படிச்சுப் பாடமாக்கிப் போட்டுப் போய் சோதினை செய்யலாம் எண்டதால. என்ர நண்பன் சொன்னதுதான் ஞாபகம் வருது... ’என்னடா எந்த நாளும் லெக்சருக்கு வந்து நித்திரை கொள்ளுறியே’ எண்டதுக்கு அவன் சொன்ன பதில் ’நித்திரையில தான் எனக்கு படிப்பிக்கிறது எல்லாம் விளங்கும்.’  சிலர் இருந்த படியே நித்திரை கொண்டுவிடுவார்கள். சிலர் கண்ணாடி போடுறது நித்திரை கொள்ளுறதை மறைக்கத்தான். பஸ்ஸுக்குள்ள பக்கத்தில இருக்கிறவன் துலாப்போட்டு எங்களுக்கு மேல விழுந்தா எரிச்சல்தான் வரும். அதே நேரம் கொஞ்சம் தள்ளியிருந்து துலாப் போடுறவனை, அவனுடைய இயக்கத்தை ரசிக்கச் சொல்லும். என்னத்தைச் சொன்னாலும் துலாப் போடுறவனுக்குத்தான் அவன்ர கஸ்டம் விளங்கும்.