Saturday, May 30, 2009

கணக்கு_04

ஒத்த உருவமுடைய ஒன்பது மாபிள்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மற்றையவற்றிலிருந்து நிறையால் வேறுபட்டது. (நிறை கூடவாகவோ குறைவாகவோ இருக்கலாம்.) நெம்புத் தராசு தரப்பட்டுள்ளது. நிறைப்படிகள் தரப்படவில்லை. அதிகமாக மூன்று தடவைகள் மட்டுமே நிறுக்கப்பட வேண்டுமெனின் நிறையால் வேறு பட்ட மாபிளை கண்டு பிடிக்க வேண்டும், அதே நேரம் அது மற்றையவற்றை விட நிறை கூடியதோ குறைந்ததோ எனவும் கண்டு பிடிக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்.

Thursday, May 21, 2009

அனுமதியுங்கள்...

இத்தனை கொடுமைகளையும் இழைத்து விட்டு, ஒரு இனப்படுகொலையையே ஓசைப்படாமல் நிகழ்த்தி விட்டு எதுவுமே நடக்காதவர் போல எதுவுமே தங்களுக்கு தெரியாது என்பது போல நிவாரணப் பணியாம்... முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பது பற்றியோ அவர்களை மீளக் குடியமர்த்துவது பற்றியோ எதுவுமே பேசாது முகாம்களிலுள்ள மக்களுக்கு நிவாரணப்பணியாம்...

இத்தனை கொடுமைகளையும் கண்டு சலித்த மக்களுக்கு முதலில் தேவையானது மன நிம்மதியே. எம்மக்களை பசி தாகத்தால் தவிக்க விட்டு, குண்டுகள் போட்டு கொன்று விட்டு, அங்கவீனர்களாக்கிவிட்டு நிவாரணம் தருகிறார்களாம்... நடந்தவற்றிற்கு அப்பாவிப் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார்களா இல்லை சிறிதளவேனும் வருத்தம் தெரிவித்தார்களா? செய்வதெல்லாம் செய்து விட்டு நிவாரணமாம்...

எல்லாத்தையும் விட கொடுமையானது மனதில் ஏற்படும் வலியே... மனதிலுள்ள வலி போய் மனம் வலிமையடையுமாயின் காசு நிவாரணங்கள் எல்லாம் எந்த மூலைக்கு? எம்மக்களுக்கு முதலில் தேவையானது வாழ்வில் நம்பிக்கை ஊட்டக்கூடிய வார்த்தைகளும் அதற்குரிய செயற்பாடுகளுமே... முகாம்களிலிருந்து விடுவித்து தமது சொந்த இடங்களில் துரிதமாக மீளக்குடியமர்த்தினால் பலர் நிகழ்ந்த கொடுமைகளை மறந்து கண்முன்னே கண்ட கொடூரக் காட்சிகளை மறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள். அதுதான் அவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும். அதுவே உண்மையான நிவாரணமுமாகும்.

நிவாரணப்
பணிகளுக்கு நிதி தேவைதான் அதுக்காக அத்தியாவசியாமகத் தேவையான மன உளைச்சலுக்கு நிவாரணம் அளிக்கும் செயற்பாட்டை விடுத்து நிவாரணம் வழங்குதல் பொருத்தமற்றதாகவே படுகிறது. (முகாம்களில் மன உளைச்சலை மென்மேலும் அதிகரிக்கும் கொடுமைகள் நடத்தப்படுவது வேறு விடயம்) மாறாக முகாம்களைத் திருத்தியமைக்கவே நிவாரணங்கள் பயன்படப் போகின்றன. அதனால் இது சிறந்த நிவாரணப் பணியாகுமோ?

எம்மக்களை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை நோக்கி அனுமதி கேட்கிறேன்...

  • ஊர் விட்டு ஊர் தாண்டி நாள் முழுவதும் யுத்த பூமியில் இடம்பெயர்வது என்றால் என்னவென்று உங்களுக்கு காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • நீங்கள்வளர்த்த கால்நடைகள் உங்களின் கண்முன்னே கால்களிழந்து காயம்பட்டுக் கதறுவதைக் காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • பதுங்கி வாழ்வதென்றால் என்ன, பதுங்கு குழிக்குள் வாழ்வதென்றால் என்ன என்பதை உங்களுக்கு வாழப் பழக்க அனுமதியுங்கள்...
  • குண்டுகளின் வெடியோசைகள் அதன் அதிர்வுகள் விளைவுகள் எப்பிடி இருக்கும் என்று உங்கள் பகுதிகளில் காட்ட அனுமதியுங்கள்...
  • எரிகுண்டு எப்பிடியெல்லாம் எரிக்கும் என்பதை உங்களுக்கு ஆதார பூர்வமாக உங்கள் பகுதிகளில் செய்து காட்ட அனுமதியுங்கள்...
  • பல்குழலின் பலத்தையும் கிபிரினால் கிணறு தோண்டுவது எப்படியென்பதையும்காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • பசியே அறியாத உங்கள் பரம்பரையில் வந்த உங்கள் குழந்தை கண்முன்னே பசிக்கொடுமையால் துடிதுடித்து இறப்பதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • உங்கள் பால்குடிக் குழந்தை தாயின் முலையில் பாலின்றி பசியால் தாயின் கையில் இருந்தபடியே உயிர்விடுவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • அந்தத் தாயின் மனது வலியையும் உணர்வு வெளிப்பாட்டையும் உங்களைஅனுபவிக்க வைக்க அனுமதியுங்கள்...
  • உங்களின் அப்பா குண்டு பட்டு கால் கையிழந்து காப்பாற்ற மருந்துகளின்றிகண்முன்னே துடிதுடித்து உயிர்துறப்பதை உங்களுக்கு காட்டுவதற்குஅனுமதியுங்கள்....
  • உங்களின் பேரன் குளிரின் கொடுமையால் நடுநடுங்கியபடி முனகியபடிமூச்சிழுத்து சாவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • உங்களின் தாய் தன் பிள்ளைகளுக்கு கொடுக்க உணவில்லையே என்றவேதனையையில் குண்டடி பட்டு இறப்பதை உங்களுக்க் காட்டஅனுமதியுங்கள்...
  • உங்களின் உறவுகள் உங்களின் பெயரை உறக்கக் கூறியபடியே மாண்டு போவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • உங்களின் அயலவர் காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள் என்ற அவலக் குரல் எழுப்பிய படியே நடு வீதிகளில் இறந்து போவதைக் காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • பட்ட காயத்துக்கு மருந்தின்றி வைத்திய சாலையில் மரத்தடியில் நிலத்தில் படுத்திய படி உங்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதியுங்கள்...
  • ஒரு குடும்பத்துக்கான கூடாரத்தில் ஒன்பது குடும்பங்கள் வாழ்வது எப்படியென்பதை காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • உங்களின் பத்து வயதுப் பிள்ளை கையில் ஒரு தட்டுடன் உணவுக்காய்வரிசையில் நிற்பதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • பசி பட்டினிக் கொடுமையையும் தவித்த வாயின் தாகத்தின் தவிப்பையும் உங்களுக்கு உணர்த்த அனுமதியுங்கள்...
  • உங்கள் சகோதரனை உடல் பிழந்து சிறுநீரகத்தையும் கண்ணையும் எடுத்து வியாபாரம் செய்ய அனுமதியுங்கள்.
  • உங்கள் சகோதரியை கதறக் கதற வன்புணர அனுமதியுங்கள்... (அந்தளவுக்குவெறி பிடித்தவர் நாமில்லை).
  • இத்தனையையும் பார்த்துக்கொண்டு இவற்றைத் தடுத்து உயிர்களைக் காக்க முடியாத மன நிலையில் உங்களைப் புலம்ப வைக்க அனுமதியுங்கள்...
  • எம்மவர்கள் பட்ட கொடுமைகள் நிறைந்த வாழ்வை உங்களை வாழவைத்து வேதனைகளை உணர வைக்க அனுமதியுங்கள்...

மேற்சொன்ன எல்லாத்துக்கும் நீங்கள் அனுமதிப்பீர்களானால் , என்னிடம் பணம் இல்லையாயினும் என்னுறவுகளிடம் மன்றாடியேனும் 500 கோடி ரூபாய் பணம் சேர்த்து உங்களுக்கு தருகிறேன். வாங்கிக் கொள்கிறீர்களா?

இரத்த வெறி கொண்டு பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு இதனை நான் எழுதவில்லை. என்னுடைய பார்வையில் நீங்கள் செய்தது இப்படித்தான் தெரிகிறது... உன்னுடைய காலை வெட்டியெடுத்து, உறவுகளைப் பறித்தெடுத்து விட்டு, உன்னை பசிக் கொடுமையால் தவிக்க விடுகிறேன்... சில நாட்களின் பின் நிவாரணம் தருகிறேன். வாங்கிக் கொண்டு போ... இதுதானே உங்கள் நிலைப்பாடு. அப்பிடியானால் சனநாயகம், சமத்துவம் பற்றிப்பேசும் நாடுகளே உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல எனக்கொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள். போரின் வலியை உங்களுக்கு உணர வைக்கிறேன். சொல்லிப் புரிய வைக்க முடியாதென்பது இன்று நன்கு உணரப்பட்ட விடயமே. அனுமதி கிடைக்குமா?


Monday, May 18, 2009

முடியல...

காதில் விழும் செய்திகளை ஏற்க முடியல...
வெடியொலிகளை காதால் கேட்க முடியல...
தொண்டையை அடைக்கும் துக்கத்தை தாங்க முடியல...
மனதில் எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியல...
என்னதான் நடந்திருக்கும் என ஊகிக்கவும் முடியல...
நாளைய நாளைப் பற்றிச் சிந்திக்கவும் முடியல...
எண்ணங்களை ஒரு நிலைப்படுத்த முடியல...
நம்பிக்கையை கூட என்னால் நம்ப முடியல...
நடந்து வந்த பாதையை மறக்க முடியல...
நடக்கப் போவதையும் நினைக்க முடியல...
சுதந்திரம் என்ற சொல்லை சொல்ல முடியல...
அடங்காத எம் தாகத்தை அடக்க முடியல...
என்னதான் நடந்தாலும் ‘ஆட்டம்’ இத்துடன் முடியல...
தொடரும்......................................................

(தயவு செய்து தலையங்கத்தை வாசிக்கவும்)

Wednesday, May 13, 2009

கணக்கு_03

சவர்க்காரக் கட்டிகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்த்து வையுங்களேன்.
நிறுவனம் இரண்டு விதமான சவர்க்காரக் கட்டிகளை உற்பத்தி செய்கின்றது. ஒன்றின் நிறை ஐம்பது கிறாம் மற்றையது அறுபது கிறாம், ஆனால் உருவ அமைப்பில் வேறுபாடு கிடையாது. சவர்க்காரங்கள் பெட்டிகளில் அடுக்கப்படும். ஒரு பெட்டியில் ஆகக்குறைந்தது பத்து சவர்க்காரங்கள் அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் எண்ணிக்கை மாறுபடலாம்.
தரப்பட்ட பத்து பெட்டிகளில் ஐம்பது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டிகள் ஒன்பதும் ஒரு அறுபது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டியும் கலக்கப்பட்டு விட்டன. சிக்கல் என்னவெனில் அறுபது கிறாம் சவர்க்காரக்கட்டிகள் கொண்ட பெட்டியை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் நிபந்தனை என்னவெனில் விற்தராசு மட்டுமே தரப்பட்டுள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அளக்க வேண்டும். (பெட்டிகள் திறக்கப்பட்டு சவர்க்காரங்கள் வெளியே எடுக்கப்படலாம்.) முயன்று பாருங்களேன்...