Tuesday, December 01, 2009

உபயம்...

கல்லூரி வாழ்க்கையில மறக்க முடியாத நாட்களில நாடகம் பழகிய (பழகப் போறன் எண்டு வீட்டில சொல்லிக் கொண்ட) நாட்கள் மறக்கமுடியாதவை. நாடக வாழ்க்கை வாழ்ந்தம் எண்டும் சொல்லலாம். ஏனெண்டா பல நாடகங்களை, நாடக நெறியாளர்களாகிய ஆசிரியர் வீடுகளுக்குப் போய்த்தான் பழகியிருக்கிறம்.  சைக்கிளையும் எடுத்துக் கொண்டு தனியார் வகுப்புகளுக்கும் முழுக்குப் போட்டுக் கொண்டு வீட்டில நாடகம் பழகப் போறன் எண்டு சொல்லிப் போட்டு வெளிக்கிடுறது. குறுக்கு வழி குச்சொழுங்கை எண்டு இல்லாத ஒண்டையும் உருவாக்கிக் கொண்டு சைக்கிள் நுழையாத இடங்களுக்குள்ளாலயும் சைக்கிளை விட்டுக் கொண்டு போறது. ஆசிரியர்களின் வீடுகளுக்குப் போகேக்க என்னவோ தனித்தனியாத்தான் போவம். முடிஞ்சு வரேக்க ஒரு பெரிய பட்டாளமே வரும். இரகுவரன் ஆசிரியரினதும் சத்தியசீலன் ஆசிரியரினதும் வீடுகளுக்கு சென்று நாடகம் பழகினாலும் சீலன் ஆசிரியரிடம் ஆங்கில நாடகம் பழகிப் போட்டு வரேக்க இருக்கிற ஆர்ப்பாட்டம் மாதிரி மற்றது இருக்கிறேல்ல. பெரும்பாலும் ஆங்கில நாடகம் பழகிறது ஒரே வகுப்பு மாணவர்கள் தான். அப்ப வீதியில போகேக்க பம்பலைப் பற்றிச் சொல்லவும் வேணுமோ...

 வீதியில வரேக்க ஒருத்தன்ர சைக்கிள் கைப்பிடியில மற்றவன் கையைப் பிடிச்சுக் கொண்டு சைக்கிள் ஓடுறதில ஒரு சுகம் இருக்குப் பாருங்கோ. அது தனி அலாதியானது. என்னதான் காவல்துறை சட்டம் எண்டு சொன்னாலும் எனக்கு இப்பிடி சைக்கிள் ஓடி வாறதில ஒரு சந்தோசம். ஒரே வகுப்புப் பொடியள் எண்டா நக்கல் நையாண்டிகளுக்கும் இடைக்கிட ‘கூ’ அடிச்சுக் கத்திக் கொண்டு போறதுக்கும் குறைவிருக்காது. அதுவும் கொஞ்சம் இருட்டெண்டா காணும். சத்தத்தைப் பற்றி பேசவும் வேணுமோ? வீதியால போறாக்கள் ஏன் வாகனங்கள் கூட எங்களை விலத்தித்தான் போக வேணும் எண்ட நினைப்பில வீதி முழுக்க எங்கட ஆட்சிதான். எத்தினை பேர் பேசிக் கொண்டும் எங்களுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டும் போயிருப்பினம். அதெல்லாம் எங்களுக்கு உறைச்சால்தானே. அதெல்லாம் இப்ப சிங்கள மொழியில திட்டு வாங்கேக்க பயன்படுதெண்டதில ஒரு திருப்திதான், வேறென்னத்தைச் சொல்ல...

நானும் கல்லூரி காலத்திலிருந்தான நண்பனும் பதிவருமான கிருத்திகனும் நாடகம் பழகப் போன பொடியள்ல ரண்டு பேர். (இதையும் வாசிங்கோ) முடிஞ்சு வரேக்க எங்கட எல்லாற்ற சைக்கிளும் நிப்பாட்டப் படும் இடம் சுதாஸ் (பெயர் சரியென்று நினைக்கிறன்) ஐஸ்கிறீம் கடை. எங்களுக்கு என்ன விதமான ஐஸ்கிறீம் வேணுமெண்டு கடைக்காரனுக்கே தெரியும். ஆக்கள் எண்ணிக்கையும் பெரும்பாலும் ஒரே அளவாத்தான் இருக்கும். கடைக்காரனுக்கு நாங்கள் சொல்ல முன்னமே ஐஸ்கிறீம் போட்டுக் கொண்டு வந்திடுவான். அது முடிய பொடியளுக்கு பீடாவும் தேவையெண்டும் தெரியும். என்னத்தைத் தான் சொன்னாலும் எங்கட நாடகக் குழுவில ஆர் காசு குடுக்கிறதெண்ட பிரச்சினை இருந்ததில்லை. எல்லாருமே குடுப்பாங்கள் எண்டு சொல்லுவன் எண்டு நினைச்சுப் போடாதேங்கோ... முதல் ரண்டு நாள் கீத்தின்ர உபயம். மூண்டாவது நாள் ஆரோ ஒருத்தன் தான் குடுக்கிறன் எண்டு சொன்னான். அந்த நேரம் பாத்து எங்கட குழுவில இருந்த தோசை எண்டொருத்தன் சொன்னான் பாருங்கோ ‘நீ காசு குடுத்தா கீத்துக்குப் பிடிக்காது. அவன், தான் தான் குடுக்க வேணுமெண்டு சொல்றவன்” (எப்பிடித்தான் இப்பிடியான வசனங்களை கண்டு பிடிக்கிறாங்களோ???) இதுக்குப் பிறகு கீத் வாய் திறக்கேலுமோ? ஐஸ்கிறீம் குடிச்ச எல்லா நாளும் கீத்தின்ர உபயம் தான். உண்மையைச் சொல்லோணுமெண்டா முகம் சுழிக்காம நண்பர்களுக்கு வாங்கிக் குடுக்கிறதெண்டா அவன் தான். அதை விட இன்னுமொரு உண்மை, மற்றாக்களின்ர உபயத்தில சாப்பிடிற மாதிரி திருப்தி சொந்தக் காசில சாப்பிடேக்க வாறேல்ல. உதென்ன உது... லவ்லி கூல்பாரோட ஒப்பிடேக்க இதெல்லாம் ஒரு லந்தைப் பழம் (அதாங்க ஜுஜுபி) எண்டு கீத் சொல்ல வாறது புரியுது. இருந்தாலும் இதையும் மறக்கேலுமோ?