Sunday, August 23, 2009

இலங்கையிலுள்ள பதிவர்கள் சந்திப்பு - எனது பார்வை.

ஆரவாரமாக அறிவித்த படி இலங்கையிலுள்ள பதிவர்களின் சந்திப்பானது இன்று (23/8/2009) கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்த பதிவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் சிறந்த ஒழுங்கமைப்பைக் கோடுகாட்டியிருந்தது. ஆறாம் தரம் கல்வி பயிலும் மாணவன் முதல் நீண்ட காலம் எழுத்துலகை ஆண்டு வரும் பெரியவர்கள் வரை அனைவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னுடைய நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. புல்லட், சுபானு, ஆதிரை, மருதமூரான், எழில், சேரன், லோஷன் போன்றவர்கள் பயனுள்ள வகையில் உரையாற்றியிருந்தனர். சதீஷின் நிகழ்ச்சித் தொகுப்பு பாராட்டுக்குரியது. வந்தியத்தேவன் இறுதியாக கருத்துரை வழங்கியிருந்தார். மது இவையனைத்தையும் சிறந்த முறையில் நேரடி ஒளிபரப்பாக புலத்திலுள்ள நம்மவர்களும் மற்றைய நாட்டவர்களும் பார்ப்பதற்கு ஏற்படுகளைச் செய்திருந்தார். உண்மையில் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வுதான்.

தமிழ் பதிவர்கள் தமிழ் எழுத்துக்களை (ழ /ல) சரியான முறையில் கையாள்வது எனவும் இலங்கையில் அன்றாடம் பாவிக்கப்படும் தமிழ் மொழி நடையிலேயே இனி எழுதலாம் என்றும் கூறப்பட்டது. தமிழ் விசைப்பலகை மற்றும் யாழ்தேவி திரட்டி சம்பந்தமாக நீண்ட நேரம் விவாதம் இடம்பெற்றாலும் பல பயனுள்ள தகவல்கள் பரிமாறப்பட்டன. தொழில்நுட்பத்தகவல், பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் அவரவர் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். மொத்தத்தில் இன்றைய சந்திப்பானது என் போன்ற எழுத ஆரம்பித்துள்ள பதிவர்களுக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கும் என நம்புகிறேன். இன்றைய இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்.

இது இவ்வாறு இருக்க, இன்று நடந்த மற்ற விடயங்களையும் சொல்லத்தானே வேண்டும். புல்லட்டின் கடி இந்த பதிவர் சந்திப்பையும் விட்டு வைக்கவில்லை. அப்பப்ப சூடாப் போற நேரம் எல்லோரையும் சிரிக்க வைத்திருந்தார். ஆதிரை கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். ஆனாலும் சின்னப்பொடியன் பால்குடி நான் வந்திருக்கிறேன் என்று தெரிந்திருந்தும் எனக்கு மேடையில் வைத்து கேக் ஊட்டவில்லை. இது சம்பந்தமாக ஏற்பாட்டுக்குழுவினரை நான் வன்மையாகக் கண்(ண)டிக்கிறேன். அழுது அடம்பிடித்து வாங்கலாம் எண்டு நினைச்ச போது புல்லட் அண்ணா என்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு முழுக் கேக்கையும் எனக்குத் தந்திருந்தார். மற்றாக்களையும் பார்க்க பாவமாக இருந்ததால் எனக்கு கிடைச்சதை பெருந்தன்மையாக மற்றாக்களுக்கும் குடுத்தேன். வடையும் பற்றீசும் கூடவே நெஸ்கவேயும் பரிமாறியிருந்தனர். ஏற்பாட்டுக்குழுவின் தலையில துண்டுதான். நிதி நெருக்கடியைச் சமாளிக்க உண்டியல் வைக்கப்பட்டது. நூல் விநியோகமும் இடம்பெற்றது. வந்தியண்ணா வந்திருந்த அனைவரிடமும் இச்சந்திப்பு பற்றிய வலைப்பதிவுகளைக் கேட்டு வாங்குவதில் மும்முரமாக இருந்தார். ஏற்பாட்டுக்குழுவின் இன்னுமொருவர் லோஷன் அண்ணா சிங்க பதிவால் அடி வாங்கி அடி வாங்கியே நொந்து போனார். இருக்கிறம் சஞ்சிகை இலவசமாக வழங்கப்பட்டது. மொத்தத்தில உண்டியல் பக்கமே தலைகாட்டாத என்போன்றவர்களுக்கு செலவில்லாமல் வரவுதான் அதிகம்.

22 comments :

  1. உங்களுக்கு முழுமையாகத் தந்த கேக்கை ஒழித்துவைக்காமல் அனைவருக்கும் கொடுத்தது உங்கள் பிழைதான்.

    ReplyDelete
  2. வந்தியண்ணே, உங்களுக்கு ரண்டு துண்டு கேக் தந்தும் இப்பிடிச் சொல்லுறியள் என்ன... ம்ம்ம்... தந்தது என்ர பிழைதான்.

    ReplyDelete
  3. ஹிஹி!
    உவரு சின்னப்பிள்ளையாம்... நாம கேப்போமாம்...
    பால்குடி சின்னப்பிள்ளைபோல ஓடியாடி வேலை செய்ததென்னவோ உண்மை.. ஆனால அதுக்காக சின்னப்பிள்ள கைப்பிள்ள என்று அமிதாப்பச்சன் சைசில ஒருத்தன் சொன்னால் நம்பமுடியுமா?

    ReplyDelete
  4. எனது வலைப்பூ தாய்மடி, நான் பால்குடி... அறிமுகமே ஆரவாரமா இருந்திச்சு... மனநிறைவான ஒரு நாள்...

    ReplyDelete
  5. :-)) கேக் நுண்ணரசியலை ரசித்தேன்..

    ReplyDelete
  6. என்னுடைய வலைப்பூவுக்கு வருகை தந்து கருத்துரைகளையிட்ட புல்லட், மது மற்றும் டொன் லீ அண்ணாமார்களுக்கு நன்றிகள்.
    ஒரே நாளில் பல பதிவுலக நண்பர்களின் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியே...

    ReplyDelete
  7. முதல் சந்திப்பே அசத்தல், இனி என்ன பதிவுலகில் சரித்திரம் படைப்போம்.

    ReplyDelete
  8. அந்தக் கேக்குக்கு என்ன நடந்தது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.. இப்போது தான் புரிந்தது..
    பல புதிய இனிய அறிமுகங்களை ஏற்படுத்தித் தந்திருக்கின்றது இந்த சந்திப்பு.. உண்மையில் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய விடையம் பால்குடி.

    ReplyDelete
  9. தம்பி நீங்கள்தான அந்தக்குட்டிப்பையன். வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  10. நன்றி சந்ரு சுபானு மற்றும் R.V.Raj.
    @ சுபானு, ஓ.. நீங்களும் என்னைப்போல கேக்குக்காகத்தான் வந்திருக்கிறீங்களோ.....
    @ Raj நீங்கள் தேடும் அந்தக் குட்டிப்பையன் நானில்லை.
    இதுதான் அந்தச் சுட்டிப்பையனுடைய முகவரி http://poongasiruvarmadal.blogspot.com/

    ReplyDelete
  11. பால்குடிக்கு பால் கொடுக்காமல் கேக் கொடுத்ததை நான் வன்மையாகக்கண்டிக்கின்றேன். நேற்று சந்திப்பு முடிந்ததும் சற்று நேரத்தில் வேலைக்கு சென்று விட்டேன். பதிவிட முடியவில்லை. இப்போதும் போதிய நேரமில்லை. விரைவில் முழுமையான ஒரு சந்திப்பு போடுவமா கேக்குடி..........சாரி பால்குடி.

    ReplyDelete
  12. சதீஷ் அண்ணே, உங்களுக்கு நான் கேக் தரேல்லத்தான். அதுக்காக இப்பிடியா நக்கலடிக்கிறது. நான் பாவமெல்லே... அதுக்கென்ன விரைவில இன்னுமொரு சந்திப்பு போட்டாப் போச்சு....

    ReplyDelete
  13. அனைவரையும் பார்த்தது சந்தோஷமாக இருந்தது.
    http://tamilgopi.blogspot.com/2009/08/15.html இங்கேயும் கொஞ்ச படங்கள் உண்டு...

    ReplyDelete
  14. நல்ல காமெடியாகவும் விவரித்திருக்கிறீர்கள்.

    சந்திப்பிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :)

    ReplyDelete
  15. இங்கே வந்தாலும் வருக்கிரான்களே.. பால்குடியும் இதை விடாதா?

    உங்கள் உழைப்பும் மெச்சத் தக்கது நண்பரே.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ////நிகழ்வுக்கு வந்தவர்களுக்கான சிற்றுண்டிகளை நண்பர் ‘பால்குடி’ எஸ். தனஞ்சயன் விநியோகித்திருந்தார். இவர் குறித்து ஒரு உபரித்தகவல், யாழ் புற்றளை பிள்ளையார் கோவில் பூங்காவன விழாக்காலங்களிலும் இவர் மோதகம், கடலை, வடை, பொங்கல் என்று பகிர்ந்தளித்ததை நானும் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால், நேற்று நான் கருத்து பகிர்ந்துகொண்டிருந்த சமயம் வடையை விநியோகித்தமையால் எனக்கு வடை கிடைக்கவில்லை. ‘பால்குடி’ நல்ல பேச்சாளர் ஏனோ தெரியவில்லை நேற்று எந்தக் கருத்து பகிர்தலிலும் ஈடுபடவில்லை.////

    மேலயுள்ளதும் நான் சொன்னது என்னுடைய பதிவில்... வாழ்த்துக்கள் பால்குடி தங்களின் பதிவுலக பயணத்துக்கு.....

    ReplyDelete
  17. தாய்மடி,ஆறதலாக தலைசாய்க்க ஓர் இடம்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. நீங்க தானா தாய்மடி உங்களை நேரில் காணக்கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி.

    ReplyDelete
  19. கனககோபி, ஊர்சுற்றி, முனியப்பன், லோஷன், மருதமூரான், மன்னார் அமுதன் மற்றும் இலங்கனுக்கும் எனது நன்றிகள். தொடர்ந்தும் தொடர்பிலிருப்போம்...

    ReplyDelete
  20. அருமையாகவும் நகைச்சுவையாகவும் எழுதியுள்ளீர்கள் நன்றி...

    ReplyDelete