Saturday, August 29, 2009

தண்டனை

அப்ப நான் ஏழாம் வகுப்புப் படிச்சுக் கொண்டிருந்தனான் எண்டு நினைக்கிறன். பள்ளிக்கூட தவணைச் சோதினைக்கு இன்னும் ஒரு கிழமையே இருந்தது. பின்னேரம் தனியார் கல்வி நிறுவனம் ஒண்டில படிச்சுப் போட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தன். என்னோட கூட என்ர வகுப்புப் பொடியளும் வந்தவங்கள். ஒருத்தன் நேற்று விளையாடின பேணியும் பந்தும்(எங்கட ஊரில சின்னப் பொடியள் மத்தியில பிரபல்யமான விளையாட்டுக்களில் ஒன்று- விளையாட்டைபற்றி விளங்கப்படுத்த வேணும் எண்டா இன்னுமொரு பதிவு போடோணும்)  பற்றி சொல்லிக் கொண்டு வந்தான். இண்டைக்கும் அதுதான் விளையாடுறது எண்டான். எனக்கு ஒரு ஆசை துளிர்விட்டது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் பேணியும் பந்தும் விளையாடுவதற்காக நானும் நண்பர்களோட எங்கட ஊரின்ர வயல் வெளியில (நெல் விதைக்காத காலங்களில வயல் வெளியெல்லாம் எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள தான்).

விளையாட்டு நல்லாத்தான் போய்க் கொண்டிருந்தது, பக்கத்து வீதியால அப்பா போகுமட்டும். அப்பா  சைக்கிள்ல (துவிச்சக்கரவண்டி) போய்க் கொண்டிருந்தார். பொடியள் சும்மா இருந்தாங்களோ? என்ர பெயரைச் சொல்லிக் கத்தினாங்கள். மைதானத்தில ஓட்டப் போட்டியில ஓடுற ஒருத்தனையோ இல்லை மேடையில முதற்பரிசு வாங்கிற ஒருத்தனின் பெயரைச் சொல்லி இந்தளவுக்கு கத்தியிருக்க மாட்டாங்கள். அப்பாவை நான் பார்த்தேன் அவர் எங்களைப் பார்க்கவில்லை, நான் அதில இருக்கிறனோ எண்டு தேடவில்லை. அவருடைய கண்பார்வைக்குக் கிட்ட இருந்த ஒரு பொடியனைப் பார்த்துக் கொண்டு ஒரு சின்னப் புன்னகையுடன் தாண்டினார். என்ர வகுப்புப் பொடியள்தான் எண்டதைக் கண்டு கொண்டார். வீட்டுப் பக்கம் தான் போறார். என்னுடைய கையிலிருந்த பேணி கீழே விழுந்தது. சைக்கிளை நோக்கி ஓடினேன். என்ர பொடியள் செய்த கைங்கரியத்தால விளையாட்டைப் பாதியிலேயே நிப்பாட்டி விட்டு வீட்டை ஓடினேன். சோதினை வருதெண்டா மைதானப்பக்கம் தலை காட்டக்கூடாது எண்ட கட்டுப்பாடு எங்கட வீட்டில. இல்லாட்டி விளையாடிப் போட்டு களைச்சு வேத்து வந்து சாப்பிடுறதும் படுக்கிறதும் தான் வேலை. படிக்கிறதில்லை.

அப்பத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்ச அப்பா நான் அவசரப்பட்டு நுழைஞ்சபோது சொன்னார்.
‘வயல்ல நிண்டனி போல கிடந்துது.’
‘இல்லை... சும்மா... அப்பத்தான்...’ வார்த்தைகள் தடுமாறின.
‘உன்ர பொடியன், சோதினை வருதெண்ட நினைப்பில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறான்.’ அம்மாவுக்குச் சொல்லப்பட்டது.
‘சோதினைக்குப் படிக்கோணும் எண்டதுக்காகப் பூக்கண்டுக்குத் தண்ணி ஊத்துறதையும் நிப்பாட்டி விட பொடியன்ர கூத்தைப் பாத்தியோ. பூக்கண்டு கிடந்து வாடுது. நாளைக்கு காலம பள்ளிக்கூடம் போக முன்னம் நீ இருபது குடம் தண்ணி பூக்கண்டுகளுக்கு ஊத்தோணும். அப்பத்தான் நீ திருந்துவாய்.’

அடி விழாதது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஒரு வேளை தான் கண்ட உடன விளையாட்டை விட்டுட்டு வந்திட்டன் எண்டதில திருப்தியோ அல்லது முன்னம் ஒருக்கா தன் முழுப் பலத்தையும் சேர்த்து எனக்கு அடிச்சதில ஏற்பட்ட மனக்கசப்பான சம்பவங்களோ தெரியாது. (இதைப் பற்றி பிறகு சொல்லுறன்). அந்தக் காலத்தில ஊரில கிணத்திலதான் தண்ணியெடுக்கோணும். அடுத்தநாள் காலம வெள்ளனவே எழுப்பப்பட்டேன். தண்ணியூத்த வேணுமெல்லோ... ம்ம்ம் அதிகாலையில எழும்பிறதெண்டா இண்டைக்கும் எனக்கு சீவன் போற மாரி கஷ்டமான காரியம். எழும்பி குடத்தையும் தூக்கிக் கொண்டு போனன். கிணத்தில கப்பியால தண்ணி அள்ளிக் கொண்டு போய் ஏறக்குறைய எழுபத்தஞ்சு மீற்றர் தூரத்துல இருக்கிற பூக்கண்டுகளுக்குத் தண்ணி ஊத்தவேணும். முதல் ரண்டு குடம் தண்ணி நானே கிணத்தில அள்ளிக் கொண்டு போய் ஊத்தினன். மூண்டாம் முறைக்குத் தண்ணியெடுக்க வர கிணத்தடியில அப்பா. நான் தண்ணியள்ளி ஊத்திறன் நீ கொண்டு போய் பூக்கண்டுக்கு ஊத்து. எனக்கு தண்டனையும் கிடைச்சுது. பூக்கண்டுகளும் செழிச்சு வளந்திச்சுது.

6 comments :

  1. நீங்கள் ஏழாம்வகுப்பு தவணைச் சோதினைக்கு முதல்... நான் ஓ/எல் சோதனைக்கு முதல்.. எனக்கும் அடி விழேல்லை

    ReplyDelete
  2. ////அடுத்த ஒரு சில நிமிடங்களில் பேணியும் பந்தும் விளையாடுவதற்காக நானும் நண்பர்களோட எங்கட ஊரின்ர வயல் வெளியில (நெல் விதைக்காத காலங்களில வயல் வெளியெல்லாம் எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள தான்). ////

    சுரேஷ் வீட்டுக்கு முன்னாலயுள்ள வயல் காணிதானே? அதுக்கதானே நீங்கள் 10வகுப்பு மட்டும் கிரிக்கட்டும் விளையாடின்னியள்...... இரண்டு மூன்று தடவை நானும் அங்க கிரிக்கட் விளையாடியிருக்கிறன்.
    சுரேஷ் வீட்டுக்கு முன்னாலயுள்ள வயல் காணிதானே? அதுக்கதானே நீங்கள் 10வகுப்பு மட்டும் கிரிக்கட்டும் விளையாடின்னியள்...... இரண்டு மூன்று தடவை நானும் அங்க கிரிக்கட் விளையாடியிருக்கிறன்.

    ReplyDelete
  3. //பொடியள் சும்மா இருந்தாங்களோ? என்ர பெயரைச் சொல்லிக் கத்தினாங்கள்.//
    எனக்கும் இப்பிடி பல சந்தர்ப்பத்தில் நடந்திருக் இந்த நண்பர்களால்.
    வயலையும் பேணிப்பந்தையும் ஞாபகப்படுத்தினீர்கள் நன்றி

    ReplyDelete
  4. கீத், மருதமூரான் மற்றும் இலங்கன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    மருதமூரான் அதே வயல்காணிதான். பிற்காலத்தில அங்க கிரிக்கட்டும் விளையாடின்னாங்கள். சின்ன வயசில பந்து, மட்டை, விக்கட் வாங்க காசில்லாததால் பேணியும் பந்தும் விளையாடுவோம். ஒரு பந்தும் பழைய பேணிகளும் சில சிரட்டைகளும் தானே அதற்கு மூலதனம்.

    ReplyDelete
  5. தண்டனை சிறப்பு
    அனுபவம் பெரிசு
    “எனக்கு தண்டனையும் கிடைச்சுது. பூக்கண்டுகளும் செழிச்சு வளந்திச்சுது.”

    அருமையான பதிவு பால்குடி

    ReplyDelete
  6. கரவைக்குரல் அண்ணாவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete