Friday, July 24, 2009

அவசர வேண்டுகோள்!!!

வவுனியா முகாம்களில் வாழும் இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் தம்முடைய கல்வித் தேவைக்காக சில பாடப் புத்தகங்களை வாங்கித்தருமாறு கேட்டிருக்கிறார்கள். கொழும்பிலிருந்து கல்வி கற்பிக்கச் செல்லும் ஆசிரியர்களூடாக கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய உரிமையுடன் கூடிய அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் (ICUTS) என்ற அமைப்பினூடாக தங்களாலியன்றதை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு சில மாதங்களாக சிறப்பான முறையில் இதனை முன்னெடுத்திருக்கிறார்கள். இதனை அவர்களின் http://www.icuts.org/ இணையத்தளத்தினூடாக அறிய முடிகிறது. ஆனால் அவர்கள் தற்போது நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். இதுவரையிலும் சிறப்பாகச் செய்ய முடிந்ததை தற்போது நிதி நெருக்கடியால் செய்யமுடியாமல் போகின்றதே என்கின்ற மாணவர்களின் மன வலியை அவர்களின் அவசர வேண்டுகோள் மூலமாக உணர முடிகிறது. பரீட்சை மிக நெருங்கி விட்ட நிலையிலும் தங்களாலியன்றதை செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியோடு நிற்கிறார்கள்.

எம்முறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட உள்ளங்களே! தயவு செய்து நீங்களாக முன்வந்து மாணவர்களின் கல்விக்காக உதவி செய்யுங்கள். இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள நபருடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விரைந்து உதவுங்கள். அவர்களின் நெல்லெண்ணம் ஈடேற உதவுங்கள். மேலதிக விபரங்களுக்கு... http://www.icuts.org/


முகாம்களில் வாடும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதன் மூலம் அவர்களை கல்வி கற்க ஊக்கப்படுத்தலாம். இந்த முறை குறுகிய ஆயத்தப்படுத்தலின் மூலமாக சிறந்த பெறுபேறு பெறுவது கடினமாயினும் அடுத்த வருடமாயினும் அவர்கள் சிறந்த பெறுபேற்றுக்காக முயல்வார்கள். கோட்டா முறை மூலம் உள்வாங்கப்படும் மாணவர்களின் நலன் கருதியாயினும் கற்றலுக்கு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். அடுத்த வருடம் கற்கவிருக்கும் மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் கைமாறும். வேறு பொழுது போக்குகளோ கதைப்புத்தகங்களோ இல்லாத நிலையில் அங்கு வாடும் மாணவர்கள் தொடர்ந்து இப்புத்தகங்களை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு முயல்வார்கள்.

முகாம்களுக்குள் நுழையவே முடியாத இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் உயர்தரப் பரீட்சை காலத்தோடு முடிவுக்கு வரலாம். அதற்கிடையில் முடிந்தளவு செய்வதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முயல்கிறார்கள். அதே நேரம் அங்கு வாடும் மாணவர்களுடன் வெளியேயிருந்து தொடர்புகளை உருவாக்கி மாணவர்களின் மனதில் நம்பிக்கையையும் எதிர்காலம் மீதான புத்துணர்வையும் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

புத்தகங்கள் கொடுப்பதனால் முகாம்களில் வாடும் மக்களின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் உண்டாகும் என்றோ அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்றோ வீண் விதண்டாவாதம் செய்யும் நேரம் இதுவல்ல. எமது நாட்டின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டவர்கள், இடம் பெயர்ந்து எல்லாத்தையும் இழந்து வாடும் கொடுமையை அனுபவித்தவர்களுக்கு இன்றைய அவல நிலை புரியும்.

உதவிக்காக ஏங்கித் தவிக்கும், கடிதம் எழுதிவிட்டு பதிலுக்கு கல்விப் புத்தகங்கள் வந்து சேரும் என்று காத்திருக்கும், மற்றைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அன்புத் தம்பி தங்கைக்காக நான் இதுவரை என்ன செய்தேன்? தேடியும் விடை கிடைக்கவில்லை. உங்களிடம் விடை இருக்கிறதா?

Tuesday, July 21, 2009

கணக்கு_07

ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தன்னுடைய வங்கிக் கணக்கில் 100 ரூபாயை வைத்திருக்கிறார். அவர் ஆறு தடவைகள் பணத்தை மீள எடுப்பதன் மூலம் 100 ரூபாயையும் மீள எடுக்கிறார்.கணக்கிலுள்ள மீதி வருமாரு:
மீளப்பெறல் வங்கி மீதிப்பணம்
ரூ.50 ரூ.50 ரூ.25 ரூ.25 ரூ.10 ரூ.15 ரூ.8 ரூ.7 ரூ.5 ரூ.2 ரூ.2 ரூ.0 -------- -------- ரூ.100 ரூ.99 -------- --------

கணக்கு எங்கேயோ உதைக்குதே? கணக்கில எங்க பிழை எண்டு கண்டு பிடியுங்கோ பாப்பம். நீங்கள் கணக்கியலில எப்பிடி எண்டு பாத்திடுவமே?





Sunday, July 05, 2009

வலிக்குது...


யாரோ எல்லாரும் வருகிறார்கள்...
பேசும் மொழி புரியவில்லை...
இன்று இரவு...
ஒன்பது மணி...
விசாரணை...
என்ன செய்ய?
வேறு வழியில்லை...
செல்கிறேன்...

கைகளால் எதையென்று
மறைப்பது...?
என்னுடம்பில்...
எங்கெங்கோ எல்லாம்...
என்னென்னவோ எல்லாம்...
செய்கிறார்கள்...
எனக்கு நடப்பது என்னவென்று
என் அறிவுக்கு விளங்கவில்லை...
எத்தனை பேரென்று...
எண்ணத் தோணவில்லை...
வலி தாங்க முடியவில்லை...
என் அழுகை அவர்களின்
கொக்கரிப்பில் அடங்குகிறது.

எல்லாம் முடிந்தது...
வாகனத்தில் இறக்கப்படுகிறேன்..
தறப்பாழினுள் நுழைகிறேன்..
நேற்றுத்தான் அக்காளானவள்
ஓடி வந்து அணைக்கிறாள்.
எனக்கும் இப்பிடித்தான் பிள்ளை...
எங்கட நிலை இதுதான்...
யோசிச்சுப் பயனில்லை...

எல்லாமே திறந்த வெளி...
நடந்தது எல்லாருக்குமே தெரியும்..
எல்லாரும் என்னை என்ன நினைப்பார்கள்?
நான் விரும்பியா இதெல்லாம்
எனக்கு நடக்கிறது...
எம்மில் சிலருக்கு மட்டும் தான்
விதிக்கப்பட்டதோ...
நான் அப்பிடி என்ன தான்
பிழை செய்து விட்டேன்...?
நான் கவரிமானாகவா...?
இல்லை வாழவா...?
வழி தெரியவில்லை...
வலி தாங்கமுடியவில்லை...

Wednesday, July 01, 2009

கணக்கு_06

ஐந்து சதம் ஒரு ரூபா ஐந்து ரூபா நாணயக் குற்றிகள் தரப்பட்டுள்ளன. மொத்தமாக நூறு நாணயக் குற்றிகள் இருக்கின்றன. நூறு ரூபா பெறுமதியான நாணயங்களே இருக்கின்றன எனின் எத்தனை ஐந்து சதம் எத்தனை ஒரு ரூபா எத்தனை ஐந்து ரூபா நாணயக் குற்றிகள் இருக்கின்றன?

Friday, June 26, 2009

கணக்கு_05

கணக்கு_04 இலுள்ள அதே கணக்குத்தான். ஆனால் மாபிள்களின் எண்ணிக்கை ஒன்பதுக்குப் பதிலாக பன்னிரெண்டு.
கணக்கை மீண்டும் தருகிறேன்.

ஒத்த உருவமுடைய பன்னிரெண்டு மாபிள்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மற்றையவற்றிலிருந்து நிறையால் வேறுபட்டது. (நிறை கூடவாகவோ குறைவாகவோ இருக்கலாம்.) நெம்புத் தராசு தரப்பட்டுள்ளது. நிறைப்படிகள் தரப்படவில்லை. அதிகமாக மூன்று தடவைகள் மட்டுமே நிறுக்கப்பட வேண்டுமெனின் நிறையால் வேறு பட்ட மாபிளை கண்டு பிடிக்க வேண்டும், அதே நேரம் அது மற்றையவற்றை விட நிறை கூடியதோ குறைந்ததோ எனவும் கண்டு பிடிக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்.
எங்கே உங்கள் திறமையை நிரூபியுங்கள் பார்க்கலாம்.

Thursday, June 18, 2009

நம்மால் முடியுமா?



இருக்கிறாரா இல்லையா என ஆராய்வதிலும் ஐந்தாம் கட்டம், றோ என்றெல்லாம் ஆக்கங்கள் எழுதுவதிலும் அது பற்றி விவாதிப்பதிலுமே எங்களுடைய நேரத்தை செலவிடுகிறோமே தவிர நாம் செய்ய வேண்டிய செயல்களில் நாம் கவனம் செலுத்தவில்லை. நாம் நடந்து செல்ல வேண்டிய இலட்சியப் பாதையில் இன்று எம் காலடியில் முட்களும் கற்களும் நிறைந்து கிடக்கின்றன. அவற்றை விலக்கி எவ்வாறு அடுத்த காலடியை முன்னோக்கி எடுத்து வைப்பது என்பது பற்றிச் சிந்திப்பதை விடுத்து, அலட்சியப்படுத்தி விட்டு தூரத்தே தெரியும் இலட்சியத்தைப் பற்றியே சிந்திக்கிறோம்.

இன்று வவுனியா வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் மக்கள் பற்றி, அவர்களுக்கு நாம் எவ்வாறான வழிகளில் உதவலாம் என்பது பற்றிச் சிந்தித்து செயலாற்ற இன்னும் நாம் துணியவில்லை. யுத்தத்தின் கொடூரத்தால் மரணத்தின் வாசலையே முத்தமிட்டவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடைய வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கிறது? நாம் உண்மையை அறிய முற்படவில்லை. எல்லோருக்குமான பொது நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒன்று, இன்று ஒரு சில சமூகத்தவர்களின் தலையில் போய் பொறிந்திருக்கிறது. இன்று முள் முடியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். உலகெங்கணும் பரந்து வாழும் தமிழர்களிடையே இன்று தாங்கொணாத் துயரம் அனுபவிப்பவர்கள் அவர்களே. தங்களுக்கான துயரமல்ல அது. அவர்கள் அதை விரும்பிச் சுமக்கவும் இல்லை. நாங்களும் சுமக்க வேண்டிய எங்களுடைய பங்கையும் சேர்த்தல்லவா அவர்கள் சுமக்கிறார்கள். இறுதி வரை நாங்கள் சுமந்த நம்பிக்கையையே அவர்களும் சுமந்தார்கள். அதுக்காகவே வாழத்துணிந்தார்கள். தியாகங்கள் செய்ய தயங்காதவர்களாக விளங்கினார்கள். வா வென்று அழைக்கும் பரந்து விரிந்த வன்னிப் பரப்பில் வந்தவர்களுக்கு வாரி வாரிக் கொடுத்த கைகள் அவர்களுடையது. வானம் பார்த்த பூமியில் வேளாண்மை செய்து பசியின்றி வாழ்ந்தவர்கள் அவர்கள். இன்று என்ன நிலை?

உணவு உண்ணுகிறார்களா? போதியளவு கிடைக்கிறதா? நீர் கிடைக்கிறதா? கொடுக்கப்பட்ட குடில்களில் வசிக்க முடிகிறதா? அத்தியாவசிய பண்டங்கள் கிடைக்கிறதா? உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா? அவர்களின் உடல்நிலை என்ன? மனநிலை என்ன? போன்ற ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு நாம் பதில் தேட முயலவில்லை.


இத்தனை கேள்விகளுக்கும் எங்களுடைய பதிலாக அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். எங்களை உள்ளுக்குள் விடுவதில்லையே. எங்களை அனுமதித்தால் அது செய்வம் இது செய்வம். இப்படித்தான் எம்மில் பலர் பேசிக் கொள்கிறோம். ஆனால் அதற்குரிய முயற்சிகளை எள்ளளவேனும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் உண்மையான அக்கறை எமக்கு அம்மக்கள் மீது இருந்திருந்தால் இந்நேரம் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் சின்னஞ்சிறு உதவிகளை விட பெரிய அளவில் உதவியிருக்கலாம். சந்தர்ப்பம் கிடைப்பதென்பது மிக மிக அருமையானது. அதை நாம் பயன்படுத்தும் விதத்திலேயே பெறுபேறு தங்கியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேசக்கரம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள். அவர்கள் சேர்ந்த நிதியை உரிய முறையில் உதவிகள் தேவையானவர்களுக்கு வழங்கியதாக அறிய முடிகிறது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் கிறீஸ்தவ மாணவர் அமைப்பு பொருட் சேகரிப்பில் ஈடுபட்டு அவற்றை உரியவர்களிடம் சேர்த்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது. அதை விட கொழும்பிலுள்ள பாடசாலைகளினூடாக தமிழ் ஆசிரியர்கள் முகாம்களில் வாடும் இவ்வருடம் உயர்தரம் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான செயலமர்வுகளை மேற்கொண்டதையும் அறிய முடிகிறது. அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் அப்பியாசப் புத்தகங்கள் பேனை பென்சில் போன்றவற்றை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் பாதிக்கப்பட்ட மாண்வர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். கொழும்பில் பாடசாலைகளில் கற்பிக்கும் தனியார் கல்வித்துறையில் பிரபலமான ஆசிரியர்கள்கூட தங்களாலியன்ற கற்பித்தலையும் தாம் வெளியிட்ட பயிற்சிப்புத்தகங்களையும் இலவசமாக வழங்கியது பாராட்டுக்குரியது. அவர்கள் நேரடியாக மாணவர்களுடனும் பெற்றோருடனும் கலந்துரையாடியிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நம்மில் பலர் கேட்கலாம் முகாமில் வசிப்பவர்களுடைய நிலைக்கு இப்ப படிப்பித்தலா முக்கியம் என்றும் இரண்டு மாதக் கற்பித்தலுடன் சிறந்த பெறு பேறு எடுக்க முடியாது, இது பயனற்ற வேலை என்றும்.

அதுவல்ல இன்றைய தேவை, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அவர்கள் தம் பாரங்களை பகிர்ந்து மன உளைச்சல்களை இறக்கி வைத்து நாம் ஆறுதல் கூறவேண்டும். தம்மீது அக்கறை கொண்ட மக்கள் சமூகம் ஒன்று இருக்கிறது. அது எப்போதும் தமக்கு உதவத் தயாராக இருக்கிறது என்ற அரவணைப்பை நாம் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மனக் காயங்களை ஆற்றுவதற்கு உதவ வேண்டும். அதன் மூலம் எதிர்கால வாழ்க்கை மீது அவர்களுக்கு நம்பிக்கையையும் மற்ற தமிழ் உறவுகள் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையையும் துளிர்விட வைக்கலாம். இவையனைத்தையும் நேரடியாகச் சென்று நாம் வழங்க முடியாத சூழ்நிலையில் மிக மிக அருமையாக எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை நாம் ஏன் சரிவரப் பயன்படுத்தக் கூடாது? சில அரசசார்பற்ற நிறுவனங்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழக மாணவர்களுமே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கக் கூடியவர்கள். நேரடியாக உதவிகளை வழங்கக் கூடியவர்கள். உதவிகள் நேரடியாகக் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

கற்றல் உபகரணங்களை பாட நூல்களை பயிற்சிப் புத்தகங்களை இலவசமாக வழங்க விரும்புபவர்கள் பாடசாலைகளில் கற்பிக்கும் முகாம்களுக்குச் செல்லவிருக்கும் உயர்தர ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அன்பளிப்புகளை வழங்கலாம். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேசக்கரம்-2 ஆரம்பிக்க இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கு நிதியுதவியை வழங்கலாம். கொழும்பு மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் ஒரு முறை பொருள், நிதி சேகரிப்பில் ஈடுபடலாம். அல்லது பல்கலைக்கழக அனுமதியுடன் வவுனியா முகாம்களுக்கு சென்று இலவச கற்பித்தல் செயற்பாடுகளை கருத்தரங்குகளை செய்யலாம். இதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயத்தோடு நாம் தொடர்புகளை உருவாக்க முடியும். அவர்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியும். இலங்கையின் கல்வித்துறையில் உயர்ந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இதனைச் செய்யுமா? அங்கு கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் இச்செயற்பாடுகளில் தாங்களாகவே முன்வந்து ஈடுபடுவார்களா? அதற்கு உதவியாக அவர்களை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக முகாம்களுக்கு வெளியே வாழும் தமிழ் சமூகம் இருக்குமா? நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயற்படும் நேரம் இதுதான். வெட்டிப் பேச்சுக்களும் வீர வசனங்களும் பேசும் நேரம் இதுவல்ல. முழு மூச்சுடன் செயற்படும் நேரமே இது. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்ற நம்மால் முடியுமா?

Saturday, May 30, 2009

கணக்கு_04

ஒத்த உருவமுடைய ஒன்பது மாபிள்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மற்றையவற்றிலிருந்து நிறையால் வேறுபட்டது. (நிறை கூடவாகவோ குறைவாகவோ இருக்கலாம்.) நெம்புத் தராசு தரப்பட்டுள்ளது. நிறைப்படிகள் தரப்படவில்லை. அதிகமாக மூன்று தடவைகள் மட்டுமே நிறுக்கப்பட வேண்டுமெனின் நிறையால் வேறு பட்ட மாபிளை கண்டு பிடிக்க வேண்டும், அதே நேரம் அது மற்றையவற்றை விட நிறை கூடியதோ குறைந்ததோ எனவும் கண்டு பிடிக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்.

Thursday, May 21, 2009

அனுமதியுங்கள்...

இத்தனை கொடுமைகளையும் இழைத்து விட்டு, ஒரு இனப்படுகொலையையே ஓசைப்படாமல் நிகழ்த்தி விட்டு எதுவுமே நடக்காதவர் போல எதுவுமே தங்களுக்கு தெரியாது என்பது போல நிவாரணப் பணியாம்... முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பது பற்றியோ அவர்களை மீளக் குடியமர்த்துவது பற்றியோ எதுவுமே பேசாது முகாம்களிலுள்ள மக்களுக்கு நிவாரணப்பணியாம்...

இத்தனை கொடுமைகளையும் கண்டு சலித்த மக்களுக்கு முதலில் தேவையானது மன நிம்மதியே. எம்மக்களை பசி தாகத்தால் தவிக்க விட்டு, குண்டுகள் போட்டு கொன்று விட்டு, அங்கவீனர்களாக்கிவிட்டு நிவாரணம் தருகிறார்களாம்... நடந்தவற்றிற்கு அப்பாவிப் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார்களா இல்லை சிறிதளவேனும் வருத்தம் தெரிவித்தார்களா? செய்வதெல்லாம் செய்து விட்டு நிவாரணமாம்...

எல்லாத்தையும் விட கொடுமையானது மனதில் ஏற்படும் வலியே... மனதிலுள்ள வலி போய் மனம் வலிமையடையுமாயின் காசு நிவாரணங்கள் எல்லாம் எந்த மூலைக்கு? எம்மக்களுக்கு முதலில் தேவையானது வாழ்வில் நம்பிக்கை ஊட்டக்கூடிய வார்த்தைகளும் அதற்குரிய செயற்பாடுகளுமே... முகாம்களிலிருந்து விடுவித்து தமது சொந்த இடங்களில் துரிதமாக மீளக்குடியமர்த்தினால் பலர் நிகழ்ந்த கொடுமைகளை மறந்து கண்முன்னே கண்ட கொடூரக் காட்சிகளை மறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள். அதுதான் அவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும். அதுவே உண்மையான நிவாரணமுமாகும்.

நிவாரணப்
பணிகளுக்கு நிதி தேவைதான் அதுக்காக அத்தியாவசியாமகத் தேவையான மன உளைச்சலுக்கு நிவாரணம் அளிக்கும் செயற்பாட்டை விடுத்து நிவாரணம் வழங்குதல் பொருத்தமற்றதாகவே படுகிறது. (முகாம்களில் மன உளைச்சலை மென்மேலும் அதிகரிக்கும் கொடுமைகள் நடத்தப்படுவது வேறு விடயம்) மாறாக முகாம்களைத் திருத்தியமைக்கவே நிவாரணங்கள் பயன்படப் போகின்றன. அதனால் இது சிறந்த நிவாரணப் பணியாகுமோ?

எம்மக்களை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை நோக்கி அனுமதி கேட்கிறேன்...

  • ஊர் விட்டு ஊர் தாண்டி நாள் முழுவதும் யுத்த பூமியில் இடம்பெயர்வது என்றால் என்னவென்று உங்களுக்கு காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • நீங்கள்வளர்த்த கால்நடைகள் உங்களின் கண்முன்னே கால்களிழந்து காயம்பட்டுக் கதறுவதைக் காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • பதுங்கி வாழ்வதென்றால் என்ன, பதுங்கு குழிக்குள் வாழ்வதென்றால் என்ன என்பதை உங்களுக்கு வாழப் பழக்க அனுமதியுங்கள்...
  • குண்டுகளின் வெடியோசைகள் அதன் அதிர்வுகள் விளைவுகள் எப்பிடி இருக்கும் என்று உங்கள் பகுதிகளில் காட்ட அனுமதியுங்கள்...
  • எரிகுண்டு எப்பிடியெல்லாம் எரிக்கும் என்பதை உங்களுக்கு ஆதார பூர்வமாக உங்கள் பகுதிகளில் செய்து காட்ட அனுமதியுங்கள்...
  • பல்குழலின் பலத்தையும் கிபிரினால் கிணறு தோண்டுவது எப்படியென்பதையும்காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • பசியே அறியாத உங்கள் பரம்பரையில் வந்த உங்கள் குழந்தை கண்முன்னே பசிக்கொடுமையால் துடிதுடித்து இறப்பதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • உங்கள் பால்குடிக் குழந்தை தாயின் முலையில் பாலின்றி பசியால் தாயின் கையில் இருந்தபடியே உயிர்விடுவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • அந்தத் தாயின் மனது வலியையும் உணர்வு வெளிப்பாட்டையும் உங்களைஅனுபவிக்க வைக்க அனுமதியுங்கள்...
  • உங்களின் அப்பா குண்டு பட்டு கால் கையிழந்து காப்பாற்ற மருந்துகளின்றிகண்முன்னே துடிதுடித்து உயிர்துறப்பதை உங்களுக்கு காட்டுவதற்குஅனுமதியுங்கள்....
  • உங்களின் பேரன் குளிரின் கொடுமையால் நடுநடுங்கியபடி முனகியபடிமூச்சிழுத்து சாவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • உங்களின் தாய் தன் பிள்ளைகளுக்கு கொடுக்க உணவில்லையே என்றவேதனையையில் குண்டடி பட்டு இறப்பதை உங்களுக்க் காட்டஅனுமதியுங்கள்...
  • உங்களின் உறவுகள் உங்களின் பெயரை உறக்கக் கூறியபடியே மாண்டு போவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • உங்களின் அயலவர் காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள் என்ற அவலக் குரல் எழுப்பிய படியே நடு வீதிகளில் இறந்து போவதைக் காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • பட்ட காயத்துக்கு மருந்தின்றி வைத்திய சாலையில் மரத்தடியில் நிலத்தில் படுத்திய படி உங்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதியுங்கள்...
  • ஒரு குடும்பத்துக்கான கூடாரத்தில் ஒன்பது குடும்பங்கள் வாழ்வது எப்படியென்பதை காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • உங்களின் பத்து வயதுப் பிள்ளை கையில் ஒரு தட்டுடன் உணவுக்காய்வரிசையில் நிற்பதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • பசி பட்டினிக் கொடுமையையும் தவித்த வாயின் தாகத்தின் தவிப்பையும் உங்களுக்கு உணர்த்த அனுமதியுங்கள்...
  • உங்கள் சகோதரனை உடல் பிழந்து சிறுநீரகத்தையும் கண்ணையும் எடுத்து வியாபாரம் செய்ய அனுமதியுங்கள்.
  • உங்கள் சகோதரியை கதறக் கதற வன்புணர அனுமதியுங்கள்... (அந்தளவுக்குவெறி பிடித்தவர் நாமில்லை).
  • இத்தனையையும் பார்த்துக்கொண்டு இவற்றைத் தடுத்து உயிர்களைக் காக்க முடியாத மன நிலையில் உங்களைப் புலம்ப வைக்க அனுமதியுங்கள்...
  • எம்மவர்கள் பட்ட கொடுமைகள் நிறைந்த வாழ்வை உங்களை வாழவைத்து வேதனைகளை உணர வைக்க அனுமதியுங்கள்...

மேற்சொன்ன எல்லாத்துக்கும் நீங்கள் அனுமதிப்பீர்களானால் , என்னிடம் பணம் இல்லையாயினும் என்னுறவுகளிடம் மன்றாடியேனும் 500 கோடி ரூபாய் பணம் சேர்த்து உங்களுக்கு தருகிறேன். வாங்கிக் கொள்கிறீர்களா?

இரத்த வெறி கொண்டு பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு இதனை நான் எழுதவில்லை. என்னுடைய பார்வையில் நீங்கள் செய்தது இப்படித்தான் தெரிகிறது... உன்னுடைய காலை வெட்டியெடுத்து, உறவுகளைப் பறித்தெடுத்து விட்டு, உன்னை பசிக் கொடுமையால் தவிக்க விடுகிறேன்... சில நாட்களின் பின் நிவாரணம் தருகிறேன். வாங்கிக் கொண்டு போ... இதுதானே உங்கள் நிலைப்பாடு. அப்பிடியானால் சனநாயகம், சமத்துவம் பற்றிப்பேசும் நாடுகளே உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல எனக்கொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள். போரின் வலியை உங்களுக்கு உணர வைக்கிறேன். சொல்லிப் புரிய வைக்க முடியாதென்பது இன்று நன்கு உணரப்பட்ட விடயமே. அனுமதி கிடைக்குமா?


Monday, May 18, 2009

முடியல...

காதில் விழும் செய்திகளை ஏற்க முடியல...
வெடியொலிகளை காதால் கேட்க முடியல...
தொண்டையை அடைக்கும் துக்கத்தை தாங்க முடியல...
மனதில் எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியல...
என்னதான் நடந்திருக்கும் என ஊகிக்கவும் முடியல...
நாளைய நாளைப் பற்றிச் சிந்திக்கவும் முடியல...
எண்ணங்களை ஒரு நிலைப்படுத்த முடியல...
நம்பிக்கையை கூட என்னால் நம்ப முடியல...
நடந்து வந்த பாதையை மறக்க முடியல...
நடக்கப் போவதையும் நினைக்க முடியல...
சுதந்திரம் என்ற சொல்லை சொல்ல முடியல...
அடங்காத எம் தாகத்தை அடக்க முடியல...
என்னதான் நடந்தாலும் ‘ஆட்டம்’ இத்துடன் முடியல...
தொடரும்......................................................

(தயவு செய்து தலையங்கத்தை வாசிக்கவும்)

Wednesday, May 13, 2009

கணக்கு_03

சவர்க்காரக் கட்டிகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்த்து வையுங்களேன்.
நிறுவனம் இரண்டு விதமான சவர்க்காரக் கட்டிகளை உற்பத்தி செய்கின்றது. ஒன்றின் நிறை ஐம்பது கிறாம் மற்றையது அறுபது கிறாம், ஆனால் உருவ அமைப்பில் வேறுபாடு கிடையாது. சவர்க்காரங்கள் பெட்டிகளில் அடுக்கப்படும். ஒரு பெட்டியில் ஆகக்குறைந்தது பத்து சவர்க்காரங்கள் அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் எண்ணிக்கை மாறுபடலாம்.
தரப்பட்ட பத்து பெட்டிகளில் ஐம்பது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டிகள் ஒன்பதும் ஒரு அறுபது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டியும் கலக்கப்பட்டு விட்டன. சிக்கல் என்னவெனில் அறுபது கிறாம் சவர்க்காரக்கட்டிகள் கொண்ட பெட்டியை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் நிபந்தனை என்னவெனில் விற்தராசு மட்டுமே தரப்பட்டுள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அளக்க வேண்டும். (பெட்டிகள் திறக்கப்பட்டு சவர்க்காரங்கள் வெளியே எடுக்கப்படலாம்.) முயன்று பாருங்களேன்...