Friday, June 26, 2009

கணக்கு_05

கணக்கு_04 இலுள்ள அதே கணக்குத்தான். ஆனால் மாபிள்களின் எண்ணிக்கை ஒன்பதுக்குப் பதிலாக பன்னிரெண்டு.
கணக்கை மீண்டும் தருகிறேன்.

ஒத்த உருவமுடைய பன்னிரெண்டு மாபிள்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மற்றையவற்றிலிருந்து நிறையால் வேறுபட்டது. (நிறை கூடவாகவோ குறைவாகவோ இருக்கலாம்.) நெம்புத் தராசு தரப்பட்டுள்ளது. நிறைப்படிகள் தரப்படவில்லை. அதிகமாக மூன்று தடவைகள் மட்டுமே நிறுக்கப்பட வேண்டுமெனின் நிறையால் வேறு பட்ட மாபிளை கண்டு பிடிக்க வேண்டும், அதே நேரம் அது மற்றையவற்றை விட நிறை கூடியதோ குறைந்ததோ எனவும் கண்டு பிடிக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்.
எங்கே உங்கள் திறமையை நிரூபியுங்கள் பார்க்கலாம்.

Thursday, June 18, 2009

நம்மால் முடியுமா?



இருக்கிறாரா இல்லையா என ஆராய்வதிலும் ஐந்தாம் கட்டம், றோ என்றெல்லாம் ஆக்கங்கள் எழுதுவதிலும் அது பற்றி விவாதிப்பதிலுமே எங்களுடைய நேரத்தை செலவிடுகிறோமே தவிர நாம் செய்ய வேண்டிய செயல்களில் நாம் கவனம் செலுத்தவில்லை. நாம் நடந்து செல்ல வேண்டிய இலட்சியப் பாதையில் இன்று எம் காலடியில் முட்களும் கற்களும் நிறைந்து கிடக்கின்றன. அவற்றை விலக்கி எவ்வாறு அடுத்த காலடியை முன்னோக்கி எடுத்து வைப்பது என்பது பற்றிச் சிந்திப்பதை விடுத்து, அலட்சியப்படுத்தி விட்டு தூரத்தே தெரியும் இலட்சியத்தைப் பற்றியே சிந்திக்கிறோம்.

இன்று வவுனியா வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் மக்கள் பற்றி, அவர்களுக்கு நாம் எவ்வாறான வழிகளில் உதவலாம் என்பது பற்றிச் சிந்தித்து செயலாற்ற இன்னும் நாம் துணியவில்லை. யுத்தத்தின் கொடூரத்தால் மரணத்தின் வாசலையே முத்தமிட்டவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடைய வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கிறது? நாம் உண்மையை அறிய முற்படவில்லை. எல்லோருக்குமான பொது நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒன்று, இன்று ஒரு சில சமூகத்தவர்களின் தலையில் போய் பொறிந்திருக்கிறது. இன்று முள் முடியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். உலகெங்கணும் பரந்து வாழும் தமிழர்களிடையே இன்று தாங்கொணாத் துயரம் அனுபவிப்பவர்கள் அவர்களே. தங்களுக்கான துயரமல்ல அது. அவர்கள் அதை விரும்பிச் சுமக்கவும் இல்லை. நாங்களும் சுமக்க வேண்டிய எங்களுடைய பங்கையும் சேர்த்தல்லவா அவர்கள் சுமக்கிறார்கள். இறுதி வரை நாங்கள் சுமந்த நம்பிக்கையையே அவர்களும் சுமந்தார்கள். அதுக்காகவே வாழத்துணிந்தார்கள். தியாகங்கள் செய்ய தயங்காதவர்களாக விளங்கினார்கள். வா வென்று அழைக்கும் பரந்து விரிந்த வன்னிப் பரப்பில் வந்தவர்களுக்கு வாரி வாரிக் கொடுத்த கைகள் அவர்களுடையது. வானம் பார்த்த பூமியில் வேளாண்மை செய்து பசியின்றி வாழ்ந்தவர்கள் அவர்கள். இன்று என்ன நிலை?

உணவு உண்ணுகிறார்களா? போதியளவு கிடைக்கிறதா? நீர் கிடைக்கிறதா? கொடுக்கப்பட்ட குடில்களில் வசிக்க முடிகிறதா? அத்தியாவசிய பண்டங்கள் கிடைக்கிறதா? உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா? அவர்களின் உடல்நிலை என்ன? மனநிலை என்ன? போன்ற ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு நாம் பதில் தேட முயலவில்லை.


இத்தனை கேள்விகளுக்கும் எங்களுடைய பதிலாக அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். எங்களை உள்ளுக்குள் விடுவதில்லையே. எங்களை அனுமதித்தால் அது செய்வம் இது செய்வம். இப்படித்தான் எம்மில் பலர் பேசிக் கொள்கிறோம். ஆனால் அதற்குரிய முயற்சிகளை எள்ளளவேனும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் உண்மையான அக்கறை எமக்கு அம்மக்கள் மீது இருந்திருந்தால் இந்நேரம் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் சின்னஞ்சிறு உதவிகளை விட பெரிய அளவில் உதவியிருக்கலாம். சந்தர்ப்பம் கிடைப்பதென்பது மிக மிக அருமையானது. அதை நாம் பயன்படுத்தும் விதத்திலேயே பெறுபேறு தங்கியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேசக்கரம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள். அவர்கள் சேர்ந்த நிதியை உரிய முறையில் உதவிகள் தேவையானவர்களுக்கு வழங்கியதாக அறிய முடிகிறது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் கிறீஸ்தவ மாணவர் அமைப்பு பொருட் சேகரிப்பில் ஈடுபட்டு அவற்றை உரியவர்களிடம் சேர்த்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது. அதை விட கொழும்பிலுள்ள பாடசாலைகளினூடாக தமிழ் ஆசிரியர்கள் முகாம்களில் வாடும் இவ்வருடம் உயர்தரம் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான செயலமர்வுகளை மேற்கொண்டதையும் அறிய முடிகிறது. அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் அப்பியாசப் புத்தகங்கள் பேனை பென்சில் போன்றவற்றை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் பாதிக்கப்பட்ட மாண்வர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். கொழும்பில் பாடசாலைகளில் கற்பிக்கும் தனியார் கல்வித்துறையில் பிரபலமான ஆசிரியர்கள்கூட தங்களாலியன்ற கற்பித்தலையும் தாம் வெளியிட்ட பயிற்சிப்புத்தகங்களையும் இலவசமாக வழங்கியது பாராட்டுக்குரியது. அவர்கள் நேரடியாக மாணவர்களுடனும் பெற்றோருடனும் கலந்துரையாடியிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நம்மில் பலர் கேட்கலாம் முகாமில் வசிப்பவர்களுடைய நிலைக்கு இப்ப படிப்பித்தலா முக்கியம் என்றும் இரண்டு மாதக் கற்பித்தலுடன் சிறந்த பெறு பேறு எடுக்க முடியாது, இது பயனற்ற வேலை என்றும்.

அதுவல்ல இன்றைய தேவை, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அவர்கள் தம் பாரங்களை பகிர்ந்து மன உளைச்சல்களை இறக்கி வைத்து நாம் ஆறுதல் கூறவேண்டும். தம்மீது அக்கறை கொண்ட மக்கள் சமூகம் ஒன்று இருக்கிறது. அது எப்போதும் தமக்கு உதவத் தயாராக இருக்கிறது என்ற அரவணைப்பை நாம் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மனக் காயங்களை ஆற்றுவதற்கு உதவ வேண்டும். அதன் மூலம் எதிர்கால வாழ்க்கை மீது அவர்களுக்கு நம்பிக்கையையும் மற்ற தமிழ் உறவுகள் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையையும் துளிர்விட வைக்கலாம். இவையனைத்தையும் நேரடியாகச் சென்று நாம் வழங்க முடியாத சூழ்நிலையில் மிக மிக அருமையாக எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை நாம் ஏன் சரிவரப் பயன்படுத்தக் கூடாது? சில அரசசார்பற்ற நிறுவனங்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழக மாணவர்களுமே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கக் கூடியவர்கள். நேரடியாக உதவிகளை வழங்கக் கூடியவர்கள். உதவிகள் நேரடியாகக் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

கற்றல் உபகரணங்களை பாட நூல்களை பயிற்சிப் புத்தகங்களை இலவசமாக வழங்க விரும்புபவர்கள் பாடசாலைகளில் கற்பிக்கும் முகாம்களுக்குச் செல்லவிருக்கும் உயர்தர ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அன்பளிப்புகளை வழங்கலாம். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேசக்கரம்-2 ஆரம்பிக்க இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கு நிதியுதவியை வழங்கலாம். கொழும்பு மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் ஒரு முறை பொருள், நிதி சேகரிப்பில் ஈடுபடலாம். அல்லது பல்கலைக்கழக அனுமதியுடன் வவுனியா முகாம்களுக்கு சென்று இலவச கற்பித்தல் செயற்பாடுகளை கருத்தரங்குகளை செய்யலாம். இதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயத்தோடு நாம் தொடர்புகளை உருவாக்க முடியும். அவர்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியும். இலங்கையின் கல்வித்துறையில் உயர்ந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இதனைச் செய்யுமா? அங்கு கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் இச்செயற்பாடுகளில் தாங்களாகவே முன்வந்து ஈடுபடுவார்களா? அதற்கு உதவியாக அவர்களை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக முகாம்களுக்கு வெளியே வாழும் தமிழ் சமூகம் இருக்குமா? நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயற்படும் நேரம் இதுதான். வெட்டிப் பேச்சுக்களும் வீர வசனங்களும் பேசும் நேரம் இதுவல்ல. முழு மூச்சுடன் செயற்படும் நேரமே இது. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்ற நம்மால் முடியுமா?

Saturday, May 30, 2009

கணக்கு_04

ஒத்த உருவமுடைய ஒன்பது மாபிள்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மற்றையவற்றிலிருந்து நிறையால் வேறுபட்டது. (நிறை கூடவாகவோ குறைவாகவோ இருக்கலாம்.) நெம்புத் தராசு தரப்பட்டுள்ளது. நிறைப்படிகள் தரப்படவில்லை. அதிகமாக மூன்று தடவைகள் மட்டுமே நிறுக்கப்பட வேண்டுமெனின் நிறையால் வேறு பட்ட மாபிளை கண்டு பிடிக்க வேண்டும், அதே நேரம் அது மற்றையவற்றை விட நிறை கூடியதோ குறைந்ததோ எனவும் கண்டு பிடிக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்.

Thursday, May 21, 2009

அனுமதியுங்கள்...

இத்தனை கொடுமைகளையும் இழைத்து விட்டு, ஒரு இனப்படுகொலையையே ஓசைப்படாமல் நிகழ்த்தி விட்டு எதுவுமே நடக்காதவர் போல எதுவுமே தங்களுக்கு தெரியாது என்பது போல நிவாரணப் பணியாம்... முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பது பற்றியோ அவர்களை மீளக் குடியமர்த்துவது பற்றியோ எதுவுமே பேசாது முகாம்களிலுள்ள மக்களுக்கு நிவாரணப்பணியாம்...

இத்தனை கொடுமைகளையும் கண்டு சலித்த மக்களுக்கு முதலில் தேவையானது மன நிம்மதியே. எம்மக்களை பசி தாகத்தால் தவிக்க விட்டு, குண்டுகள் போட்டு கொன்று விட்டு, அங்கவீனர்களாக்கிவிட்டு நிவாரணம் தருகிறார்களாம்... நடந்தவற்றிற்கு அப்பாவிப் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார்களா இல்லை சிறிதளவேனும் வருத்தம் தெரிவித்தார்களா? செய்வதெல்லாம் செய்து விட்டு நிவாரணமாம்...

எல்லாத்தையும் விட கொடுமையானது மனதில் ஏற்படும் வலியே... மனதிலுள்ள வலி போய் மனம் வலிமையடையுமாயின் காசு நிவாரணங்கள் எல்லாம் எந்த மூலைக்கு? எம்மக்களுக்கு முதலில் தேவையானது வாழ்வில் நம்பிக்கை ஊட்டக்கூடிய வார்த்தைகளும் அதற்குரிய செயற்பாடுகளுமே... முகாம்களிலிருந்து விடுவித்து தமது சொந்த இடங்களில் துரிதமாக மீளக்குடியமர்த்தினால் பலர் நிகழ்ந்த கொடுமைகளை மறந்து கண்முன்னே கண்ட கொடூரக் காட்சிகளை மறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள். அதுதான் அவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும். அதுவே உண்மையான நிவாரணமுமாகும்.

நிவாரணப்
பணிகளுக்கு நிதி தேவைதான் அதுக்காக அத்தியாவசியாமகத் தேவையான மன உளைச்சலுக்கு நிவாரணம் அளிக்கும் செயற்பாட்டை விடுத்து நிவாரணம் வழங்குதல் பொருத்தமற்றதாகவே படுகிறது. (முகாம்களில் மன உளைச்சலை மென்மேலும் அதிகரிக்கும் கொடுமைகள் நடத்தப்படுவது வேறு விடயம்) மாறாக முகாம்களைத் திருத்தியமைக்கவே நிவாரணங்கள் பயன்படப் போகின்றன. அதனால் இது சிறந்த நிவாரணப் பணியாகுமோ?

எம்மக்களை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை நோக்கி அனுமதி கேட்கிறேன்...

  • ஊர் விட்டு ஊர் தாண்டி நாள் முழுவதும் யுத்த பூமியில் இடம்பெயர்வது என்றால் என்னவென்று உங்களுக்கு காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • நீங்கள்வளர்த்த கால்நடைகள் உங்களின் கண்முன்னே கால்களிழந்து காயம்பட்டுக் கதறுவதைக் காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • பதுங்கி வாழ்வதென்றால் என்ன, பதுங்கு குழிக்குள் வாழ்வதென்றால் என்ன என்பதை உங்களுக்கு வாழப் பழக்க அனுமதியுங்கள்...
  • குண்டுகளின் வெடியோசைகள் அதன் அதிர்வுகள் விளைவுகள் எப்பிடி இருக்கும் என்று உங்கள் பகுதிகளில் காட்ட அனுமதியுங்கள்...
  • எரிகுண்டு எப்பிடியெல்லாம் எரிக்கும் என்பதை உங்களுக்கு ஆதார பூர்வமாக உங்கள் பகுதிகளில் செய்து காட்ட அனுமதியுங்கள்...
  • பல்குழலின் பலத்தையும் கிபிரினால் கிணறு தோண்டுவது எப்படியென்பதையும்காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • பசியே அறியாத உங்கள் பரம்பரையில் வந்த உங்கள் குழந்தை கண்முன்னே பசிக்கொடுமையால் துடிதுடித்து இறப்பதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • உங்கள் பால்குடிக் குழந்தை தாயின் முலையில் பாலின்றி பசியால் தாயின் கையில் இருந்தபடியே உயிர்விடுவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • அந்தத் தாயின் மனது வலியையும் உணர்வு வெளிப்பாட்டையும் உங்களைஅனுபவிக்க வைக்க அனுமதியுங்கள்...
  • உங்களின் அப்பா குண்டு பட்டு கால் கையிழந்து காப்பாற்ற மருந்துகளின்றிகண்முன்னே துடிதுடித்து உயிர்துறப்பதை உங்களுக்கு காட்டுவதற்குஅனுமதியுங்கள்....
  • உங்களின் பேரன் குளிரின் கொடுமையால் நடுநடுங்கியபடி முனகியபடிமூச்சிழுத்து சாவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • உங்களின் தாய் தன் பிள்ளைகளுக்கு கொடுக்க உணவில்லையே என்றவேதனையையில் குண்டடி பட்டு இறப்பதை உங்களுக்க் காட்டஅனுமதியுங்கள்...
  • உங்களின் உறவுகள் உங்களின் பெயரை உறக்கக் கூறியபடியே மாண்டு போவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • உங்களின் அயலவர் காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள் என்ற அவலக் குரல் எழுப்பிய படியே நடு வீதிகளில் இறந்து போவதைக் காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • பட்ட காயத்துக்கு மருந்தின்றி வைத்திய சாலையில் மரத்தடியில் நிலத்தில் படுத்திய படி உங்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதியுங்கள்...
  • ஒரு குடும்பத்துக்கான கூடாரத்தில் ஒன்பது குடும்பங்கள் வாழ்வது எப்படியென்பதை காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
  • உங்களின் பத்து வயதுப் பிள்ளை கையில் ஒரு தட்டுடன் உணவுக்காய்வரிசையில் நிற்பதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
  • பசி பட்டினிக் கொடுமையையும் தவித்த வாயின் தாகத்தின் தவிப்பையும் உங்களுக்கு உணர்த்த அனுமதியுங்கள்...
  • உங்கள் சகோதரனை உடல் பிழந்து சிறுநீரகத்தையும் கண்ணையும் எடுத்து வியாபாரம் செய்ய அனுமதியுங்கள்.
  • உங்கள் சகோதரியை கதறக் கதற வன்புணர அனுமதியுங்கள்... (அந்தளவுக்குவெறி பிடித்தவர் நாமில்லை).
  • இத்தனையையும் பார்த்துக்கொண்டு இவற்றைத் தடுத்து உயிர்களைக் காக்க முடியாத மன நிலையில் உங்களைப் புலம்ப வைக்க அனுமதியுங்கள்...
  • எம்மவர்கள் பட்ட கொடுமைகள் நிறைந்த வாழ்வை உங்களை வாழவைத்து வேதனைகளை உணர வைக்க அனுமதியுங்கள்...

மேற்சொன்ன எல்லாத்துக்கும் நீங்கள் அனுமதிப்பீர்களானால் , என்னிடம் பணம் இல்லையாயினும் என்னுறவுகளிடம் மன்றாடியேனும் 500 கோடி ரூபாய் பணம் சேர்த்து உங்களுக்கு தருகிறேன். வாங்கிக் கொள்கிறீர்களா?

இரத்த வெறி கொண்டு பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு இதனை நான் எழுதவில்லை. என்னுடைய பார்வையில் நீங்கள் செய்தது இப்படித்தான் தெரிகிறது... உன்னுடைய காலை வெட்டியெடுத்து, உறவுகளைப் பறித்தெடுத்து விட்டு, உன்னை பசிக் கொடுமையால் தவிக்க விடுகிறேன்... சில நாட்களின் பின் நிவாரணம் தருகிறேன். வாங்கிக் கொண்டு போ... இதுதானே உங்கள் நிலைப்பாடு. அப்பிடியானால் சனநாயகம், சமத்துவம் பற்றிப்பேசும் நாடுகளே உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல எனக்கொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள். போரின் வலியை உங்களுக்கு உணர வைக்கிறேன். சொல்லிப் புரிய வைக்க முடியாதென்பது இன்று நன்கு உணரப்பட்ட விடயமே. அனுமதி கிடைக்குமா?


Monday, May 18, 2009

முடியல...

காதில் விழும் செய்திகளை ஏற்க முடியல...
வெடியொலிகளை காதால் கேட்க முடியல...
தொண்டையை அடைக்கும் துக்கத்தை தாங்க முடியல...
மனதில் எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியல...
என்னதான் நடந்திருக்கும் என ஊகிக்கவும் முடியல...
நாளைய நாளைப் பற்றிச் சிந்திக்கவும் முடியல...
எண்ணங்களை ஒரு நிலைப்படுத்த முடியல...
நம்பிக்கையை கூட என்னால் நம்ப முடியல...
நடந்து வந்த பாதையை மறக்க முடியல...
நடக்கப் போவதையும் நினைக்க முடியல...
சுதந்திரம் என்ற சொல்லை சொல்ல முடியல...
அடங்காத எம் தாகத்தை அடக்க முடியல...
என்னதான் நடந்தாலும் ‘ஆட்டம்’ இத்துடன் முடியல...
தொடரும்......................................................

(தயவு செய்து தலையங்கத்தை வாசிக்கவும்)

Wednesday, May 13, 2009

கணக்கு_03

சவர்க்காரக் கட்டிகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்த்து வையுங்களேன்.
நிறுவனம் இரண்டு விதமான சவர்க்காரக் கட்டிகளை உற்பத்தி செய்கின்றது. ஒன்றின் நிறை ஐம்பது கிறாம் மற்றையது அறுபது கிறாம், ஆனால் உருவ அமைப்பில் வேறுபாடு கிடையாது. சவர்க்காரங்கள் பெட்டிகளில் அடுக்கப்படும். ஒரு பெட்டியில் ஆகக்குறைந்தது பத்து சவர்க்காரங்கள் அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் எண்ணிக்கை மாறுபடலாம்.
தரப்பட்ட பத்து பெட்டிகளில் ஐம்பது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டிகள் ஒன்பதும் ஒரு அறுபது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டியும் கலக்கப்பட்டு விட்டன. சிக்கல் என்னவெனில் அறுபது கிறாம் சவர்க்காரக்கட்டிகள் கொண்ட பெட்டியை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் நிபந்தனை என்னவெனில் விற்தராசு மட்டுமே தரப்பட்டுள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அளக்க வேண்டும். (பெட்டிகள் திறக்கப்பட்டு சவர்க்காரங்கள் வெளியே எடுக்கப்படலாம்.) முயன்று பாருங்களேன்...

Saturday, April 25, 2009

பிறந்தது முதலாய்...(1)

தாயின் கருவறைக்குள் நான் கருக்கொண்ட நாள் முதலாய் உணர்ந்ததெல்லாம் குண்டுகளின் அதிர்வுகளும் கேட்டதெல்லாம் மரண வீட்டு அழுகுரல்களுமே. பிறக்கும்போது கூட நான் வெடியோசையின் அதிர்வினாலேயே வெளித் தள்ளப்பட்டேன். பிறந்தவுடன் என் தாயின் கதறல்கள் எனக்கு கேட்க முன்னரே வெடியோசைகள் என் காதை கனமாக்கின.

ஆசையாய் என்னை முதன்முதல் அணைத்து முத்தமிட்ட தாயின் இதழ்களில் ஈரமில்லை. பயத்தால் இதழ்களும் உதறுவதை உணர்ந்தேன். நான் என் கண்களால் முதன்முதலாய் கண்ட நிறம் சிவப்பு. வைத்திய சாலையில் இரத்தம் தோய்ந்த உடைகளுடன் நடமாடும் மனிதர்களையே என் கண்களை உருட்டி உருட்டிப் பார்த்திருக்கிறேன்.

வைத்தியசாலைக்குள்ளும் துப்பாக்கி சுடும் என்பதை தாய்ப்பால் குடிக்கும் போதே கண்டு கொண்டேன். தாலாட்டுப் பாட்டு என் காதுகளுக்கு இனிக்கவில்லை. அழுகுரல்களும் வேதனையில் துடிக்கும் எம்மவர்களின் முனகல்களுமே என் தேசிய கீதமானது.

பட்டாசு கொளுத்திப் பார்க்க ஆசைப்பட்டதேயில்லை. துப்பாக்கி வெடியோசையின் கனமே போதுமென்று நான் நினைத்து விட்டேன். அதன் கோர விளைவுகளையும் பார்த்துப் பழகி விட்டேன். இரவு நேரங்களில் ‘குறுக்காஸ்’ என்று சொல்லி, வேளைக்கு குப்பி விளக்கையணைத்து விட்டு குப்புறப் படுக்கவும் பழகிக் கொண்டேன். பேய் என்று பேய்க்காட்டினால் கூட பயப்படாத நான் ‘குறுக்காஸ்’ பெயரைக் கேட்டு அலறினேன்.

இரவில் நாய்கள் பலமாகக் குரைக்கும் வேளைகளில் உணர்வறியா வயதில் அழக்கூட என் தாய் என்னை அனுமதிக்கவில்லை. வாயைப் பொத்தி ‘சத்தம் போடாதே பிடிச்சுக் கொண்டு போடுவாங்கள்’ என்றாள். அன்றே நான் அழுவதற்கான சுதந்திரத்தையும் இழந்து விட்டேன். அன்று நான் பலமாக அழுதிருந்தால் எனக்கும் குடும்பத்துக்கும் இன்று இருபதாம் நினைவஞ்சலி செய்திருக்கலாம்.

பின்பக்க வேலி பாய்ந்து பயத்துடன் உயிருக்காக ஓடுவதை என் அப்பாவின் கைகளில் கைக்குழந்தையாக இருக்கும்போதே கற்றுக் கொண்டேன். இந்த வேலியால் விழுந்து இந்த ஒழுங்கையைப் பிடித்து அந்த வீதியை இந்த இடத்தில ஊடறுத்தால் ‘அவங்களட்ட’ பிடிபடாமல் இந்த இடத்துக்கு செல்லாலாம் என்று சிந்திக்கும் ஆற்றலையும் பெற்றுக் கொண்டேன். அதனாலோ என்னவோ என்னுடைய பிரதேசத்தின் சந்து பொந்துகள் எல்லாம் மனப்பாடமாகி விட்டன.

ஏணையின் இதத்தை நான் உணர முன்னரே பதுங்கு குழியின் சூழல் பழகிக்கொண்டது. ஏணை கட்டி தாலாட்டுப் பாட ஆசைப்பட்ட தாத்தாக்களும் பாட்டிமாரும் பதுங்கு குழிக்குள் தம் காலிடுக்குகளில் வைத்து தாலாட்டினர். அண்ணாந்து நிலா காட்டி சோறூட்டிய என் உறவுகள் வானத்திலே குண்டு வீச்சு விமானங்களைக் காட்டவும் மறக்கவில்லை. சீ ப்ளேன், புக்காரா, சகடை என்ற பெயர்களையும் மறக்காமல் எனக்கு ஊட்டி விட்டார்கள். காலப்போக்கில் தொலைவில் வரும் சத்தத்தைக் கேட்டே இது இந்த விமானம் தான் என்று சொல்லுமளவுக்கு நான் பாண்டித்தியம் பெற்று விட்டேன்.

அது மட்டுமா விமானங்கள் போடும் குண்டுகளின் எண்ணிக்கையை ஒன்று இரண்டு என்று சொல்லிச் சொல்லி எண்ணி எண்ணியே நான் ஆரம்பக் கணிதம் படித்துக் கொண்டேன். குண்டு வெடிக்கும் ஓசையைக் கொண்டே குண்டு விழுந்த இடத்தையும் தூரத்தையும் அனுமானிக்கும் திறமையையும் பெற்றுக் கொண்டேன். ஆசையாய்ப் பட்டம் பறக்க விடும்போது கூட வானில் மழை வருமோ எனப் பார்ப்பதில்லை. குண்டு போட வருகிறதா எனத்தான் பார்ப்பதுண்டு.

எங்கோ வெடியோசை கேட்டாலும் காதைப் பொத்திக் கொண்டு குப்புறப் படுக்கவும் ஓடிப்போய் பதுங்கு குழிக்குள் தஞ்சமடையவும் பழகிக் கொண்டேன். ‘ஆமி பொடியள்’ விளையாட்டு ஓடி விளையாட இனிமையாய்த் தெரிந்தது. விளையாடும் போது கூட இடை நடுவில் கைவிட்டு பதுங்கு குழிகளை நாடியோடுவதால் அந்த விளையாட்டுகளில் கூட முடிவு இல்லாமல் போய் விட்டது.

மண்வெட்டியையும் கோடரியையும் பாவிக்கும் விதத்தை பதுங்குகுழிகள் அமைப்பதற்கு பயன்படுத்துவதைப் பார்த்தே பழகிக்கொண்டேன். மனிதர்களுக்குப் பயந்து ஒழித்து வாழும் விலங்குகளுக்குப் போட்டியாக அவற்றைப் போலவே பதுங்கி வாழப் பழகிக்கொண்டோம். நாம் பதுங்கிய இடத்திலிருக்கும் பாம்பு பூரான் பூச்சிகளுடன் சில வேளைகளில் சண்டை போடுவதும் உண்டு. அவற்றிடம் கடி வாங்கி வைத்தியம் பெற்றதுமுண்டு. பதுங்கு குழிக்குள்ளே சிறு மாடம் அமைத்து நெருப்புப் பெட்டியையும் கடவுள் படங்களையும் வைத்து கடவுளிடம் என் உயிரை காக்கும் படி மன்றாடப் பழகிக்கொண்டேன்.

பழுதடைந்த துவிச்சக்கர வண்டியை ஓடவும் பழகிக்கொண்டேன். கற்களினாலும் மணலினாலும் அமையப் பெற்ற வீதிகளில் பாதையமைத்து ஓடும் வழியைக் கற்றேன். கிடைத்ததை உச்சப்பயன்பாட்டில் பயன்படுத்தும் திறனை வளர்த்துக் கொண்டேன். மழைகாலங்களில் நிரம்பியிருக்கும் வெள்ளத்திற்குள் செல்லாமல் செல்லலாம் என்ற என்னுடைய கணிப்புத்திறன் துவிச்சக்கர வண்டிப் பயணங்களில் பிழையாகிப் போனதும் உண்டு. வாகனங்களில் சீரான பராமரிப்பின்மையால் எழும் உராய்வு ஒலியின் வித்தியாசத்தை வைத்துக் கொண்டே இன்னார் எங்கட வீட்டு ஒழுங்கையால் செல்கிறார் என சரியாகச் சொல்லவும் தெரிந்து கொண்டேன்.

மண்ணெண்ணைக் குப்பி விளக்கில் படிக்கவும் கண்ணயர்ந்து தூங்கும்போது அது என் மேல் விழுந்து தீப்பிடிக்காமல் இருப்பதற்காக உடலை வருத்தி ஆடாமல் அசையாமல் படுக்கவும் பழகிக் கொண்டேன். குப்பி விளக்கில் மண்ணெண்ணையை மிச்சம் பிடிக்கும் உத்திகளையும் அதனால் எம் பிரதேசங்களில் தோன்றிய ‘புதிய தொழில்நுட்பங்களையும்’ இலகுவாக தெரிந்து கொண்டேன். மண்ணெண்ணையில் ஓடும் மோட்டார் வாகனங்களையும், சிறு துளி பெற்றோல் விட்டு சிறு குழாய் ஒன்றினூடு ஊதி, மனிதர்களால் தள்ளி ஆரம்பிக்கும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டேன். அவை அப்படித்தான் ஓடும் எனத் தவறாக எண்ணியும் கொண்டேன்.

அதிகாலை வேளையில் நித்திரை விட்டெழும்பி ஓடிச் சென்று அரை இறாத்தல் பாணுக்காக மணிக்கணக்கில் வரிசையில் தவம் கிடக்கவும் பழகிக்கொண்டேன். அதனாலோ என்னவோ இன்று எங்கும் வரிசை எதிலும் வரிசை.அனைத்திலும் வரிசையாய் நின்றாலும் வெற்றி கிடைப்பதென்பது மிகவும் அரிது. இன்று ஊருக்கு போவதற்கு விமானம் பதிவு செய்வதற்கு (நான் இலங்கையில்தான் இருக்கிறேன், இலங்கையில்தான் என் ஊரும் இருக்கிறது) பெரிய வரிசை. வாசலில் நிற்பவனிடம் வாங்கும் பேச்சுக்கள்... எத்தனையோ நாட்களில் ஏமாற்றம்... எல்லாமே பிறந்ததிலிருந்து பழகிப்போன விடயங்கள். இது எனக்கு மட்டுமே சபிக்கப்பட்டதொன்றல்ல. என் இனத்துக்கே சபிக்கப்பட்டது.

ஆரம்பப் பள்ளி சென்ற காலங்களில் பாடப்புத்தகத்தில் படிப்பித்தது நினைவில் இல்லை. ஆனால் வெடிச்சத்தம் எங்க கேட்டாலும் காதைப் பொத்திக் கொண்டு குப்புறப் படு என்று விளக்கத்துடன் சொல்லித்தந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. வானில் இரைச்சல் கேட்டால் போதும் பரீட்சை மண்டபமாக இருந்தாலும் எழுந்தோடிப் போய் பாடசாலைகளில் வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் தஞ்சமடைவோம். கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்கள் அழுவார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தேடி பாடசாலைக்கு வருவார்கள். அதிபர்களும் இத்தகைய சூழ்நிலைகளில் இடை நடுவில் மாணவர்கள் பாடசாலையை விட்டு வீடு செல்வதைத் தடுப்பதில்லை, நாகர்கோவில் பாடசாலை அனுபவத்தினால் போலும்.

அறியும் பருவம் வந்ததும் எனக்கு பதுங்கு குழிக்குள் பதுங்குவதற்கு பயம். என்னுடைய கெட்ட காலத்துக்கெண்டு குண்டு அதிர்வில பதுங்கு குழியை மூடப் பயன்படுத்திய தென்னங்குத்தியோ பனங்குத்தியோ எனக்கு மேல் விழுந்து விட்டால் அல்லது மண் தூர்ந்து பதுங்கு குழிக்குள்ளேயே என் மூச்சு அடங்கி விட்டால்... அதனால் பதுங்கு குழிக்குள் எனக்கு இறங்குவதற்கு பயம்.

அந்த பயமும் எனக்கு கன காலம் நீடிக்கவில்லை. எனது வீட்டுக்கு மிக அருகில் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் பதுங்கு குழி மீதிருந்த எல்லாப் பயமும் போய்விட்டது. முதலாவதுடன் முடிந்து விட்டது இரண்டாவதுடன் முடிந்து விட்டது என்று எண்ணிய நான் மூன்றாவது குண்டு விழுந்ததுதான் தாமதம் குண்டு வீச்சின் அகோரம் தாங்காது பதுங்கு குழியில் தஞ்சமடைந்தேன். வான்தாக்குதல் முடிந்து நீண்ட நேரமாகியும் பதுங்கியேயிருந்தேன். அந்த வான் தாக்குதலை இன்னும் நினைவில் வைத்திருக்க இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அந்த ஏழு குண்டு வான் தாக்குதலுக்கு இலக்காகியதோ ஏதுமறியாமல் நின்று கொண்டிருந்த ஒரு புளிய மரம். பாவம் அதுவும் தமிழர் தேசத்தில் பிறந்ததால் வேதனைகளை அனுபத்தது. வட்டிழந்த பனைகளும் தலையிழந்த தென்னைகளும் அந்தக் கொடுமைகளின் சாட்சியாக இன்றும் நிற்கின்றன.

-----மிகுதி அடுத்த பதிவில் தொடரும்...

பிறந்தது முதலாய்...(2)

நெருங்கிய உறவினர் ஒருவர் நாட்டை மீட்டெடுக்க புறப்பட்ட வேகத்திலேயே அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்க வேண்டிய நிலை. கணிதம் போதித்த என் இன்னுமொரு உறவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அறியாது வழமைபோல பாடசாலை சென்றார். செல்லும் வழியில் சன்னங்கள் அவரின் உடல் துளைக்க நடு வீதியில் துடி துடித்தார். யாருமே உதவவில்லை. வீட்டை விட்டு வெளி வரப் பயந்ததால் அனைவரும் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கொள்ள, அவரின் உயிர் பிரிந்தது. அந்தச் சின்ன வயசிலேயே எனக்கு ஆயுதங்களைக் காட்டித் தொட்டுப் பார்க்கத் தந்த பக்கத்து வீட்டு அண்ணா மூக்கில் பஞ்சடைந்து படுத்திருப்பதைப் பார்த்து அழுதேன். மரண வீடுகளில் ஓலமிட்டு அழும்குரல்களின் வேதனைகளை, உடலை உறைய வைக்கும், உயிரைப் பிழிந்தெடுக்கும், உணர்வை கொதிக்க வைக்கும் நிகழ்வுகளை அன்றே உணரத்தொடங்கினேன்.

ஊரவர், உறவுகள் கூடி ஒப்பாரி வைத்தாலும் மாண்டவர் மீளார் என விளங்கிக் கொண்டேன். உயிரின் மதிப்பை உணராத தேசத்தில், மனிதம் என்பதன் வாசனையே இல்லாத, மரணம் மலிந்த பூமியில் நான் பிறந்திருப்பதைப் புரிந்து கொண்டேன். அன்றிலிருந்து பேய் பிசாசுகளின் மீதான பயத்தை தூக்கியெறிந்தேன்.

ஊர் விட்டு ஊர் தாண்டி என் உயிரை காக்க ஓடவும் பழகிக் கொண்டேன். கையில் ஒரு பொதியுடன் பெயர் அறியாத் தேசம் நோக்கி தொடுவானம் தொடும் வரை நடக்கவும் பழகிக்கொண்டேன். வெறுமையை தெரிந்து கொண்டேன்.

நள்ளிரவு வேளை எம் தாய்த் தேசம் உறக்கத்திலிருந்த வேளை இடம்பெயர்ந்தார்கள். ஒருவரா இருவரா பட்டணத்திலிருந்த அனைவருமே கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு எங்கோ கால் போன போக்கில் நடந்தார்கள். குடும்பத்து அங்கத்தவர்களை எண்ணிப்பார்த்துக் கொண்டுதான் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். போகப் போக எண்ணிக்கை குறையத்தொடங்கியது. குடும்பத்தினரை தவற விட்டுக் கொண்டே நடந்தார்கள். வழி நெடுகிலும் தவறவிட்ட தம் உறவுகளை பெயர் சொல்லிக் கூவும் குடும்பத் தலைவர்கள் தான் அதிகம். எம்மனைவரின் நெஞ்சங்களும் ஊமையாய் அழுது கொண்டு நடக்கும்போது, வானமும் தன் பங்குக்கு கொட்டித் தீர்த்தது. குறுகிய ஒற்றையடிப் பாலத்தைக் கடப்பதற்கு அத்தனை பேரும் பட்ட பாடு சொல்ல முடியாதது. குழந்தைகளின் அழுகுரல்களும் வயது முதிர்ந்தவர்களின் இயலாமையின் முனகல்களும் எதிரொலித்த வண்ணமே இருந்தது.

எம்மினத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமே(?) இடப்பெயர்வு. இன்று வரை இடப்பெயர்வு நிற்கவுமில்லை. படும் துயரங்களும் ஓயவில்லை. இத்தனை இடப்பெயர்வுகளை சந்தித்தவன் உலகிலேயே ஈழத்தமிழன் தான் என்றால் மறுக்க முடியாது என நினைக்கிறேன்.

படை எடுத்து வந்தவர்கள் சும்மாவா வந்தார்கள். அவர்கள் வந்துதான் என் வீட்டில் மின்சாரம் எரிந்தது. சந்தோசப்பட்டேன். கூடவே எமக்கென விஷேட ஒளிபரப்பும் நிகழ்ந்தது. அதில் நள்ளிரவை அண்மித்த நேரங்களில் ஆங்கிலப் படங்களுக்கும் குறைவேயில்லை. ‘சாமிப்பட’ இறுவட்டுக்களின் அறிமுகமும் கூடவே அவற்றை களவாக பார்வையிடும் இளசுகளுக்கும் குறைவேயில்லை. எங்களை அறியாமலே ஆசை காட்டி எங்களின் கல்வி மீதான நாட்டத்தை ஒழிக்கும் செயற்பாடுகளை நாங்கள் உணர நீண்ட காலம் பிடித்தது. தற்போது இறுதிப் பதின்ம வயதுகளிலிருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளவா போகிறார்கள்? எல்லாமே சுடலை ஞானம்தான்.

சமாதனம் என்று சொல்லி என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு வன்னி மயிலின் அழகு பார்க்கப் புறப்பட்டேன். இயற்கையின் எழில் நிறைந்த வேளாண்மை விளைவிக்கும் வயல் வெளியினூடு பயணிப்பதில் ஒரு சந்தோசம். முடிவில்லா வெளியில் தனிமையில் நின்று இயற்கையை வியப்பதில் கிடைப்பது இன்னுமொரு சந்தோசம். அப்பாவியான கள்ளங்கபடமில்லா, தலைவனைத் தெய்வமாகக் கொண்ட குடும்பங்களுடன் அளவளாவுவதில் இன்னுமொரு சந்தோசம். இப்படியும் என் தேசத்தில் இருக்கிறது என எனக்குக் காட்டியது சமாதான காலம். எம்மவர்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என்பதைக் கட்டியம் கூறியது அழிவடைந்து விட்டதாக அனைவராலும் ஏளனம் செய்யப்பட்ட கிளிநொச்சி. அது நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்த வேகம், அனைத்து கட்டுமானங்களுடனும் எந்த ஒரு நாட்டு அரசாங்கமும் வெட்கித்தலை குனியுமளவிற்கு கட்டியெழுப்பபட்ட ஒரு தேசம் இன்று எங்கே போய் விட்டது? உலகமே கண்வைத்து பொறாமை கொண்டதனால்தானே இந்த நிலைமை. அவர்கள் நம்மை ஒரு போதும் முன்னேறவே விடமாட்டார்கள்.

இன்று வன்னிப் பகுதிகளில் நிகழும் மனிதப் பேரவலத்தை கேட்டபோதும் காணொளிகளில் பார்த்தபோதும் ஏதுமே செய்யமுடியா நிலையில் நடைப்பிணமாகவே இருக்கிறேன். ஆகக்குறைந்தது ஒரு எதிர்ப்பையோ எதிர்க்குரலையோ சாத்வீக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையோ வெளிப்படுத்த முடியாத நிலை. காரணம் காணாமல் போதல்களும் கடத்தல்களும் கொலைகளுமே. என்னிடம் போதியளவு என்னை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இருந்த போதும் ஒவ்வொரு சந்தியிலும் நிற்பவர்களைக் கடக்கும்போதும் கடவுளை மன்றாட வேண்டிய நிலை. ‘இன்றைக்கு பிடிக்க வேண்டிய எண்ணிக்கைக்கு ஒரு ஆள் குறையுது நீதான் அகப்பட்டாய். வா வந்து ஒரு நாள் உள்ளுக்குள் இருந்திட்டுப் போ’ என்று எனக்கும் சொல்லும் நிலை எனக்கு வரக்கூடாதுதானே.

உலகமே கை விட்டு நாங்களும் மனிதர்கள்தான் புவி வாழ் உயிரினம்தான் எனக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற இந்த நிலையில் புலம்பெயர் எம்மவர்களின் செயற்பாடுகளும் தமிழக மக்களின் ஆதரவுக் குரல்களுமே சிறிது நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. சேவல் கூவிப் பொழுது விடியாது என்ற இருந்த நிலை இப்போது சற்று மாறத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. எல்லாமே நம்பிக்கைதானே...

‘தக்கன பிழைக்கும்’ என்ற கருத்து இன்று எனக்கு கசக்கிறது. ஏனெனில் தக்கன என்ற வரையறைக்குள் என் இனம் இல்லையென்பதை தற்கால நிகழ்வுகளை வைத்து என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

அதைவிட, என் தாய் மொழியில் அதிகம் பாவிக்கப்பட்டாலும் இன்னும் எனக்கு விளங்காமல் இருக்கும் பதங்கள் என்றால் சுதந்திரம், பயங்கரவாதம், மனிதாபிமான யுத்தம். இச்சொற்கள் உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லையோ அல்லது அவை தற்காலத்தில் பாவிக்கப்படும் சந்தர்ப்பங்களோடு அச்சொற்கள் பற்றி நான் விளங்கிக் கொண்ட கருத்து ஒத்துப்போகவில்லையோ எனக்குத் தெரியவில்லை...

Thursday, April 16, 2009

கணக்கு_02

குளம் ஒன்றிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. உங்களிடம் 11 லீட்டர் குடமும் 5 லீட்டர் குடமும் தரப்பட்டுள்ளது. இவையிரண்டையும் மட்டும் பயன்படுத்தி 9 லீட்டர் தண்ணீரை எவ்வாறு எடுக்கலாம்?

Wednesday, April 15, 2009

தமிழன் என்பவன்

தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. மிகவும் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்ட, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, ஏறக்குறைய எட்டுக் கோடி மக்களால் பேசப்படுகின்ற மொழி தமிழ் மொழி. ஆத்திசூடி, திருக்குறள் முதலான அரிய பல நூல்களை உலகத்தாருக்கு அள்ளிக் கொடுத்ததும் இந்தத் தமிழ் மொழி. தமிழ் மொழியின் சிறப்புகளை தொடர்ந்து விவரிக்காமல் நான் இங்கு பகிர முயற்சிக்கும் விடயம் ‘யார் தமிழன்?’ என்பதாகும்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களின் தாயக நிலப்பரப்புகள் தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளாகும். ஏனைய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இவர்களுடைய வழித்தோன்றல்களாகவே இருக்கிறார்கள். இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் முஸ்லீம்கள் என்று பிரிவுகள் உண்டு என யாவரும் அறிவீர்கள். ஆனால் என்னுடைய கருத்து என்னவெனில் தமிழர் முஸ்லீம் என்ற பிரிவுகள் தவறானவை. இவர்கள் எல்லோருமே தமிழர்கள். ஏனெனில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவருமே தமிழர்கள்.

அப்படியானால் இந்த முஸ்லீம்கள் யார்? அவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இந்துக்கள் என்பது போல கிறீஸ்தவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் கிறீஸ்தவர்கள் எனப்படுவது போல இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர் அல்லது முஸ்லீம்கள் எனப்படுவர். அவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பராகில் அவர்களும் தமிழர்களே. என்னுடைய நண்பர்கள் உட்பட பலர் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.

இந்தியாவில் இலங்கையில் உள்ளது போன்று தமிழ் முஸ்லீம் என்கின்ற பாகுபாடு இல்லை. யாவரும் தமிழர்களே என்ற ஒற்றுமை காணப்படுகிறது. ஆனால் இந்து முஸ்லீம் கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. ‘ஒஸ்கார் தமிழன்’ என்றுதான் ஏ.ஆர். ரஹ்மானைப் பாராட்டுகிறார்களே தவிர ‘ஒஸ்கார் முஸ்லீம்’ என்ற பேச்சுக்கு இடமில்லை. இதே போல கலாநிதி அப்துல் கலாம், கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்று இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆனால் தமிழர்கள் என்ற ஒரு வார்த்தைக்குள் அடங்கிவிடுகின்ற பலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப் படுத்தவே விரும்புகிறார்கள்.

ஆனால் இலங்கையில் அப்படியில்லை. இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் தங்களை முஸ்லீம் என்று வேறொரு இனமாகவே காட்ட முனைகிறார்கள். அதே நேரம் மற்ற மதங்களைப் பின்பற்றுகின்ற தமிழர்கள், முஸ்லீம்களும் தமிழர்களே என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

இந்தப் பாகுபாடுகள் எப்படித் தோற்றம் பெற்றவையாக இருக்கலாம்? எனது கருத்துப்படி பெரும்பாலும் அரசியல் வாதிகளின் அரசியல் நலனுக்காகவே இந்தப் பிரிவு தோற்றம் பெற்றிருக்கலாம் என நம்புகிறேன். அல்லது யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லீம் சமூகத்தவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பிளவு விரிவடைந்ததாகக் கூட இருக்கலாம். எது நடந்திருந்தாலும் எல்லோரும் தமிழர்களே என்பதை யாவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

புகையிரதப் பயணம் ஒன்றின் போது முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கிழக்குப் பகுதியில் தமிழர்கள் (முஸ்லீம் அடங்கலாக) எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதையும் பல கிராமங்களினூடாக (இந்துக்கள் முஸ்லீம்கள் வசித்த) துவிச்சக்கர வண்டியோடி திறந்த வெளியொன்றிலே எல்லோரும் ஒன்று சேர இருந்து சினிமாப் படங்கள் பார்த்ததையும், ஒன்று சேர்ந்து கோவில் நிகழ்வுகளில் பங்குபற்றியதையும் எல்லோருமாகச் சேர்ந்து போட்டியாகப் பிறை பார்ப்பதையும் நினைவு கூர்ந்து அது ஒரு பொற்காலம் என்றார்.

அரசியல்வாதிகளே இன்றைய இந்த நிலைமைக்கு காரணம் என்று சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை. இன்றைய கிழக்கின் நிலை என்னவெனில் முஸ்லிம் கிராமங்களுக்குள் சுதந்திரமாக இந்துக்களோ கிறீஸ்தவர்களோ நுழைய முடியவில்லை. அதுபோல மறுதலையாக முஸ்லீம்கள் மற்றக் கிராமங்களுக்குள் நுழைய முடிவதில்லை.

இன்றைய காலத்தின் தேவை என்னவெனில் தமிழர்களுக்கிடையிலான ஒற்றுமை. அவர்கள் இந்துக்களோ முஸ்லீம்களோ கிறீஸ்தவர்களோ என்பதல்ல. இன்றைய யதார்த்தத்தை சிந்தித்தால் தமிழர்களுக்கிடையிலான பிளவுகளைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஒரு பகுதியினரை இன்னுமொரு பகுதியினருக்கெதிராகத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். எங்களை நாங்களே அடித்துக் கொண்டு பிரிவினையை வளர்த்துக் கொள்வதை ஊக்குவித்து தமது நலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையை இனி வரும் காலங்களில் நிறையவே எதிர்பார்க்கலாம். தமிழர் அனைவரினதும் தாகம் ஒன்றாக இருந்த போதும் இன்றைய அரசியல்வாதிகள் எமக்கிடையே குழப்பங்களை உண்டு பண்ணி திசைதிருப்பி விடுகிறார்கள். அதை சரியாகப் புரிந்து கொள்ளாத, தமிழர்களுக்கிடையிலேயே புரிந்துணர்வு இல்லாத நாங்கள் எங்களை நாங்களே அடித்துக் கொள்கிறோம்.

இதற்கு நாம் மத ரீதியாக வேறு பட்டாலும் தமிழன் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்று சேர வேண்டும். நாம் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. எமக்கிடையிலான முரண்பாடுகள் வளர்க்கப்பட வேண்டியவையல்ல. இதனை முஸ்லீம்கள் மட்டுமல்ல தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிற மதத்தவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். முதலில் எமக்கிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்ப்போம். அதுவே நாளைய சந்ததியினருக்கு நல்லதை விட்டுச் செல்ல வழி வகுக்கும். இல்லையேல் எமக்கிடையே சண்டைகளை வளர்த்துக் கொண்டு பழியையும் பாவத்தையுமே விட்டுச் செல்வோம். சந்தோசத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு நித்தம் நித்தம் பயந்து பயந்து எம்முறவுகளே எம்மை சாகடிப்பார்களோ என்று வாழ்வது முட்டாள்தனம். நேருக்கு நேரே பேசுவதன் மூலமும் விட்டுக் கொடுப்பின் மூலமும் எங்களுக்கிடையிலான கசப்புணர்வைக் களைந்து விட்டு ஒன்று சேர்வதே சரியானதாக இருக்கும். அதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும்.

மணிரத்தினத்தின் பம்பாய் படத்திலே ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வைரமுத்துவின்(?) வரிகளில் சித்ராவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும்போது
மனதோடு மனமிங்கே பகை கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்