Wednesday, April 15, 2009

தமிழன் என்பவன்

தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. மிகவும் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்ட, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, ஏறக்குறைய எட்டுக் கோடி மக்களால் பேசப்படுகின்ற மொழி தமிழ் மொழி. ஆத்திசூடி, திருக்குறள் முதலான அரிய பல நூல்களை உலகத்தாருக்கு அள்ளிக் கொடுத்ததும் இந்தத் தமிழ் மொழி. தமிழ் மொழியின் சிறப்புகளை தொடர்ந்து விவரிக்காமல் நான் இங்கு பகிர முயற்சிக்கும் விடயம் ‘யார் தமிழன்?’ என்பதாகும்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களின் தாயக நிலப்பரப்புகள் தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளாகும். ஏனைய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இவர்களுடைய வழித்தோன்றல்களாகவே இருக்கிறார்கள். இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் முஸ்லீம்கள் என்று பிரிவுகள் உண்டு என யாவரும் அறிவீர்கள். ஆனால் என்னுடைய கருத்து என்னவெனில் தமிழர் முஸ்லீம் என்ற பிரிவுகள் தவறானவை. இவர்கள் எல்லோருமே தமிழர்கள். ஏனெனில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவருமே தமிழர்கள்.

அப்படியானால் இந்த முஸ்லீம்கள் யார்? அவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இந்துக்கள் என்பது போல கிறீஸ்தவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் கிறீஸ்தவர்கள் எனப்படுவது போல இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர் அல்லது முஸ்லீம்கள் எனப்படுவர். அவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பராகில் அவர்களும் தமிழர்களே. என்னுடைய நண்பர்கள் உட்பட பலர் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.

இந்தியாவில் இலங்கையில் உள்ளது போன்று தமிழ் முஸ்லீம் என்கின்ற பாகுபாடு இல்லை. யாவரும் தமிழர்களே என்ற ஒற்றுமை காணப்படுகிறது. ஆனால் இந்து முஸ்லீம் கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. ‘ஒஸ்கார் தமிழன்’ என்றுதான் ஏ.ஆர். ரஹ்மானைப் பாராட்டுகிறார்களே தவிர ‘ஒஸ்கார் முஸ்லீம்’ என்ற பேச்சுக்கு இடமில்லை. இதே போல கலாநிதி அப்துல் கலாம், கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்று இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆனால் தமிழர்கள் என்ற ஒரு வார்த்தைக்குள் அடங்கிவிடுகின்ற பலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப் படுத்தவே விரும்புகிறார்கள்.

ஆனால் இலங்கையில் அப்படியில்லை. இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் தங்களை முஸ்லீம் என்று வேறொரு இனமாகவே காட்ட முனைகிறார்கள். அதே நேரம் மற்ற மதங்களைப் பின்பற்றுகின்ற தமிழர்கள், முஸ்லீம்களும் தமிழர்களே என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

இந்தப் பாகுபாடுகள் எப்படித் தோற்றம் பெற்றவையாக இருக்கலாம்? எனது கருத்துப்படி பெரும்பாலும் அரசியல் வாதிகளின் அரசியல் நலனுக்காகவே இந்தப் பிரிவு தோற்றம் பெற்றிருக்கலாம் என நம்புகிறேன். அல்லது யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லீம் சமூகத்தவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பிளவு விரிவடைந்ததாகக் கூட இருக்கலாம். எது நடந்திருந்தாலும் எல்லோரும் தமிழர்களே என்பதை யாவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

புகையிரதப் பயணம் ஒன்றின் போது முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கிழக்குப் பகுதியில் தமிழர்கள் (முஸ்லீம் அடங்கலாக) எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதையும் பல கிராமங்களினூடாக (இந்துக்கள் முஸ்லீம்கள் வசித்த) துவிச்சக்கர வண்டியோடி திறந்த வெளியொன்றிலே எல்லோரும் ஒன்று சேர இருந்து சினிமாப் படங்கள் பார்த்ததையும், ஒன்று சேர்ந்து கோவில் நிகழ்வுகளில் பங்குபற்றியதையும் எல்லோருமாகச் சேர்ந்து போட்டியாகப் பிறை பார்ப்பதையும் நினைவு கூர்ந்து அது ஒரு பொற்காலம் என்றார்.

அரசியல்வாதிகளே இன்றைய இந்த நிலைமைக்கு காரணம் என்று சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை. இன்றைய கிழக்கின் நிலை என்னவெனில் முஸ்லிம் கிராமங்களுக்குள் சுதந்திரமாக இந்துக்களோ கிறீஸ்தவர்களோ நுழைய முடியவில்லை. அதுபோல மறுதலையாக முஸ்லீம்கள் மற்றக் கிராமங்களுக்குள் நுழைய முடிவதில்லை.

இன்றைய காலத்தின் தேவை என்னவெனில் தமிழர்களுக்கிடையிலான ஒற்றுமை. அவர்கள் இந்துக்களோ முஸ்லீம்களோ கிறீஸ்தவர்களோ என்பதல்ல. இன்றைய யதார்த்தத்தை சிந்தித்தால் தமிழர்களுக்கிடையிலான பிளவுகளைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஒரு பகுதியினரை இன்னுமொரு பகுதியினருக்கெதிராகத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். எங்களை நாங்களே அடித்துக் கொண்டு பிரிவினையை வளர்த்துக் கொள்வதை ஊக்குவித்து தமது நலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையை இனி வரும் காலங்களில் நிறையவே எதிர்பார்க்கலாம். தமிழர் அனைவரினதும் தாகம் ஒன்றாக இருந்த போதும் இன்றைய அரசியல்வாதிகள் எமக்கிடையே குழப்பங்களை உண்டு பண்ணி திசைதிருப்பி விடுகிறார்கள். அதை சரியாகப் புரிந்து கொள்ளாத, தமிழர்களுக்கிடையிலேயே புரிந்துணர்வு இல்லாத நாங்கள் எங்களை நாங்களே அடித்துக் கொள்கிறோம்.

இதற்கு நாம் மத ரீதியாக வேறு பட்டாலும் தமிழன் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்று சேர வேண்டும். நாம் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. எமக்கிடையிலான முரண்பாடுகள் வளர்க்கப்பட வேண்டியவையல்ல. இதனை முஸ்லீம்கள் மட்டுமல்ல தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிற மதத்தவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். முதலில் எமக்கிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்ப்போம். அதுவே நாளைய சந்ததியினருக்கு நல்லதை விட்டுச் செல்ல வழி வகுக்கும். இல்லையேல் எமக்கிடையே சண்டைகளை வளர்த்துக் கொண்டு பழியையும் பாவத்தையுமே விட்டுச் செல்வோம். சந்தோசத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு நித்தம் நித்தம் பயந்து பயந்து எம்முறவுகளே எம்மை சாகடிப்பார்களோ என்று வாழ்வது முட்டாள்தனம். நேருக்கு நேரே பேசுவதன் மூலமும் விட்டுக் கொடுப்பின் மூலமும் எங்களுக்கிடையிலான கசப்புணர்வைக் களைந்து விட்டு ஒன்று சேர்வதே சரியானதாக இருக்கும். அதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும்.

மணிரத்தினத்தின் பம்பாய் படத்திலே ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வைரமுத்துவின்(?) வரிகளில் சித்ராவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும்போது
மனதோடு மனமிங்கே பகை கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

4 comments :

  1. அண்ணா உங்கள் கருத்தை 100% நான் ஆதரிக்கிறேன்...
    ஆனால் எமது நாட்டை பொறுத்தவரை பெரும்பாலான முஸ்லிம்கள் தமது மொழியான தமிழைவிட சிங்கள மொழயை பேசவே நாட்டம் கொள்கின்றனர்.. அது ஏன்??
    வைரமுத்துவின் பாடல் வரிகள்தான் அது!!!!

    ReplyDelete
  2. கார்த்தி சொல்வதும் உண்மை. இன்று முஸ்லீம்களில் ஒரு பகுதியினர் சிங்கள மொழியில் பேசவே நாட்டம் கொள்கின்றனர். தாம் சிங்களவர் எனக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர். தமிழ் பேசும் இதர மதத்தவர்களுடனான விரோதப் போக்கோ அல்லது நாட்டில் நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகளை சமாளிப்பதற்காகக் கூட இருக்கலாம்.
    நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நீர்கொழும்பு, புத்தளம் பகுதிகளில் வசிக்கும் ‘பெர்னாண்டோ’ என்ற பரம்பரைப் பெயரைக் கொண்ட தமிழ் தெரியாத தமிழர் பரம்பரை போன்று பல தமிழ் பரம்பரைகள் இருக்கிறன.
    அதுபோல மலையகப் பகுதிகளில் தமிழை மறந்து சிங்களத்திலேயே உரையாடும் தமிழர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
    இந்த நிலை முஸ்லீம் அல்லாத தமிழர்களிடையேயும் இருக்கும்போது முஸ்லீம் சமூகத்தை மட்டும் குறை சொல்ல முடியாது.
    இவை தடுக்கப்பட்டு தமிழர்கள் தாய் மொழி தமிழிலேயே உரையாடும், கல்வி கற்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதுவே தமிழன் என்றொரு இனம் இலங்கையில் எதிர்காலத்திலும் வாழ்வதற்கு வழி கோலும்.

    ReplyDelete
  3. ஆம் அண்ணா என்றாலும் கூடுதலாக அது முஸ்லீம்களிடையேதான் இருக்கு அதான் சொன்னேன்
    எங்கட பெர்ணான்டோ புள்ளையும் தமிழ்தான் லக்ஸ்மன் கதிர்காமர்....?????

    ReplyDelete
  4. கண்ணுங்களா... முதல்ல தமிழ் பேசுற முஸ்லிம்களை தமிழன் என்று ஏற்க முன்னம், நமக்குள்ளேயே வேரோடிப் போயிருக்கும் சாதீய அடையாளங்களைத் துறந்து தமிழர்கள் ஒன்றாவோம்.

    ReplyDelete