Sunday, September 06, 2009

கால்பந்து விளையாடுவம்

வீரபத்திரர் கோவில் காணிக்குள்ள விளையாடுறதைப் பற்றித்தான் சொல்லப் போறன். இண்டைக்கு இதைச் சொல்லுறதில ஒரு விடயம் என்னண்டா அந்த வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேகம் இண்டைக்கு நடக்குது. வீரபத்திரர் கோவிலுக்குப் பக்கத்தில ஒரு திறந்த காணி இருக்குது. அந்தக் காணிக்குள்ளாலதான் கோவிலுக்கு போவதற்கான பாதைகளில் ஒன்றும் போகுது. அந்தத் திறந்த வெளிக்காணிக்குள்ள தான் நாங்கள் கால்பந்து விளையாடுவம். சிலவேளைகளில் துடுப்பாட்டமும் பேணியும் பந்தும் விளையாடியிருக்கிறம்.  
அந்தக் காணிக்கு கிட்டிய தூரத்தில் குடிமனைகள் இல்லாததால் சத்தம் போட்டாலும் பிரச்சினையில்லை. ஆனால் பந்து பக்கத்து காணிக்குள்ளையோ கோவிலுக்குள்ளையோ போனால்தான் பிரச்சினை. பக்கத்துக் காணிக்குள்ள பெரிய புளியமரங்கள் இருக்கு. அதுகள்ளேருந்து விழும் புளியம்பழங்களைப் பொறுக்கி காணி உரிமையாளர் விக்கிறதால காணிக்குப் பலத்த பாதுகாப்புடன் கூடிய வேலி. அதனால பந்து அதுக்குள்ள போனா எடுக்கிறது வலு கஷ்டம். அதைவிட அதுக்குள்ள பந்தெடுக்கப் போகேக்குள்ள காணிக்காரர் நிண்டா துலைஞ்சுது. கத்திச் சத்தம் போடுவார். அவ்ற்ற கையில பிடிபட்டா போச்சு. அவரட்ட மட்டுமில்லை வீட்டிலையும் தோலுரிப்புத்தான். இது போக, கோவிலுக்குள்ள பந்து போனால் வாசற்கதவு பூட்டியிருக்கிறதால மதிலேறி விழுந்துதான் போக வேணும். வீரபத்திரர் எல்லோ, சும்மாவோ? ஆர் மதிலேறி விழுறது எண்டதில பிரச்சினை.
அதை விட வீரபத்திரர் கோவிலின் நிர்வாகி வீரகத்தி ஐயா எண்டு ஒருத்தர் இருந்தார் (தற்சமயம் எம்முடன் இல்லை).அவர் அந்தக்காலத்தில நல்லா வயசு போய் பொல்லுப் பிடிச்சுக் கொண்டுதான் நடப்பார். அவருக்கு நாங்கள் அந்தக் காணிக்குள்ள விளையாடுவது பிடிக்காது. ஏனெண்டா அந்தக் காணிக்குள்ள போட்டிருக்கிற பனம்பாத்தி முதல் வேலிக் கதியால்கள் வரை அனைத்தையும் உழக்கிக் கொண்டுதான் நாங்கள் விளையாடுவம். அதை விட பந்தடிச்சு கோவில் ஓடுகள் உடைப்பது முதல் போட்டிக்கு ஆர் கனதூரம் கல்லெறியிறதெண்டு தொடங்கி குறிதவறி ஓட்டுக்கு மேல விழுந்து ஓடு உடையிறது வரை அனைத்தையும் கன கச்சிதமாக நாங்கள் செய்து முடிப்பம். அதனால அவருக்கு நாங்கள் விளையாடுறது பிடிக்கிறதில்லை. அவற்ற பக்கமும் நியாயம்தான். எத்தினை தரம் எத்தினை ஓடெண்டு மாத்துறது. ஆனால் அவர் தான் எங்களுக்கு பெரிய வில்லனே. 
நாங்கள் வழமையா அஞ்சரைக்கு தனியார் கலாசாலை முடிஞ்சுதான் விளையாடப் போவம். அவர் கிட்டத்தட்ட ஆறரையளவில கோவிலுக்கு விளக்கேத்த அந்தப் பாதையால வருவார். அவர் தூரத்தில வரேக்கயே எங்களைக் கண்டாரெண்டா பொல்லைத் தூக்கிக் காட்டிக் கொண்டு பேசிக் கொண்டு வருவார். அவர் வர்ரதுக்குள்ள காணி காலியாயிடும். அவரவர் தங்கட கொப்பிகளையும் பைகளையும் தூக்கிக் கொண்டு சைக்கிளையும் (துவிச்சக்கர வண்டி) எடுத்துக் கொண்டு ஓடுவம். அவரின்ர கண்ணில என்னையெல்லாம் அடையாளம் தெரிஞ்சா அந்தோ கதிதான். ஆக்கள் மூலமா தகவல் சொல்லியெண்டாலும் எங்கட வீட்டுக்கு கதை வந்திடும். அவ்வளவுதான், பிறகு நடக்கும் அர்ச்சனைகளைப் பற்றிச் சொல்ல வரேல்ல. ஒவ்வொரு திக்குத் திக்காக ஓடுற நாங்கள் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் ஒளிச்சு நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம். மேலும் விளையாடக்கூடிய சாதக பாதக நிலைகளை ஆராஞ்சு அவர் போன பிறகு மீண்டும் விளையாடுவம். விளையாட்டில அந்தளவுக்கு ஊறிப்போய் விடுவம். அதை விட இப்பிடியான சிக்கல்களை எதிர்கொண்டு விளையாடுறதில ஒரு ருசியுருக்குப் பாருங்கோ. அனுபவிக்கக் குடுத்து வைக்கோணும். 

2 comments :

  1. இப்பவும் பொடியள் அங்க விளையாடுறாங்களா பால்குடி??? (விளையாடிறதுக்கு பொடியள் இருக்கிறாங்களா)

    ReplyDelete
  2. கிருத்திகனின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இப்பவும் பொடியள் விளையாடுறாங்கள். ஆனால் எங்கட காலத்தில இருந்ததைப் போல ஆள் எண்ணிக்கையில்லை. எம் வயதையொத்தவர்கள் தான் அங்கு மிக மிகக் குறைவு.

    ReplyDelete