Saturday, August 21, 2010

இணையத்தைக் கண்டு பிடித்தவர் யார்?

உறவினர் வீடொண்டுக்குப் போனனான். அவயின்ர குடும்பத்தில நாளைக்கு அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதப் போற தங்கச்சி ஒருத்தி இருக்கிறாள். நான் போய் உள்ளட்டதும் அவளின்ர அம்மா சொன்னா ‘ஆ... “மெத்த” படிச்ச அண்ணா ஒராள் வாறார், உனக்குத் தெரியாதத கேளு பிள்ளை...’


பிள்ளை கேட்டதில முதல் கேள்வி இணையத்தை கண்டு பிடிச்சவர் யார்? நான் முழுசினன். பிள்ளை கேள்விப் பத்திரத்தைக் கொண்டு வந்து காட்டி இதில நாலு விடையிருக்கு. அதிலையெண்டாலும் பாத்து சரியான விடையைச் சொல்லுக்கோ... அதில ஒண்டு கடை ஒண்டின்ர பெயர் இருந்திச்சு. ஒரு வேளை அந்தப் பெயரில ஒருத்தர் இருந்த படியாத்தான் கடைக்கு அவற்ற பெயரை வச்சாங்களோ எண்டு நான் யோசிச்சன். கேட்ட கேள்விக்கு நேரடியாகவும் பதில் சொல்லத் தெரியேல்ல. நாலு விடைக்குள்ளேந்தும் ஆளைக் கண்டு பிடிக்கவும் முடியேல்ல. இனியென்ன செய்யுறது வெக்கத்தை விட்டுட்டுச் சொன்னன் நான் இணையத்தில பாத்து சொல்லுறன் எண்டு. தாய் கேட்டா 'தம்பி நீ தானே விடிஞ்சா பொழுது பட்டா இணையத்தோட இருக்கிறனி உனக்கும் உது தெரியாதோ?'


தங்கச்சி நிறையக் கேள்விகள் கேட்டாள். என்னால பலதுக்குப் பதில் சொல்ல முடியேல்ல. உதாரணத்துக்கு இன்னுமொரு கேள்வி. ஒரு வருட நாட்காட்டியில் இலங்கை அரசாங்க விடுமுறைகள் எத்தனை நாட்கள்? என்னால முடியேல்ல. நான் சொன்னன் 'பிள்ளை ஒண்டையும் யோசியாத, உதையெல்லாம் யோசிச்சுக் குளம்பாத, நாளைக்குப் போய் தெரிஞ்சத செய்து போட்டு வா...' தாய் சொன்னா 'தம்பி அதெப்பிடி சும்மா விடேலும். நல்ல புள்ளியெடுக்கேல்ல எண்டா கொழும்பில உயர் பள்ளிக்கூடங்களுக்கு ஆறாம் ஆண்டு அனுமதியில்லாமல் போடும். பிறகு எந்தப் பள்ளிக்கூடத்தில அனுமதியெடுக்கிறது. பிறகு என்ர பிள்ளை கண்ட கண்ட காவாலிப் பிள்ளையளோடதானே படிக்க வேண்டி வரும். நீங்கள் மட்டும் நல்ல பள்ளிக்கூடங்களில படிச்சு முன்னுக்கு வந்திடுங்கோடா...' உதுக்கு நான் என்னத்த சொல்லுறது. நாளைக்கு சோதினையெழுதப் போற பிள்ளைக்கு முன்னால விவாதிக்க விரும்பேல்ல.


எனக்குத் தெரிஞ்சு நான் படிச்ச கல்லூரியில நுழைவுத்தேர்வு தனியாக நடத்துவாங்கள்.  அதில் சித்தியெய்தினாலே கல்லூரி அனுமதி கிடைச்சிடும். அரசாங்கம் புலமைப் பரிசில் வழங்குறதுக்காக நடத்துற சோதினையை தங்கட சோம்பேறித் தனத்துக்காக தங்கட பள்ளிக்கூடத்துக்கான நுழைவுத்தேர்வா கருதுற பள்ளிக்கூடங்கள் இருக்கும் வரை, அதையே தங்களுக்கான பெரிய கெளரவமாக கருதுற பெற்றோர் இருக்கும் வரை பிள்ளை சித்திரவதை செய்யப்படுவது தடுக்கப்பட முடியாது.


எல்லாத்தையும் விட, தங்கச்சி கேட்ட கேள்விகளைப் பாக்கேக்க கடைசியா எனக்கு ஒரு பெரிய உண்மை விளங்கிச்சு. நாளைக்குச் சோதினையெழுதப் போற பிள்ளைகளோட நான் சோதினையெழுதினால் நான் பரீட்சையில சித்தியடைவது சந்தேகமே; இன்னும் சொல்லப் போனால் கொழும்பிலுள்ள உயர் பாடசாலை எண்டு சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களில் எனக்கு ஆறாம் ஆண்டுக்கான அனுமதி கிடைக்காது.

6 comments :

  1. எதுக்கு ஆறாம் ஆண்டு அனுமதி மட்டும் போறியள்? முதலாம் ஆண்டு அனுமதிக்கு கொழும்பில இருக்கிறவை படுற பாடு தெரியுமே? எனக்கெண்டால் நான் முதலாம் ஆண்டு மட்டுமே மூண்று பள்ளுக்கூடத்தில படிச்சனான், அனுமதியில ஒரு பிரச்சினையும் இல்லாமல் :)

    ReplyDelete
  2. எங்கள் பாடசாலை அனுமதிப் பரீட்சை புலமைப்பரிசிலை விடக் கடினமானது. மூஞ்சிப்புத்தகத்தில் ஓரு விடியோக் கிளிப் உலாவுகின்றது பார்க்கவும் எங்கள் மக்கள் திருந்த இடமில்லை. பக்கத்துவீட்டுக்காரன் என்ன செய்கின்றானோ அதைப் பார்த்தும் செய்பவர்கள்.

    ReplyDelete
  3. :)) ஓவர் தன்னடக்கமய்யா உமக்கு

    வந்தி அந்த வீடியோ லிங்கை எங்களுக்கும் அனுப்பிறது

    ReplyDelete
  4. ///நான் சோதினையெழுதினால் நான் பரீட்சையில சித்தியடைவது சந்தேகமே; இன்னும் சொல்லப் போனால் கொழும்பிலுள்ள உயர் பாடசாலை எண்டு சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களில் எனக்கு ஆறாம் ஆண்டுக்கான அனுமதி கிடைக்காது.///உனக்கு மட்டும் இல்லை கன பேருக்கு கிடைக்காது.

    ReplyDelete
  5. உண்மைதான் பால்குடி..ஆனால் பெரிய பள்ளிக்குடம் எவ்வளவு கஸ்ரப்பட்டுக் கிடைச்சலும் அதை எத்தினை பேர் பிரயோசப் படுத்தினம் எண்டது அடுத்த கேள்வி.வெளியிலை சந்தர்ப்பங் கிடைக்காமல் கனபேர் காத்திருக்கேக்கை

    ReplyDelete
  6. சுபாங்கன், வந்தியண்ணா, கீத், கருணையூரான் மற்றும் வடலியூரான் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    சுபாங்கன், சொல்லுறது சரிதான், ஆனால் முதலாம் ஆண்டு அனுமதிக்கு அம்மா அப்பாட்ட கிடக்குற காசும் அவயின்ர செல்வாக்கும் தான் செல்வாக்கு செலுத்துது. பிள்ளையில கை வைக்கிறேல்ல.

    வந்தியண்ணா, இணைப்பைத் தாங்கோ... எப்பிடி சோதினை வச்சாலும் எங்கட கல்லூரிக்கு 140 பேரை எடுத்தே ஆகோணுமெல்லோ...

    கீத், இப்பிடிக் கேள்வி வந்தா என்ன செய்யுறதெண்டுதான் கேக்குறன்...

    வடலியூரான், நியாயமான கேள்விதான்...

    ReplyDelete