Wednesday, April 01, 2009

தாய் மடி...

என்னைத் தாலாட்ட மட்டும்

தாய்மடி என்னைத் தாங்கவில்லை...

நிலாக்காட்டி சோறூட்டவும்

பல நீதிக்கதைகள் சொல்லவும்

உடலழுக்கு நீக்க நீராட்டவும்

துடுக்கடக்கி என்னைச் சீராட்டவும்

பிழை சுட்டி வழி காட்டவும்

திறன் ஊட்டி பாராட்டவும்

தாய்மடி என்னைத் தாங்கியது.


என் கண்ணீரால் நிரம்பியதும்

உண்டான காயங்களையாற்றியதும்

பயம் வரும்போதெல்லாம்

ஓடிப்போய் கட்டியணைப்பதும்

சோகத்தின் போது முகம்

குப்புற விழுந்து அழுவதும்

வீரம் பேசி வம்பளந்து விட்டு

பிரச்சினையின்போது தஞ்சமடைதுவும்

ஓடியாடி விளையாடி குழப்படி செய்வதும்

இந்தத் தாய்மடியில்தான்...


எதுக்கும் அஞ்சாது நான் எதையும் செய்யக்

காரணமும் தாய்மடி என்னைக் காப்பதால்தான்...

என் தாய்மடி தான் தங்க ஓரிடமின்றி தாய்மண்ணுக்கே

சோதனை வரும்போது வேதனையை யாரிடம் சொல்லும்?

வறிய நிலையறியாது வளர்த்த தாயைப் பிரிய மனமின்றி

பிரித்த வலியை எம்மினத்தின் தீராத சாபம் என்பதோ?

தவழ்ந்து விழுந்தெழுந்து நடை பழகி முத்தமிட்ட எம்மண்ணின்

மடியில் நித்திரை கொள்ளத் துடிப்பவர் எண்ணம் பிழையானதோ?

No comments :

Post a Comment