ஒவ்வொருவருக்கும் தங்களின் கருத்துக்களைக் கூறுவதற்கு உரிமையிருக்கிறது. அதற்காக விடயத்துக்குப் பொருத்தமில்லாத கருத்துக்களை கூறுவது நல்லதல்ல. குறித்த ஒரு விடயம் சம்பந்தமான கருத்துக்கள் சந்தர்ப்பம் சூழ்நிலைகளுடன் மனிதாபிமான அடிப்படையிலும் மாற்றமடையக் கூடியவை.
இதுதான் இறுதியானதும் உறுதியானதுமான கருத்து என்று எதையுமே சொல்ல முடியாது. பல பக்கங்களிலிருந்து பல தரப்புகளிடமிருந்து வேறு வேறு கருத்துக்கள் வெளிப்படலாம். ஆனாலும் எல்லாவற்றுக்கும் பொதுவானதும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான கருத்துக்கள் இல்லாமலுமில்லை. அதாவது ஒரு விடயம் சம்பந்தமாக விவாதித்துக் கொண்டு செல்லும்போது சில பொதுவான விடயங்களில் விவாதிப்பவர்களிடையே இணக்கப்பாடு எட்டப்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இணக்கம் காணப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்ற கருத்துக்களை விவாதிப்பவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு அதனைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
ஆனால் இன்றோ பலர் அப்படியில்லை. உதாரணமாக ‘தமிழை வளர்ப்போம்’ என வாய் கிழிய கத்துபவரே அந்நிய மொழியிலேயே தமிழர்களுடன் உரையாடுவார். ஊருக்குத்தானே உபதேசம் உனக்கில்லை என்ற தொனியிலான விடயங்கள் நிச்சயமாகத் தவிர்க்கப் பட வேண்டியவை.
அதை விட மற்றவர்களின் கருத்துக்களை ஏற்கின்ற மனப்பாங்கு எம்மிடம் இல்லவேயில்லை என்றால் கூட மிகையாகாது என்றுதான் தோன்றுகிறது. நான் சொன்னதுதான் சரி என்று ஒற்றைக்காலில் நிற்பவர்கள் பலர். அதிலும் கவனிக்கப் பட வேண்டியது என்னவெனில் தான் கூறியது தவறான கருத்து என்று கூறியவரே உணரும் நிலை வந்தாலும் நிலமையை மழுப்பிச் சமாளிப்பாரே தவிர மற்றவர் கருத்துக்களை மருந்துக்கும் ஏற்கமாட்டார். இந்நிலை நிச்சயமாக தவிர்க்கப் பட வேண்டியது. ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை சிறு வயது முதலே வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது அம்மனப்பாங்கு வளர்க்கப்பட வேண்டும்.
‘கருத்துக்களம்’ என்னும் பகுதியினூடாக நான் கற்ற, அனுபவம் மூலம் பெற்ற, அவதானித்த, நண்பர்களுடன் கலந்துரையாடிய விடயங்களை எழுதலாம் என்றிருக்கிறேன். இந்தப் பகுதியில் நான் எனது கருத்துக்களையே சொல்ல இருக்கிறேன். அவை பெரும்பாலும் எங்கிருந்தோ பெறப்பட்டவையாக இருக்கும். ஆனால் என்னைக் கவர்ந்தவையாகவோ என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகவோ இருப்பதனால் எழுதுகிறேன்.
இங்கு கூறும் கருத்துக்களிலிருந்து நான் ஏதோ விதிவிலக்கானவனென்றோ நான் இவற்றுடன் சம்பந்தப்படாதவன் என்றோ நான் சொல்வதெல்லாம், செய்வதெல்லாம் சரியென்ற தோரணையிலோ நான் எழுத முனையவில்லை. இந்தப் பகுதியின் மூலமாக என்னுடைய எதிர்பார்ப்பு என்னவெனில் இப்பகுதியை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்பதேயாகும். விடயத்துக்குப் பொருத்தமில்லாக் கருத்துக்கள், குறிப்பிட்ட தனி நபரையோ தனிக் குழுவையோ பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பவை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை.
அது மட்டுமில்லாமல் சொல்லப்படும், மற்றவர்களால் பின்னூட்டப்படும் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொண்டால் தயவுசெய்து அதனைப் பின்பற்றி நடக்க முயற்சி செய்யுங்கள். வாசிப்பதோடு நின்று விடாதீர்கள். நிச்சயமாக இதன் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம். வாழ்வை வளமாக்கலாம்.
No comments :
Post a Comment